1998 ஆம் ஆண்டிற்குப் பிறகு உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ஸ்காட்லாந்து அணி பங்கேற்கவுள்ள நிலையில், அந்த நாட்டில் சிறப்பு வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூன் 15 ஆம் தேதி வங்கி விடுமுறை வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்து ஆண்கள் தேசிய கால்பந்து அணி, ஜூன் 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஹைட்டி அணிக்கு எதிராக தனது முதல் போட்டியை நடத்த உள்ளது. இப்போட்டி இங்கிலாந்து நேரப்படி அதிகாலை 2 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முக்கியமான விளையாட்டு நிகழ்வின் அவசியத்தை வலியுறுத்திய ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர் ஜான் ஸ்வின்னி, மன்னரிடம் விடுமுறை அறிவிக்க கோரிக்கை வைத்திருந்தார். அந்த கோரிக்கையை தொடர்ந்து வங்கி மற்றும் நிதி பரிவர்த்தனை சட்டம் 1971 இன் கீழ் சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த உலகக் கிண்ணப் போட்டி ஸ்காட்லாந்திற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக மட்டுமின்றி, உலக அரங்கில் நாட்டின் நிலையை வலுப்படுத்தவும், வணிக வளர்ச்சியை ஊக்குவிக்கவும், சுற்றுலா துறையை மேம்படுத்தவும், கலாச்சாரம் மற்றும் விளையாட்டு தொடர்புகளை விரிவுபடுத்தவும் சிறந்த வாய்ப்பாக அமையும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
The post உலகக் கிண்ணப் போட்டியை முன்னிட்டு ஸ்காட்லாந்தில் ஜூன் 15 வங்கி விடுமுறை அறிவிப்பு appeared first on Vanakkam London.