33
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரான் மீது தொடுத்துள்ள போர் ஒரு மாதத்தை நெருங்கியுள்ள நிலையில், ஒரு முக்கிய ராஜதந்திர நகர்வாகத் தாக்குதல்களைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரானின் மின் உற்பத்தி மற்றும் எரிசக்தி நிலையங்களை அழிக்கும் திட்டத்தை வரும் திங்கள்கிழமை, ஏப்ரல் 6, 2026, இரவு 8 மணி (கிழக்கு நேரம்) வரை நிறுத்தி வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானிய அரசின் வேண்டுகோளை ஏற்றே இந்த முடிவை எடுத்ததாகக் கூறிய டிரம்ப், “அமைதிப் பேச்சுவார்த்தைகள் மிகவும் ஆக்கப்பூர்வமாக நடைபெற்று வருகின்றன; நாங்கள் ஏற்கனவே ராணுவ ரீதியாகப் போரில் வெற்றி பெற்றுவிட்டோம்” எனத் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் 15 அம்ச அமைதித் திட்டத்தை ஈரான் பகிரங்கமாக மறுத்தாலும், திரைக்குப் பின்னால் பாகிஸ்தான் வழியாகத் தகவல்களைப் பரிமாறி வருவதாகக் கூறப்படுகிறது.
போர் நிறுத்தம் ஒருபுறம் இருந்தாலும், ஈரானுக்கு எதிரான ராணுவ அழுத்தத்தை அமெரிக்கா ஒருபோதும் குறைக்கவில்லை.
சுமார் 10,000 கூடுதல் வீரர்களை மேற்காசியாவிற்கு அனுப்பும் திட்டத்தைப் பென்டகன் இறுதி செய்துள்ளது. இதில் காலாட்படை மற்றும் கவச வாகனங்கள் (Armoured Vehicles) இடம்பெறும்.
ஈரானின் 90% கச்சா எண்ணெய் ஏற்றுமதியைக் கையாளும் கார்க் தீவை (Kharg Island) முற்றுகையிட அல்லது கைப்பற்ற அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தி வெளியிட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க ஈரானை நிர்ப்பந்திக்க இது ஒரு இறுதி அஸ்திரமாகப் பயன்படுத்தப்படலாம்.
ஏற்கனவே 5,000 கடற்படை வீரர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான வான்குடை வீரர்கள் (Paratroopers) இப்பிராந்தியத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கிவிட்டனர்.
டிரம்ப்பின் இந்த 10 நாள் போர் நிறுத்த அறிவிப்பு சர்வதேசச் சந்தையில் உடனடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude) விலை அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே 3% வரை வீழ்ச்சியடைந்தது.
25% உலக எரிவாயு விநியோகத்தைத் தடுத்துள்ள ஹார்முஸ் ஜலசந்தி இன்னும் முழுமையாகத் திறக்கப்படாத நிலையில், இந்த இடைவெளி உலக நாடுகளுக்குச் சற்று நிம்மதியை அளித்துள்ளது.