5
ஈரான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இங்கிலாந்து தம்பதியினரின் பாதுகாப்பு குறித்து அவர்களது குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர்.
கிழக்கு சசெக்ஸ் (East Sussex) பகுதியைச் சேர்ந்த லிண்ட்சே மற்றும் கிரெய்க் ஃபோர்மேன் தம்பதியினர், ஈரானின் டெஹ்ரானில் உள்ள ஈவின் (Evin) சிறையில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மோட்டார் சைக்கிள் மூலம் உலகப் பயணம் மேற்கொண்டிருந்தபோது இவர்கள் ஈரானில் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை தம்பதியினர் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். இவர்களுக்கான சிறைத்தண்டனை கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டது.
தொடர்புடைய செய்தி – ஈரான் வழி மோட்டார் சைக்கிளில் சென்ற இங்கிலாந்து தம்பதி கைது: 10 ஆண்டுகள் சிறை!
இந்நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களால் தம்பதியினரின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அவர்களது குடும்பத்தினர் அஞ்சுகின்றனர்.
டெஹ்ரானில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தபோது அவர்கள் சிறையிலேயே இருந்தனர். அவர்களது மகன் ஜோ பென்னட் கூறுகையில், பெற்றோர் தற்போது காயமின்றி இருப்பதை உறுதி செய்துள்ளதாகவும் ஆனால், தங்களைச் சுற்றியுள்ள ஆபத்து குறித்து அவர்கள் மிகவும் அச்சமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இங்கிலாந்து வெளியுறவுச் செயலாளர் யுவெட் கூப்பர், இந்தத் தண்டனை முற்றிலும் அநியாயமானது என்று கண்டனம் தெரிவித்துள்ளார். அவர்களைப் பாதுகாப்பாக மீட்க ஈரான் அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.