வயிறு மற்றும் குடல் ஆகியவற்றின் ஆரோக்கியத்தைப் பேணுவது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக அமைகிறது. சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்னைகள் குறித்து இரைப்பை குடல் மருத்துவர் பாசுமணியிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். அவருடனான நேர்காணலை கேள்வி – பதில் வடிவில் பார்க்கலாம்.
கேள்வி: வயிற்று வலிக்கு எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
பதில்: ஆங்கிலத்தில் வயிற்றை பாண்டோரா பாக்ஸ் (Pandora’s box) என்று அழைப்பார்கள். உள்ளே என்ன இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. முந்தைய நாள் இரவு அளவுக்கு அதிகமான உணவு உண்டாலோ அல்லது உணவகத்தில் உண்ட உணவு செரிமானம் ஆகவில்லை என்றாலோ அஜீரண கோளாறு காரணமாக மேல் வயிற்றில் வலி ஏற்படும். பசி ஏற்படாது. இவை இரண்டும் சாதாரணமானவை. சோடா, எலுமிச்சை சாறு, மோர், சீரகம், இஞ்சி போன்றவற்றை பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், வயிற்று வலிக்கு குடல் புண், அல்சர் போன்ற 100-க்கும் மேற்பட்ட காரணங்கள் உள்ளன.
எச்சரிக்கை அறிகுறிகள்:
தூக்கத்தை கெடுக்கும் அளவுக்கு வலி
சிறப்பு உணவு எதுவும் சாப்பிடாமலேயே கடுமையான வலி
4-5 மணி நேரம் தொடரும் வலி
4-5 வாரங்கள் தொடர்ந்து வலி
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வலி
முதுகு பகுதிக்கு பரவும் வலி
பசியின்மை மற்றும் வாந்தி
சோர்வு மற்றும் மயக்கம்
ரத்த பரிசோதனையில் ஹீமோகுளோபின் குறைவு
இரும்புச்சத்து குறைவு
ஸ்கேன் செய்தால் வயிறு அல்லது கல்லீரலில் பிரச்னை
இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
படக்குறிப்பு, இரைப்பை குடல் மருத்துவர் பாசுமணி
கேள்வி: சாப்பிட்ட பிறகு புகைபிடிக்கும் பழக்கத்தால் ஏற்படும் பிரச்னை என்ன?
பதில்: புகையிலை தலை முதல் கால் வரை அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும். நிகோடின் வயிற்றை தளர்த்துகிறது. வயிறு தளர்ந்தால் பசி குறையலாம், ஆனால் ஸ்பிங்க்டர் தசை தளர்ந்தால் இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் அதிகரிக்கும். எனவே, சாப்பிட்ட பிறகு புகைபிடிப்பது நல்லதல்ல.
கேள்வி: காலையில் எழும்போது வாயில் இருக்கும் உமிழ்நீரை விழுங்கலாமா?
பதில்: உமிழ்நீர் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டது. அதில் வலி நிவாரண குணம் உள்ளது. குழந்தைக்கு காயம்பட்ட இடத்தில் உமிழ்நீரை வைப்பது நல்லதுதான். இது வலி நிவாரண விளைவு மற்றும் ஆண்டிபயாடிக் விளைவு கொண்டது. உமிழ்நீரில் நல்ல பாக்டீரியா நிறைய இருப்பதால் அது ஆண்டிபயாடிக் போன்றது. அது கெட்ட பாக்டீரியாக்களுக்கு இடம் கொடுக்காது.
இதை காம்பெடிடிவ் இன்ஹிபிஷன் (competitive inhibition) என்று அழைக்கிறோம். பாக்டீரியாக்களைப் பொருத்தவரை வாயில் ஒரு பெரிய உலகமே உள்ளது. தூக்கத்தின் போது அந்த விகிதம் மாறுகிறது. வறட்சியின் காரணமாக கெட்ட பாக்டீரியாவின் எண்ணிக்கை மாறுகிறது. இரவில் உமிழ்நீர் உற்பத்தி குறைகிறது.
காலையில் வாயில் இருக்கும் பாக்டீரியா நல்ல பாக்டீரியா அல்ல. அதை விழுங்குவதில் பிரச்னை இல்லை. நம்மிடம் போதுமான அமிலம் இருந்தால், விழுங்கினாலும் நம் வயிறு பாதிக்கப்படாது. பாக்டீரியா வயிற்றில் இறந்துவிடும்.
பட மூலாதாரம், Getty Images
கேள்வி: வயிறு மற்றும் வாய்ப் புண் இடையே தொடர்பு உள்ளதா?
பதில்: இது பாதி உண்மை. வயிறு என்பது வயிற்றுப் பகுதி மட்டுமல்ல, வயிற்றுக்கு அப்பால் 8 மீட்டர் வரை உள்ளது. சிறுகுடலின் இறுதியில் ஒரு சிறிய புண் இருந்தாலும், வாயில் உள்ள பாக்டீரியாவால் அது பாதிக்கப்படலாம். வாய்ப்புண்களுக்கு பல காரணங்கள் உள்ளன. வயிறு இல்லாமலேயே, சிஸ்டமிக் லூபஸ் எரித்மாடோசஸ் போன்ற தன்னுடல் தாக்க நிலைகள் மற்றும் லைகன் க்ளோனஸ் போன்ற சில நிலைகள் உள்ளன. இப்படிப்பட்ட நிலைகளில் வயிற்றில் உள்ள பாதிப்பு வாய் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கலாம்.
கேள்வி: குடல் ஆரோக்கியம் நன்றாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
பதில்: குடல் ஆரோக்கியம் என்பது நமது உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையின் ஒரு பகுதி. இவை சரியாக இருந்தால் குடல் தன்னைத்தானே பராமரித்துக்கொள்ளும்.
இரவில் ஒரு துப்புரவு தொழிலாளி போல இருக்கும். நாம் உறங்கும்போது நமது குடல் தன்னைத் தானே சுத்தம் செய்துகொள்ளும். 3 மணிநேரம் சாப்பிடாமல் இருந்தால், சிறுகுடலில் எதுவும் இருக்காது. இதை ஜெஜூனம் என்று அழைக்கிறோம். ஜெஜூனம் என்றால் குடல் காலியாக இருக்கும் என்று அர்த்தம்.
பட மூலாதாரம், Getty Images
கேள்வி: குடல் ஆரோக்கியத்துக்கு என்ன செய்ய வேண்டும்?
மன அழுத்தம் இல்லாமல் நன்றாக உறங்க வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடக் கூடாது.
சமச்சீர் உணவு – சில புரதம், சில வைட்டமின் டி, சில இரும்புச்சத்து, தாவர நார்ச்சத்து ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிஸ்கட், பர்கர், பீட்சாவில் காய்கறி குறைவு. நார்ச்சத்து இல்லை என்பதால் இவை குடல் ஆரோக்கியத்திற்கு உகந்தவை அல்ல. இதுபோன்ற உணவுகளை அதிகம் உட்கொள்வதால்
குடல் எரிச்சல் நோய்க்குறி (Irritable Bowel Syndrome)
உணவு சாப்பிடும்போது குமட்டல்
குடல் வீக்க நோய்க்குறி (Inflammatory Bowel Syndrome)
குடல் புற்றுநோய்
பார்கின்சன் நோய்
மனச்சோர்வு
தோல் ஒவ்வாமை
மூட்டுவலி
ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
பட மூலாதாரம், Getty Images
கேள்வி: துர்நாற்றத்துடன் வாயு வெளியேற என்ன காரணம்? அது குடல் பிரச்னையின் அறிகுறியா?
பதில்: நார்ச்சத்து ஜீரணமாகும் போது காற்று உற்பத்தியாகிறது. ஹைட்ரஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு போன்றவை நம் உடலில் இருந்து வெளியேறும். மீத்தேன் மற்றும் சல்ஃபைடு ஆகியவை அழுத்தம் கொடுத்து குடலிலிருந்து வெளியேறும். இதுதான் துர்நாற்றத்திற்கு காரணம்.
சில ரசாயனங்களை உற்பத்தி செய்யும் பாக்டீரியா நம் உணவு பழக்கத்தால் இருக்கலாம். சில உணவுகள் நிச்சயமாக துர்நாற்றத்தை ஏற்படுத்தும். அதே நேரத்தில், நமது குடல் ஆரோக்கியம், தூக்கம், மன அழுத்தம், பாக்டீரியா – இவை அனைத்தும் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கும். காலையில் எழும்போது வாயு வெளியேறுவது இயல்பு.
20-30 முறைக்கு மேல் வாயு வெளியேற்றம் சத்தமாகவும் இரைச்சலாகவும் இருந்தால், குடலில் உள்ள பாக்டீரியா ஏன் மாறியது என்று பார்க்க வேண்டும். இது நமது உணவு பழக்கத்தால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் தெரியாத காரணத்தால் வந்ததா என்று அறிந்து தீர்வு தேடலாம்.
கேள்வி: பழைய சோறு உண்மையில் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?
பதில்: சந்தேகமே இல்லாமல் பழைய சோற்றுக்கு பத்துக்கு பத்து மதிப்பெண்கள் கொடுக்கலாம். அது ஆரோக்கியமான உணவு. இதில் ப்ரோபயாடிக் உள்ளது. நிறைய சாப்பிடுபவர்களால் ஜீரணிக்க முடியாது. பழைய சோற்றில் கலோரிகள் மற்றும் ஸ்டார்ச் உள்ளன. எனவே, இது ஒரு நல்ல உணவு. ஆனால், மிதமான அளவில் பயன்படுத்த வேண்டும்.