8
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ஆம் திகதி வான்வழி தாக்குதலை தொடங்கிய நிலையில், அந்த மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இந்த தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல்களில் ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர். மேலும், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள் மற்றும் மருமகன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் உயிரிழந்ததாக ஈரான் அரசு உறுதி செய்துள்ளது.
இந்த சம்பவங்களால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பதிலடி அளிக்கும் வகையில் ஈரானும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் மோதல் தொடர்கிறது.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள இந்த போர்ச்சூழல் காரணமாக உலகளவில் எரிபொருள் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில், ஈரான் மீது நடைபெறும் போர் விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “ஈரானில் இனி குறிவைப்பதற்கான முக்கிய இலக்குகள் எதுவும் இல்லை. நடந்த தாக்குதல்களில் பெரும்பாலான இலக்குகளை அடைந்துவிட்டோம். இன்னும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதும், விரைவில் ஈரானில் போர் முடிவுக்கு வரும்” என்று தெரிவித்தார்.