நாமக்கல்: பள்ளிபாளையம் அருகே ஓடும் அரசுப் பேருந்தின் பின்புற படிக்கட்டு உடைந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோட்டில் இருந்து கோவை கோட்டத்திற்கு உட்பட்ட ”கே 1” என்ற எண் கொண்ட அரசுப் பேருந்து குமாரபாளையம், பள்ளிபாளையம் வழியாக இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்து நேற்று காலை ஈரோட்டில் இருந்து மேற்குறிப்பிட்ட வழித்தடத்தில் சென்றது.
பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இப்பேருந்து பள்ளிபாளையம் அருகே ஆவுத்திப்பாளையம் என்ற இடத்தில் பேருந்து வந்தபோது அதன் பின்புற படிக்கட்டுகள் திடீரென உடைந்து சாலையில் விழுந்தது. இதனைக் கண்டு பேருந்தில் இருந்தவர்கள் கூச்சல் எழுப்பினர். உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கி விடப்பட்டு மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனிடையே, பேருந்தின் படிக்கட்டு பகுதியில் யாரும் நிற்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என பேருந்தில் பயணித்த பயணிகள் தெரிவித்துள்ளனர். அரசுப் பேருந்தின் படிக்கட்டு உடைந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பள்ளிபாளையம் அருகே ஆவுத்திப்பாளையம் என்ற இடத்தில் அரசுப் பேருந்தின் பின்புற படிக்கட்டு உடைந்து விழுந்ததால் பேருந்து நிறுத்தப் பட்டு பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.