பட மூலாதாரம், SLPP
-
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இலங்கையில் 2019ம் ஆண்டு நடாத்தப்பட்ட ஈஸ்டர் குண்டு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே செயற்பட்டுள்ளதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மே 20 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றப் புலனாய்வு திணைக்களம் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் திலிப பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றமை தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் இந்த வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
தேர்தல் ஒன்றை இலக்காக கொண்டு இந்த ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகவும் திலிப பீரிஸ் கூறியுள்ளார்.
எனினும், நீதவான் முன்னிலையில் தனது தரப்பைச் சேர்ந்த சுரேஸ் சலே வாக்குமூலம் ஒன்றை வழங்க வேண்டும் எனவும், அதற்கு இடமளிக்குமாறும் சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் நீதவானிடம் கோரிக்கை முன்வைத்தார்.
இவ்வாறு நீதவானிடம் வாக்குமூலம் வழங்க முயற்சி செய்வதானது, விசாரணைகளை தவறான வழிக்கு கொண்டு செல்லும் செயற்பாடு என மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் திலிப பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு தடுப்பு காவலிலுள்ள சுரேஸ் சலே, நீதிமன்றத்திற்கு கடும் பாதுகாப்புக்கு மத்தியில் மே 20-ஆம் தேதி அழைத்து வரப்பட்டிருந்தார்.
இதன்போது, விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்தில் மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் திலிப பீரிஸ் தெளிவுப்படுத்தினார்.
பிரான்ஸ் நாட்டில் நடாத்தப்பட்ட விசாரணை தொடர்பான தகவல்
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிரான்ஸில் நடாத்தப்பட்ட விசாரணைகள் குறித்து இதன்போது திலிப பீரிஸ் விடயங்களை வெளியிட்டார்.
”14 பக்கங்களை கொண்ட நீண்ட அறிக்கையொன்றை சமர்ப்பிக்கின்றேன். இந்த அறிக்கையானது ஒரு திருப்பு முனையாக இருக்கின்றது. ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் சேனல் 4 தொலைக்காட்சிக்கு நேர்காணலொன்றை வழங்கிய அசாத் மௌலானாவிடம் பிரான்ஸில் வைத்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட அதிகாரிகள் குழு பிரான்ஸிற்கு சென்று, அங்குள்ள இலங்கை தூதுவரின் அதிகாரபூர்வ இல்லத்தில் வைத்தே இந்த வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். இந்த வாக்குமூலத்தில் அவர் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் குறித்து விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளார். அவரது வாக்குமூலத்தின் பிரகாரம், துவான் சுரேஷ் சலே இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டுள்ளமை தெளிவாகின்றது. அரசியல் நோக்கமொன்றை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவர் இதனை செய்துள்ளார்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
”மோதல் சம்பவம் ஒன்று தொடர்பில் சஹரான் ஹஷிம் குழுவிலுள்ள ஒருவரான செயினி மௌலவி சிறை வைக்கப்படுகின்றார். செயினி மௌலவி மற்றும் பிள்ளையான் ஆகியோர் ஒரே சிறை கூண்டில் இருக்கின்றார்கள். எமது குழுவில் தற்கொலை செய்துக்கொள்ள தயாராக இருக்கும் நபர்கள் உள்ளார்கள் என செயினி மௌலவி, பிள்ளையானிடம் தெரிவித்துள்ளார். இந்த விடயம் சுரேஷ் சலேயின் காதுகளுக்கு சென்றுள்ளது. தற்கொலை செய்துக்கொள்ளும் நபர்களை கொண்டு நல்லதொரு வேலையை செய்துக்கொள்ள முடியும் என்ற எண்ணத்திலேயே செயினி, பிள்ளையான், சலே ஆகியோர் ஒன்று சேர்கின்றார்கள்.” என மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் திலிப பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடாத்தப்படுவதற்கு முன்னர் புத்தளம் பகுதியில் வைத்து சஹரான் ஹஷிம் உள்ளிட்ட 6 பேரை கொண்ட தற்கொலை குண்டுத்தாரிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
பிள்ளையானை சிறையில் சந்தித்த ராஜபக்ஸ குடும்ப உறுப்பினர்கள்
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்ட காலப் பகுதியில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனை (பிள்ளையான்), முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ ஆகியோர் சிறைச்சாலைக்கு சென்று சந்தித்ததாக திலிப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி பதவியை ஏற்று ஒரு வார காலத்தில், சிறைச்சாலையிலிருந்து வெளியில் எடுப்பதாக இதன்போது அவர்கள் உறுதி வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்பின்னர், ராணுவ புலனாய்வு பிரிவின் பிரதானியாக கடமையாற்றியிருந்த சுரேஸ் சலே, அரச புலனாய்வு பிரிவின் பிரதானியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.
”பிள்ளையான் குழுவும், இராணுவ புலனாய்வு பிரிவும் ஒன்றாக இணைந்து செயல்பட்டுள்ளன. அவை நாட்டின் தேசிய பாதுகாப்புக்காக அல்ல. அரசியல் எதிரிகளை பழிவாங்கவும் கொலைகள் நடத்தவும் அவை இணைந்து செயல்பட்டுள்ளன. அசாத் மௌலானாவின் கூற்றின் மூலம் பிள்ளைமயான் குழுவும், இராணுவ புலனாய்வு பிரிவும் இணைந்து செய்த குற்றங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஊடகவியலாளர்கள் பிரகீத் எக்னலிகொட கடத்தப்படுதல், கீத் நோயார் மீது தாக்குதல் நடத்துதல், லசந்த விக்ரமதுங்க கொலை, உபாலி தென்னகோனுக்கு தாக்குதல் நடத்துதல் போன்ற செயல்களில் இந்தக் குழுக்கள் தொடர்புடையதாக உள்ளன.
பிள்ளையான் குழுவைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு இராணுவ புலனாய்வு பிரிவின் மூலம் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அது தேசிய பாதுகாப்புக்காக அல்ல, அரசியல் ஒப்பந்தக் கொலைகள் மற்றும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தகைய செயல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு நான் இராணுவத் தளபதிக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளேன். இவ்வாறான செயல்கள் தொடர்ந்தால், தகவல்களை மறைத்தமை தொடர்பாக இராணுவத் தளபதியையும் சந்தேகநபராக நீதிமன்றத்திற்கு கொண்டு வர வேண்டியிருக்கும்.
தாக்குதலுக்குப் பிறகு அசாத் மௌலானாவின் குடும்பத்தினர் ஒரு ஹோட்டலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதை மேற்கொண்டவர் சுரேஷ் சலே. அந்த ஹோட்டலின் பதிவு புத்தகங்களில் உள்ள அனைத்து பதிவுகளும் எங்களால் பெறப்பட்டுள்ளன” என திலிப பீரிஸ் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பட மூலாதாரம், SLPP
‘பிரான்ஸில் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தை சாட்சியமாக ஏற்க முடியாது’
பிரான்ஸ் நாட்டிற்கு சென்று அசாத் மௌலானா என்ற நபரிடம் பெற்றுக்கொண்ட வாக்குமூலத்திலுள்ள உள்ளடக்கங்களை சாட்சியமாக ஏற்றுக்கொள்ள முடியாது என சந்தேக நபராக சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் சவேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்களை சாட்சியமாக ஏற்றுக்கொள்ள வேண்டுமாயின், நீதிமன்ற முன்னிலையில் குறுக்கு கேள்விகள் தொடுக்கப்பட்டு, அது சவாலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், தனது தரப்புக்கு நீதவான் முன்னிலையில் வாக்குமூலமொன்று வழங்க சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
நாமல் ராஜபக்ஸவின் பதில்
2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) சிறைச்சாலையில் சந்தித்தமையானது, இரகசியமான விடயம் அல்லவென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் மஹிந்த ராஜபக்ஸ, பஷில் ராஜபக்ஸ மற்றும் நாமல் ராஜபக்ஸ ஆகியோர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த பிள்ளையானை சந்தித்து கலந்துரையாடியதாக திலிப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்து குறித்து தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
தாம் மேற்கொண்ட சந்திப்புக்கள், சிறைச்சாலை பதிவுகளில் தெளிவாகவுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
”பிள்ளையானை சிறையில் சந்தித்தது இரகசியமான விடயம் அல்ல. உண்மையில், நான் மேற்கொண்ட அந்தச் சந்திப்புகளுக்கான சிறைச்சாலை பதிவுகள் தெளிவாக உள்ளன. அந்த காலகட்டத்தில் அவர் கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்து, 2015 ஜனாதிபதி தேர்தலிலும் 2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களிலும் போட்டியிட்டார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பிரான்ஸ் வரை பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இயல்பாகவே, இது அரசாங்கத்தின் முன்னுரிமைகள் குறித்து கேள்விகளை எழுப்புகிறன. அதிகாரிகள் அத்தனை தூரம் பயணம் செய்ததன் நோக்கம் நான் பிள்ளையானை சந்தித்ததை உறுதிப்படுத்துவதற்காக மட்டுமே என்றால், அது பொதுமக்களின் பணத்தை வீணடிப்பதாகும். எனக்குத் தெரிந்தவரையில், பிள்ளையான் தற்போது ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் காவலில் இல்லை. அப்படியானால், இந்த ஊடக நாடகங்களின் மூலம் அரசாங்கம் யாரை நம்ப வைக்க முயல்கிறது?” என நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும்,”தேசிய மக்கள் சக்தி பல்வேறு காலங்களில் ஈஸ்டர் தாக்குதல் குறித்து மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளது. இப்போது அரசாங்கம் இந்த துயரச் சம்பவத்தை அரசியல் எதிரிகளை குறிவைக்கும் கருவியாக பயன்படுத்த முயற்சித்தால், அது இன்னும் உண்மையான பதில்களையும் நீதியையும் எதிர்பார்த்து காத்திருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் மிகுந்த அநீதியாகும். நியாயமான எந்தவொரு விசாரணையையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.
சந்தேகங்களை வெளிப்படையாகவும் வெளிச்சமான முறையிலும் தெளிவுபடுத்த குற்றப் புலனாய்வு திணைக்களத்துடன் முழுமையாக ஒத்துழைப்போம். அரசியல் நாடகங்களிலும் ஊடக தலைப்புச் செய்திகளிலும் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அரசாங்கம் இந்த நாட்டின் மக்களுக்கு அர்த்தமுள்ள முடிவுகளை வழங்குவதில் கவனம்செலுத்த வேண்டும்.” என நாமல் ராஜபக்ஸ பதிவிட்டுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு