ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், கொல்லப்பட்ட அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு ஊர்வலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஈரான் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
86 வயதான கமேனி கடந்த சனிக்கிழமை தெஹ்ரான் நகரில் உள்ள அவரது இல்லத்தை குறிவைத்து நடத்தப்பட்ட அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலில் அவரது மனைவி, ஒரு மகன் மற்றும் பல உயர்மட்ட அதிகாரிகளும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
கமேனியின் இறுதிச்சடங்கு மூன்று நாட்கள் நடைபெறவிருந்த நிலையில், அது நேற்று புதன்கிழமை இரவு Grand Mosalla தொழுகை வளாகத்தில் ஆரம்பமாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்க முன்வந்துள்ளதால், தேவையான உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இறுதிச்சடங்கு “மேலும் பொருத்தமான நேரத்திற்கு” ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்லாமிய பிரச்சார ஒருங்கிணைப்பு கவுன்சில் அறிவித்துள்ளது.
தற்போது நிலவி வரும் போர்ச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, கமேனியின் பதவியை நிரப்ப அடுத்த உச்சத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் அந்நாட்டின் நிபுணர் குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கமேனியின் மற்றொரு மகனான 56 வயதான மதகுரு Mojtaba Khamenei அடுத்த தலைவராக தேர்வாக வாய்ப்பு அதிகம் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இறுதிச்சடங்கில் பல கோடி மக்கள் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுவதால், அந்த நிகழ்வை இலக்காகக் கொண்டு அமெரிக்கா அல்லது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.
இதுவரை நடைபெற்ற தாக்குதல்களில் 1,045 இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் அமைப்புகளின் தகவலின்படி, உயிரிழந்தவர்களில் 181 குழந்தைகளும் அடங்குவதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல்களுக்கு பதிலடி அளிக்கும் வகையில், ஈரான் தனது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க இராணுவத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளை நோக்கி தாக்குதல்கள் நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஈரான் உச்சத் தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு ஒத்திவைப்பு appeared first on Vanakkam London.