13
’ஈழத்து வித்துவம்’ எங்கள் புலமை மரபின் அடையாளம் வித்துவசிரோமணி சி. கணேசையர் அவர்களின் 148 வது பிறந்த நாள் இன்று,
செந்தமிழ் நூல் கற்றார் சொல்லுமந் நூற்பொருள்
தந்த வழி முறையிற்றான் வாழ்ந்தார்–முந்து தமிழ்ச்
சங்கக்கபிலனே சான்ற கணேசையர்க்குப்
பங்கமிலொப்பாவான் பார்
- புலவர் நா. சிவபாதசுந்தரனார்
எங்கள் தேசத்தின் புலமை அடையாளாய் நிமிர்ந்த வித்துவசிரோமணி கணேசையர் (1878-1958) அவர்களின் பிறந்து நாளை நினைவு கூரும் இத்தருணம் பெறுமதியானது.
இலக்கண ,இலக்கிய ஆய்வாளனாக ,விவாத அறிஞராக,புலவராக தமிழ் கூறும் நல்லுலகெங்கணும் தடம்பதித்தவ ஆளுமை. தொல்காப்பியம் , நன்னூல். வீர சோழியம் ,இலக்கண விளக்கம் முதலாய அரிய நூள்களை ஆழக்கற்று உரையும் நுண்ணிய விளக்கங்களும் தந்தபேராசான்.ஈழ நாட்டு தமிழ் புலவர் சரிதம் போன்ற அரிய பல நூல்களின் ஆசிரியர்.
அவர் வீற்றிருந்து அருளாட்சிபுரிந்த வர்த்தலைவிளான் மருதடி விநாயகர் மருங்கிலே இதே காலப்பகுதியில் சிலையெடுத்துக் கொண்டாடினோம் .சங்கம் வளர்த்த எங்கள் வர்த்தலைவிளான், கட்டுவன்,தென்மயிலைக் கிராமங்களின் பண்பாடு எழுச்சியிலும் கல்வி மேம்பாட்டிலும் அவர் தந்த தலைமைத்துவம் நிகரிலாதது.
எங்ளூர் என்ற எல்லைக்கு அப்பால் ஆரிய- திராவிட பாஷாவிருத்திச்சங்க பரீட்சைகளுக்கு மாணவர்களைத் தாயார்ப்படுத்திய அவரது ஆசிரியப்பணி மறக்கமுடியாதது. காசிவாசி செந்திநாதையர், சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் வடமொழி அறிஞர் பிச்சுவையர் போன்ற பெருமக்களிடம் பாடம் கேட்ட அவர் ஒரு பெரும் மாணவ தலைமுறையை எமக்காகியவர்.
தமிழுக்கும் தமிழர் பண்பாட்டுக்கும் அவராற்றிய ஒப்பற்பணிகளை இன்றைய தலைமுறையினர் அறியச்செய்வது எம் காலக்கடமையாகும்.
எதிர்காலத்தில் ஐயாவின் ஆச்சிரமம் அமைந்த சூழமைவில் அவர் பெயரில் ஒரு தமிழியல் ஆய்வு நிறுவனம் அமைந்திடுதல் வேண்டும் . கணேசையர் பதிப்பு என்ற முத்திரையுடன் வெளியான அவரது வாழ் நாள் ஆய்வுப்பொருண்மையான தொல்காப்பிய விளக்கங்கள்,இலக்கண ஆராய்ச்சிக்காட்டுரைகள் ,செந்தமிழ் முதலாய இதழ்களில் வெளிவந்த இலக்கிய ஆய்வு நுட்பங்கள்,இந் நிறுவனத்தின் ,வழியாக இன்றைய தமிழியல் மாணவர்கள் வசப்பட வேண்டும் . இந்தப் பெரும்பணியில் தமிழியல் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் அனைவரும் ஒன்றிணந்து இந்நாளில் உறுதி பூணுவோம்.
பேராசிரியர் கலாநிதி என். சண்முகலிங்கன்