• Sat. Feb 21st, 2026

24×7 Live News

Apdin News

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் புதிதாக 10% உலகளாவிய இறக்குமதி வரியை விதித்தார் டிரம்ப்!

Byadmin

Feb 21, 2026


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்பு விதித்திருந்த சில வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் 6-3 என்ற பெரும்பான்மை தீர்ப்பில் இரத்து செய்தது. டிரம்ப் தனது அதிகார வரம்புகளை மீறி நடவடிக்கை எடுத்ததாக நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்தத் தீர்ப்பை “மோசமானது” எனக் குறிப்பிட்ட டிரம்ப், தனது வர்த்தகக் கொள்கையை நிராகரித்த நீதிபதிகளை கடுமையாக விமர்சித்தார். நீதிமன்றம் முந்தைய வரிகளை செல்லாததாக்கியதையடுத்து, இதுவரை பயன்படுத்தப்படாத ‘Section 122’ என்ற சட்டப் பிரிவை பயன்படுத்தி, புதிய 10 சதவீத உலகளாவிய இறக்குமதி வரியை அவர் அறிவித்துள்ளார்.

அந்தச் சட்டத்தின் கீழ், அதிகபட்சம் 150 நாட்கள் வரை 15 சதவீதம் வரை வரி விதிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. புதிய உத்தரவு, இம்மாதம் 24ஆம் திகதி முதல் அமலுக்கு வர உள்ளது.

புதிய வரியிலிருந்து சில பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சில கனிமங்கள், இயற்கை வளங்கள், உரங்கள், ஆரஞ்சு மற்றும் மாட்டிறைச்சி போன்ற வேளாண் பொருட்கள், மருந்துகள் மற்றும் சில வாகனங்கள் ஆகியவை இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் கொண்டுள்ள இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற நாடுகள், முன்பு பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட சலுகை வரிகளுக்குப் பதிலாக இப்போது புதிய 10 சதவீத வரியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், வட அமெரிக்கா Free Trade Agreement உடன்படிக்கையின் கீழ், கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளிலிருந்து வரும் பெரும்பாலான பொருட்கள் இந்தப் புதிய வரியிலிருந்து விலக்கு பெறும்.

நீதிமன்றத் தீர்ப்பை பல அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்றுள்ளன. இது தங்களுக்கு “பெரிய நிவாரணம்” என சிறு வணிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தீர்ப்பின் காரணமாக, அரசாங்கம் பில்லியன் கணக்கான டொலர் வரிகளை திருப்பிச் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஆனால், சட்டப்பூர்வ சவால்கள் இல்லாமல் வரிகள் திருப்பித் தரப்படமாட்டாது என்றும், இந்த விவகாரம் பல ஆண்டுகள் நீதிமன்றங்களில் நீடிக்கலாம் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

By admin