0
அமெரிக்காவில் பெரும் கவனம் ஈர்த்துள்ள எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பான விசாரணையில் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனும், முன்னாள் வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளிண்டனும் சாட்சியமளிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பில் கிளிண்டனின் செய்தித் தொடர்பாளர் ஏஞ்சல் யுரேனா, ஹவுஸ் மேற்பார்வைக் குழுத் தலைவர் ஜேம்ஸ் கோமர் எழுதிய கடிதத்திற்கு பதிலளித்துள்ளார். அதில், கிளிண்டன் தம்பதிகள் நல்ல நம்பிக்கையுடன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், தங்களுக்கு தெரிந்த தகவல்களை சத்தியப்பிரமாணத்தின் கீழ் வழங்க தயாராக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் வெளியுறவு செயலாளரும் அதிகாரப்பூர்வமாக சாட்சியமளிக்க முன்வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் எப்போது மற்றும் எங்கு சாட்சியமளிப்பார்கள் என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை.
கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் வெளியிடப்பட்ட எப்ஸ்டீன் கோப்புகளின் முதல் தொகுப்பில் பில் கிளிண்டனுடன் தொடர்புடைய பல புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. 2000களின் ஆரம்பத்தில் கிளிண்டன் அறக்கட்டளையின் பயணங்களுக்காக எப்ஸ்டீனின் தனியார் விமானத்தில் பயணம் செய்ததாக அவரது செய்தித் தொடர்பாளர் முன்பு தெரிவித்திருந்தார். இதனையடுத்து இந்த விவகாரம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.