• Sat. Jun 21st, 2025

24×7 Live News

Apdin News

‘எம்எல்ஏ பரிந்துரைக்கும் நபருக்கே பயிர்க்கடன்’ – மதுரை ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் | “Crop Loan Only for Person Recommended by MLA” – Farmers Complain to Madurai Collector

Byadmin

Jun 21, 2025


மதுரை: ‘தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் எம்எல்ஏ பரிந்துரை செய்யும் விவசாயிகளுக்கு மட்டுமே பயிர்க்கடன் வழங்குகின்றனர். முறையாக கடன் செலுத்திய உண்மையான விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குவதில்லை’ என மதுரை ஆட்சியர் சங்கீதாவிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், ஆட்சியர் சங்கீதா தலைமையில் ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன், வேளாண் இணை இயக்குநர் ப.சுப்புராஜ், நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாரதிதாசன், நேர்முக உதவியாளர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர்.

விவசாயி மூக்கன்: கே.போத்தம்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தியவர்களுக்கு பயிர்க்கடன் வழங்காமல் அலைக்கழிக்கின்றனர். எம்எல்ஏ பரிந்துரை செய்தவர்களுக்கு மட்டுமே கடன் கொடுக்கின்றனர்.

ஆட்சியர்: எம்எல்ஏ பரிந்துரை செய்பவர்களுக்கு கடன் தராமல், கடனை திருப்பிச் செலுத்தியவர்களுக்கு பயிர்க்கடன் தர வேண்டும்.

மணவாளக் கண்ணன்: செல்லம்பட்டி ஒன்றியத்தில் நெல் அறுவடை செய்து 20 நாட்களுக்கு மேலாகியும் நெல் கொள்முதல் செய்யாமல் உள்ளது. விஏஓ, வேளாண் துறையினர் தவறான தகவலை கொடுத்துள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஆட்சியர்: விஏஓ அடங்கல் கொடுக்கிறார், வேளாண் துறை அலுவலர் அளித்த சாகுபடி பரப்பளவின்படி நெல் கொள்முதல் மையம் திறக்கப்படுகிறது.

மணி: கொட்டாம்பட்டியில் அரசு விதிகள் மீறி கல் குவாரிகள் செயல்படுகின்றன. ஓடைகளை ஆக்கிரமித்து கற்களை கொட்டுகின்றனர். சிங்கம்புணரி கல் குவாரியில் உயிரிழப்புகள் ஏற்படுத்தியவர்கள் தற்போது காடம்பட்டியில் கிரஷர் அமைத்துள்ளனர். அதனை அதிகாரிகள் கண்காணித்து தடுக்க வேண்டும்.

ஆட்சியர்: கனிமவள உதவி இயக்குநர் தற்போதுதான் பணிமாறுதலில் வந்துள்ளார். கொட்டாம்பட்டி, வாடிப்பட்டி பகுதியில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். மேலும், வாடிப்பட்டி பகுதியில் விதிமீறல் கல் குவாரிகள் குறித்து டிரோன் மூலம் ஆய்வு செய்த அறிக்கை இன்னும் வரவில்லை. விரைந்து அனுப்புங்கள்.

ரவி: கொட்டகுடி கண்மாயில் ரவுடிகள் மூலம் வண்டல் மண் எடுத்து கடத்துகின்றனர். கண்மாயிலுள்ள மடைக்கு கீழ் மண் ஆழமாக எடுப்பதால் தண்ணீர் செல்ல தடை ஏற்படுகிறது.

ஆட்சியர்: பொதுப்பணித்துறை கண்மாய்களில் பொறியாளர் கண்காணிப்பில் வண்டல் மண் எடுக்கப்படுகிறது. ஆழமாக எடுத்திருந்தால் அபராதம் விதியுங்கள்.

அதிகாரியிடம் பணம் கேட்டு மிரட்டும் விவசாயி:

விவசாயிகள் கூட்டத்தில் பேசிய ஒருவர், தோட்டக்கலைத் துறையில் தேனீ வளர்ப்பு திட்டத்தில் மோசடி நடப்பதாகவும், குறிப்பிட்ட நிறுவனத்தில் வேளாண் இயந்திரங்கள் வாங்க வற்புறுத்துகின்றனர் என்றும், ஆட்சியரிடம் புகார் தெரிவித்தார்.

விவசாயிகள் கூட்டம் முடிந்த பின், இதுகுறித்து ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சாந்தி, வேளாண் வணிக துணை இயக்குநர் மெர்ஸி ஜெயராணி ஆகியோர், விவசாயி எம்.பி.ராமன் உள்ளிட்ட விவசாயிகளிடம் மிரட்டும் விவசாயி குறித்து புகார் தெரிவித்தனர்.

மேலும், அந்த விவசாயி தோட்டக்கலைத் துறை துணை இயக்குநரிடம் லஞ்சம் கேட்கிறார், குறிப்பிட்ட நிலம் வாங்கித் தருமாறு மிரட்டுகிறார். அதனை செய்யாததால், விவசாயிகள் கூட்டத்தில் பொய் புகார்களை தெரிவிக்கிறார். அதிகாரியிடம் லஞ்சம் கேட்கும் அந்த விவசாயியை உங்களைப் போன்ற விவசாயிகள்தான் கண்டிக்க வேண்டும் என்றனர்.

அப்போது, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பிரபா கண்ணீர் விட்டு அழுதார். அவருக்கு சக வேளாண் அதிகாரிகளும், விவசாயிகளும் ஆறுதல் கூறி, ஆட்சியரிடம் புகார் செய்வோம் தைரியமாக இருங்கள் என்றனர்.



By admin