ஈரானின் காம் நகரில் உள்ள ஜம்கரன் மசூதியின் உச்சிப் பகுதியில் சிவப்புக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளமை சர்வதேசத்தின் கவனத்தை திருப்பியுள்ளது.
ஈரானின் முக்கியமான மத வழிபாட்டுத் தளமான இந்த மசூதியில் சிவப்பு நிறக் கொடி பறக்கவிடப்பட்டதற்கு ஒரு காரணமும் உண்டென கூறப்படுகிறது.
மசூதியில் ஏற்றப்பட்ட சிவப்புக் கொடியானது கோபம், பழி தீர்க்கும் நோக்கத்தை குறிக்கிறது என்கின்றனர்.
அமெரிக்கா – இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உயர் தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும் ஈரான் முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, பல்வேறு நாடுகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு, ஈரான் மீதான தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளன.
ஈரானின் உயர் தலைவரின் கொலைக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்றும் தாக்குதலுக்கு உரிய தரப்பினர் பதில் சொல்லவேண்டும் என்பதை கோபத்துடன் ஈரான் வலியுறுத்துவதையும் பழிவாங்கத் துடிப்பதையும் வெளிப்படுத்தும் விதமாகவே இந்த சிவப்புக் கொடி மசூதியில் பறக்கவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை (1) ஈரான் உயர் தலைவர் உயிரிழந்த செய்தியை அந்நாட்டு அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அலி காமேனியின் இறப்பை அறிவித்து தமது வெற்றிக்களிப்பை வெளிப்படுத்தினர்.
இவ்வாறான போர்ச்சூழலில் அலி காமேனியின் ஆதரவாளர்களின் கோபத்தையும் பழிவாங்கும் உணர்வையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த சிவப்பு நிறக் கொடி மசூதியின் உச்சியில் பறக்கவிடப்பட்டுள்ளது.
ஈரான் தாக்கப்பட்டதையடுத்து, அமெரிக்காவின் இராணுவ தளங்கள் காணப்படும் இடங்களிலும் அமெரிக்க ஆதரவு மத்திய கிழக்கு நாடுகளிலும் ஈரான் ட்ரோன், ஏவுகணை மூலம் பதில் தாக்குதல் நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
The post ஈரான் மசூதியில் பறக்கும் சிவப்புக் கொடி! | காரணம் என்ன? appeared first on Vanakkam London.