பட மூலாதாரம், Getty Images
அரசியலில் இருந்து விலகுவதாக சமீபத்தில் தொழில் அதிபர் ஈலோன் மஸ்க் தெரிவித்தார். இதனால், மஸ்க் தனது கவனத்தை, அவர் நடத்தி வரும் நிறுவனங்களின் மீது திருப்புவார் என்று அவற்றில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
டொனால்ட் டிரம்புடன் ஏற்பட்டுள்ள முரண்பாடு மற்றும் வெள்ளை மாளிகை குறித்து வெளிப்படையாக அவர் முன்வைத்த விமர்சனங்கள் போன்றவை, முதலீட்டாளர்கள் நினைத்தது போன்று மஸ்கின் கவனம் திரும்பவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது.
மக்களின் பார்வையில் இருந்து விலகி டெஸ்லா மற்றும் இதர நிறுவனங்களின் செயல்பாட்டை மேற்பார்வையிடுவதற்கு பதிலாக, அவரின் மிக முக்கியமான வாடிக்கையாளரான டிரம்பின் பெடரல் அரசு அவருடைய நிறுவனத்தை புறக்கணிக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார்.
டெஸ்லாவின் பங்குகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. டொனால்ட் டிரம்ப் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட பிறகு அவருடைய பங்குகளின் மதிப்பு 14% வரை குறைந்தது.
ஆனால் வெள்ளிக்கிழமை இருவருக்கும் இடையே பதற்றம் தணிந்ததற்கான அறிகுறிகள் தென்பட்டன.
இருப்பினும் கூட பல மாதங்களாக நிபுணர்களும், முதலீட்டாளர்களும் மஸ்க் அவருடைய போனை கீழே வைத்துவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இருப்பினும் அவர்கள் நினைத்ததற்கு எதிரான சூழலே நிலவுகிறது.
“டெஸ்லா ஏற்கனவே பின்தங்கியுள்ளது”
மஸ்கின் தொழிலில் இருக்கும் பிரச்னையானது, தற்போது டிரம்புடன் இருக்கும் சிறு சச்சரவைக் காட்டிலும் ஆழமானது என்று சிலர் வாதிடுகின்றனர். டிரம்ப் நிர்வாகத்தில் மஸ்கிற்கு வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய பதவியானது மஸ்கின் தொழிலை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டது என்றும் கூறுகின்றனர்.
மூத்த தொழில்நுட்ப பத்திரிகையாளரான காரா ஸ்விஷர், டெஸ்லா விவகாரத்தில் இது உண்மையாகிவிட்டது என்று கூறுகிறார்.
“டெஸ்லா முடிவுக்கு வந்துவிட்டது,” என்று இந்த வாரம் சான் ஃபிரான்சிஸ்கோவில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் பிபிசியிடம் அவர் தெரிவித்தார்.
“அந்த கார் நிறுவனம் மிகவும் சிறப்பாக இருந்தது. தானியங்கி கார்கள் பிரிவில் திறம்பட போட்டியிட இயலும். ஆனால் அவர்கள் பின்தங்கியுள்ளனர். சான்ஃபிரான்சிஸ்கோ நகரில் செயல்பாட்டிற்கு வந்த வாகன ஓட்டிகள் இல்லாத வேமோ (Waymo) வாகனத்துடன் போட்டியிட டெஸ்லா நீண்ட காலமாக முயற்சி செய்து வந்தது. கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் வேமோவை உற்பத்தி செய்து வருகிறது. சான்ஃபிரான்சிஸ்கோ மட்டுமின்றி தற்போது பல நகரங்களிலும் வேமோ இயக்கப்பட்டு வருகிறது.
டெக்சாஸில் அமைந்திருக்கும் ஆஸ்டனில் தானியங்கி ரோபோக்களால் இயக்கப்படும் டெஸ்லா கார்களை அறிமுகம் செய்யும் பணியை இந்த மாதம் மஸ்க் மேற்பார்வையிடுகிறார். கடந்த வாரம் எக்ஸ் தளத்தில், மின் வாகன உற்பத்தியாளரான அவரின் நிறுவனம், ஓட்டுநரே இல்லாத மாடல் ஒய் (Model Y) காரை சோதனை செய்து வருகிறது” என்று கூறினார்.
“டெஸ்லாவின் 90% எதிர்கால மதிப்பீடானது தானியங்கி மற்றும் ரோபோக்களை சார்ந்தே இருக்கும்,” என்று டான் இவ்ஸ் பிபிசியிடம் தெரிவித்தார். வெட்புஷ் செக்யூரிட்டீஸில் நிபுணராக பணியாற்றி வரும் அவர் ஆஸ்டினில் நடைபெற இருக்கும் அறிமுக விழா இந்த நோக்கத்தின் முக்கிய கட்டமாக இருக்கும் என்று கூறினார்.
“இதன் முதல் படியானது, தானியங்கி என்ற பார்வையை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதான்,” என்று இவ்ஸ் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
தற்போது மஸ்கின் கவனம் திசை திரும்பியுள்ளதால் இந்த திட்டத்தின் வெற்றி வாய்ப்புகள் அதிகரித்து இருப்பது போல் தோன்றுகிறது.
இதில் மற்றொரு காரணியும் உள்ளது. அது மஸ்கின் சொந்த உத்வேகம்.
மஸ்கால் என்ன முடியும் என்கிற பேச்சு குறைந்து அவர் எதைப் பற்றியாவது கவலைப்படுகிறாரா என்ற பேச்சு சிலிக்கான் பள்ளத்தாக்கில் அதிகரித்துள்ளது.
“எதிலாவது கவனம் செலுத்தும் போது அவர் மிகவும் பலம் வாய்ந்த நபராக செயல்படுவார்,” என்று கெர்பெர் கவாசகி வெல்த் அண்ட் இன்வெஸ்ட்மெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியான ராஸ் கெர்பெர் கூறுகிறார்.
“இதற்கு முன்பு, வேறு யாராலும் செய்ய இயலாத மின்சார வாகனங்களை உருவாக்க இயலும் என்பதை உலகுக்கு நிரூபித்தார். அதன் பிறகு அவரால் ராக்கெட்டுகளை உருவாக்க இயலும் என்பதையும் நிரூபித்துக் காட்டினார். அவர் நிரூபித்துக் காட்ட நிறைய இருந்தது,” என்று அவர் தெரிவிக்கிறார்.
நீண்ட கால டெஸ்லா முதலீட்டாளரான கெர்பெர் தன் வசமிருந்த பங்குகளை குறைத்துக் கொண்டுள்ளார். மஸ்க் வலதுசாரி அரசியலில் இணைந்த பிறகு தன்னுடைய முதலீட்டை கெர்பெர் குறைத்து வருகிறார். பங்குகள் வீழ்ச்சி அடைந்ததை சுட்டிக்காட்டிய அவர், “வியாழக்கிழமை மிகவும் வலி மிகுந்த நாள்,” என்று குறிப்பிட்டார்.
“நீங்கள் செய்யக் கூடிய அதிகபட்ச முட்டாள்தனம் என்னவென்றால், அமெரிக்காவில் நீங்கள் அதிபரைக் காட்டிலும் பலமிக்க நபர் என்று நினைப்பதாகத் தான் இருக்கும்,” என்று டிரம்புக்கு எதிராக மஸ்க் வெளியிட்ட பதிவுகளை சுட்டிக்காட்டினார் கெர்பெர்.
எக்ஸ், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களை அணுகி மஸ்கின் கருத்துகளை பெற முற்பட்டது பிபிசி. ஆனால் இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக அவர் பிபிசியிடம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
பட மூலாதாரம், Getty Images
டெஸ்லா இறங்குமுகம்
டொனால்ட் டிரம்பின் அதிருப்தியை சம்பாதிப்பதற்கு முன்பாகவே, மஸ்கின் கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவுக்கு எதிராக சமூக வலைதளங்கில் அடிமட்ட அளவில் பிரசாரம் ஒன்று நடைபெற ஆரம்பித்துவிட்டது.
டிரம்ப் மீண்டும் அதிகாரத்திற்கு வந்த பிறகு ஒவ்வொரு வார இறுதியிலும் #TeslaTakedown என்ற ஹேஷ்டேக்கில் அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் கார் விற்பனையானது 20% வரை குறைந்துள்ளது என்று டெஸ்லா நிறுவனம் கடந்த ஏப்ரலில் அறிவித்தது. அந்த நிறுவனத்தின் லாபம் 70%-க்கும் அதிகமாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதனைத் தொடர்ந்து அதன் பங்குகளும் வீழ்ச்சி அடைந்துள்ளன.
“நம்முடைய அரசை சில்லுசில்லாக நொறுக்கி நம் ஜனநாயகத்தின் தலையெழுத்தை அவர் தீர்மானிக்கக் கூடாது. இது சரியல்ல,” என்று இந்த பிப்ரவரி மாதம் கலிஃபோர்னியாவின் டெஸ்லா டீலர் அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற லிண்டா கொஸ்டினென் என்னிடம் கூறினார்.
மஸ்கிற்கு எதிராக வெளிப்படையான நிலைப்பாட்டை எடுக்க விரும்புவதாக லிண்டா கூறினார்.
இந்த போராட்டங்கள் டெஸ்லா நிறுவனம் பற்றியதோ அதன் தொழில்நுட்பம் பற்றியதோ இல்லை என்று கூறுகிறார் ஜான் டோனோவன். #TeslaTakedown போராட்டங்களை சமூக வலைதளங்களில் இணைந்து ஒருங்கிணைத்த அவர் போலி செய்திகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் முக்கியமான ஆய்வாளராவார்.
“இந்த போராட்டம் டெஸ்லாவின் பங்குகள் எவ்வாறு மக்களுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தப்பட்டன என்பது பற்றியது. இது எவ்வாறு மஸ்கிற்கு வெளிப்படைத்தன்மையற்ற அதீத அதிகாரத்தை வழங்கியது என்பதைப் பற்றியது,” என்று டோனோவன் கூறுகிறார்.
ஈலோன் மஸ்கின் சாம்ராஜ்ஜியத்தின் மற்றொரு அம்சமான சமூக வலைதள நிறுவனமான எக்ஸும் அவர் எதிர்ப்பாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய ஒன்றாகும். முன்பு டிவிட்டர் என்று அறியப்பட்ட நிறுவனத்தை மஸ்க் வாங்கினார்.
“அதன் மூலம் அவர் செல்வாக்கு மிக்கவராக இருக்க இயலும். எந்தவிதமான தயக்கமும் இன்றி லட்சக்கணக்கான மக்களை அணுக இயலும்,” என்று டோனோவன் கூறினார்.
தனிப்பட்ட பிராண்ட்
இங்கு மற்றொரு சாத்தியமும் இருக்கிறது.
டிரம்புடன் இதற்கு முன்னதாக மஸ்க் நெருங்கிய நட்பைக் கடைபிடித்ததால் விலகிச் சென்ற மக்களை, இந்த சச்சரவின் பின்னணியில் மீண்டும் ஈர்க்க முடியுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
மூர் இன்சைட்ஸ் & ஸ்ட்ராடெஜி நிறுவனத்தின் தலைமை நிபுணர் பேட்ரிக் மூர்ஹெட் இது சாத்தியம் என்கிறார்.
பிபிசி தொலைபேசி மூலம் அவரை தொடர்பு கொண்ட போது, “நாம் மன்னிக்கும் தன்மை கொண்ட நாடு,” என்று கூறினார். “இது நடக்க நீண்ட காலம் ஆகலாம். ஆனால் இது ஒன்றும் முதன்முறையாக நடக்கும் நிகழ்வு அல்ல,” என்றும் அவர் கூறினார்.
காரா ஸ்விஷர் இது குறித்து பேசும் போது, மஸ்கின் தனிப்பட்ட பிராண்டை, இருபது ஆண்டுகளுக்கு முன்பு மைக்ரோ சாஃப்டை நிறுவிய இணை நிறுவனர் பில்கேட்ஸுடன் ஒப்பிடுகிறார்.
“முரட்டுத்தனம் மற்றும் பிடிவாதம் காரணமாக,” சிலிகான் பள்ளத்தாக்கின் டார்த் வாடெராக” அறியப்பட்டவர் பில்கேட்ஸ் என்று ஸ்விஷர் கூறுகிறார். ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரத்தின் பெயர் டார்த் வாடெர் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய குறைபாடுகளையும் தாண்டி மஸ்க் தன்னுடைய பிம்பத்தை அவர் மீள்கட்டமைப்பு செய்து கொண்டார்.
“அவர் கற்றுக் கொண்டார். மாறினார். மக்கள் மாறுவார்கள்,” என்று கூறுகிறார் அவர். மஸ்க் உண்மையாகவே பிரச்னைக்குரியவராக இருப்பினும் அவரும் மாறுவார் என்று நம்பிக்கைத் தெரிவிக்கிறார் ஸ்விஷர்.
நாசாவுக்கு சிக்கல் வருமா?
மஸ்க் மற்றும் அவரின் நிறுவனங்களின் எதிர்காலம் தொடர்பான பிரச்னைகள் என்பது அவர் என்ன செய்ய உள்ளார் என்பது மட்டுமல்ல, டிரம்ப் என்ன முடிவெடுக்கிறார் என்பதைப் பொறுத்தும் அமைகிறது.
குறைந்தபட்சம் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்கான நிதியை அளிக்க டிரம்பிற்கு மஸ்கின் உதவி தேவைப்பட்டது. இப்போது அவருக்கு எந்த விதமான உதவி தேவை என்பதில் தெளிவில்லை.
நோவாபினியன் சப்ஸ்டாக் என்ற பெயரில் எழுதி வரும் நோவா ஸ்மித், “எவ்வளவு முறையற்றதாக இருந்தாலும் கூட ட்ரம்ப் கிரிப்டோகரன்சி மூலமாக அதிக லாபம் ஈட்டியிருப்பது, மஸ்கை நாடியிருக்கும் சூழலில் இருந்து வெளியேற உதவியிருக்கலாம்,” என்று கூறுகிறார்.
“இப்படி இருந்தால் மட்டுமே அவர் ஈலோன் பிடியில் இருந்து வெளியேற இயலும்,” என்று நினைப்பதாக ஸ்மித் கூறுகிறார்.
மஸ்கின் அரசாங்க ஒப்பந்தங்களை ரத்து செய்யலாம் என்று மிரட்டும் வகையில் டிரம்ப் கருத்து ஒன்றை பதிவு செய்திருந்தார். 38 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தங்கள் அவை.
இந்த ஒப்பந்தங்களில் குறிப்பிட்ட அளவானது மஸ்கின் ராக்கெட் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸுடன் கையெழுத்திடப்பட்டுள்ளது. டிரம்பின் அறிவிப்பால் இதன் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
இருப்பினும் டிரம்பின் எச்சரிக்கையானது வெறும் சலசலப்பை ஏற்படுத்தும் ஒன்றாகவும் இருக்கலாம்.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சரக்குகளை கொண்டு செல்கிறது. தற்போது அங்கே நாசா விஞ்ஞானிகள் 3 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அமெரிக்க விண்வெளித்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த அம்சங்களில் வேரூன்றி இருப்பதை காட்டுகிறது. எனவே டிரம்பின் மிரட்டலை அவ்வளவு எளிதில் நிறைவேற்ற இயலாது.
மஸ்கின் இணைய சேவை வழங்கும் நிறுவனமான ஸ்டார்லிங்கிற்கும் இது பொருந்தும். இதற்கு மாற்று கண்டுபிடித்துவிட இயலும் என்று கூறுவது எளிதாக இருக்கும். ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லை.
ஆனால் டிரம்பால் என்ன செய்ய முடியும் என்பதற்கு வரம்புகள் இருப்பது போன்றே மஸ்கிற்கும் வரம்புகள் இருக்கின்றன.
டிரம்புடனான மோதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, மஸ்க் தன்னுடைய டிராகனை கலைத்துவிடுவதாக கூறினார். ஆனால் பின்னர் அதில் இருந்து பின்வாங்கிவிட்டார்.
எக்ஸ் பயனர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, “நல்ல ஆலோசனை. ஓகே. நாங்கள் அப்படியெல்லாம் செய்ய மாட்டோம் (டிராகனை கலைப்பது),”என்று மஸ்க் பதில் அளித்தார்.
டிரம்ப் – மஸ்க் இடையேயான நட்பு முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் ஒருவரை மற்றொருவர் நாடியிருக்கும் சூழல் நிச்சயமற்றதாக இருக்கிறது.
மஸ்க் நிறுவனத்தின் எதிர்காலம் எப்படி இருந்தாலும் சரி, டிரம்ப் மற்றும் அவரின் நிர்வாக நடவடிக்கைகள் அதில் முக்கிய பங்காற்றும் என்பது மட்டும் வெளிப்படையாக தெரிகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு