சென்னை: திமுகவில் உறுப்பினர் சேர்க்கையை விரைவுபடுத்துவது தொடர்பாக மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், தொகுதி பொறுப்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான அடிப்படை பணிகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. பூத் கமிட்டி அமைத்தல், உறுப்பினர்கள் சேர்க்கை உள்ளிட்ட பணிகளை கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. ஆளும் திமுக கடந்த ஆண்டே தேர்தல் குழுக்களை அமைத்து பல்வேறு பணிகளை தொடங்கிவிட்டது.
மதுரையில் கடந்த ஜூன் 1-ம் தேதி நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்குமாறு நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். தமிழகத்தின் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை திமுகவில் சேர்க்கும் வகையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற திட்டத்தையும் அறிவித்து தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசிக்க, நாளை காணொலி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், ‘திமுக உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஜூன் 7-ம் தேதி (நாளை) காலை 10.30 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறும். இதில் மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.