8
உக்ரைனில் துருப்புக்களை நிலைநிறுத்துவதற்காக இங்கிலாந்து அரசாங்கம் சமீபத்தில் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ள நிலையில், நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த 4 ஆண்டுகளுக்குள் பாதுகாப்பு அமைச்சகம் சுமார் £28 பில்லியன் அளவிலான நிதி பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிதி சவால்கள் தொடர்பான மதிப்பீட்டை, இங்கிலாந்தின் உயர்மட்ட இராணுவத் தலைவரான ஏர் சீஃப் மார்ஷல் சர் ரிச்சர்ட் நைட்டன் (Air Chief Marshal Sir Richard Knighton), பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2030ஆம் ஆண்டு வரை பாதுகாப்பு அமைச்சகத்தின் செலவீனங்களிலும் நிதி ஒதுக்கீடுகளிலும் £28 பில்லியன் குறைவு ஏற்படக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளதாகவும், இந்த மதிப்பீடு கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்னர் நடைபெற்ற கூட்டம் ஒன்றின் போது பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் அரசியல் மற்றும் இராணுவ பதற்றங்களை கருத்தில்கொண்டு, இங்கிலாந்து தனது பாதுகாப்பு செலவீனங்களை மேலும் உயர்த்த வேண்டுமென பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.