இன்று, ஜூன் 10, தமிழ்நாட்டில் வெளியான பத்திரிகைகள் மற்றும் இணைய ஊடகங்களில் இடம் பெற்ற முக்கியச் செய்திகளின் தொகுப்பை நாம் இங்கே காணலாம்.
‘திருச்சியில் உள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பங்களாவின் பட்டாவில் சட்டவிரோதமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதை மாற்றி, எம்ஜிஆரின் வாரிசுகள் பெயரில் பட்டாவை மாற்றித்தர வேண்டும்’ என திருச்சி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழின் செய்தி கூறுகிறது.
அந்தச் செய்தியின்படி, இதுகுறித்து திருச்சி ஆட்சியர் மா.பிரதீப்குமாரிடம் திருச்சி வடக்கு காட்டூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சர்வேயர் சார்லஸ் என்பவர் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, திருச்சி உறையூர் திருத்தாந்தோணி சாலையில், மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆருக்கு சொந்தமான பங்களா மற்றும் காலியிடம் 80,000 சதுரடி பரப்பளவில் உள்ளது. இதன் இன்றைய சந்தை மதிப்பு ரூ.25 கோடி இருக்கும்.
இந்த சொத்துக்கு, எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர், அவரது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி மகன் மற்றும் மகள்கள் 10 பேர் வாரிசுகளாக பதிவு செய்து, தங்களது பெயரில் பட்டா பெற்றனர். இந்நிலையில், வாரிசுகளின் பெயர்கள் நீக்கப்பட்டு, ‘அதிமுக பொதுச் செயலாளர்’ என பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்பின்னர், அந்தப் பெயரும் நீக்கம் செய்யப்பட்டு, ‘மதுரம் கணவர் கோவிந்தசாமி’ என கணினி நிலப் பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது. எம்ஜிஆரின் வாரிசுகளின் பெயர்களை பட்டாவில் இருந்து நீக்க வேண்டும் என்றால், கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்து அவரின் ஆணை பெற்று பெயர்களை நீக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால், இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை.
இதுகுறித்து கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்திருந்தேன். இதுதொடர்பாக, கோட்டாட்சியர் 1.10.2021 மற்றும் 18.10.2021 ஆகிய தேதிகளில் என்னை அழைத்து விசாரணை மேற்கொண்டார்.
இந்நிலையில், தற்போது நிலப்பதிவேட்டில் எம்ஜிஆரின் வாரிசு பெயர்கள் பதியப்படாமல் உள்ளதுடன், ‘மதுரம் கணவர் கோவிந்தசாமி’ என்ற பெயரும் நீக்கம் செய்யப்பட்டு, ‘பொதுச்செயலாளர் அதிமுக’ என கணினியில் பதியப்பட்டுள்ளது.
கோட்டாட்சியர் எந்த அடிப்படையில் ‘மதுரம் கணவர் கோவிந்தசாமி’ பெயரை நீக்கினார் என்றும் தெரியவில்லை. அதேசமயம் எம்ஜிஆர் தனது பெயரில் கிரயம் பெற்று, பத்திரம் பெற்றுள்ள நிலையில், ‘பொதுச் செயலாளர் அதிமுக’ என்று பட்டாவில் பெயர் மாற்றம் செய்தது தவறு.
எம்ஜிஆர் தனது சொத்தை அதிமுகவுக்கு பத்திரம் மூலம் வழங்கியிருந்தாரா அல்லது உயில் ஏதேனும் எழுதி வைத்தாரா என்பதை விளக்க வேண்டும். ஆகவே, இந்த விவகாரத்தில் ஆட்சியர், கோட்டாட்சியரின் அலுவலக கோப்பைப் பெற்று, கோட்டாட்சியர் செய்த விசாரணை மற்றும் உத்தரவை பரிசீலனை செய்து, வறுமையில் வாடும் எம்ஜிஆரின் வாரிசுகள் பெயர்களை மீண்டும் நிலப்பதிவேட்டில் பதிய உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார் என அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
கேரளாவில் சரக்கு கப்பலில் தீ – 16 ஊழியர்களை மீட்கும் பணி தீவிரம்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
கேரளாவில் ஒரு சரக்கு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதால் அதில் இருந்த சில கண்டெய்னர்கள் வெடித்து சிதறின என்றும் அப்போது உயிர் தப்பிக்க கப்பலில் இருந்து கடலில் குதித்த 4 பேரை காணவில்லை என்றும் தினத்தந்தி நாளிதழின் செய்தி கூறுகிறது.
அந்தச் செய்தியின்படி, இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து மும்பை நோக்கி சரக்கு கப்பல் கடலில் நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த கப்பலில் சிங்கப்பூர் கொடி கட்டப்பட்டு இருந்தது.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அழிக்கல் கடற்கரை அருகே நடுக்கடலில் கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென கப்பலின் ஒரு பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென பரவியது.
இதனால் கப்பலில் இருந்து அதிக அளவில் கரும்புகை கிளம்பியது. தொடர்ந்து கண்டெய்னர்களுக்கும் இந்த தீ பரவியதால் அவற்றில் சில பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதன்காரணமாக கப்பலில் இருந்த கேப்டன் உள்பட 22 பேர் செய்வது அறியாமல் திகைத்தனர். தீ பரவி கொண்டே இருந்ததால், உயிர் தப்பினால் போதும் என கருதி, 20 பேர் கப்பலில் இருந்து கடலில் குதித்தனர்.
கப்பல் தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கண்ணூர் அழிக்கல் துறைமுகத்தில் இருந்து கடல் எல்லை பாதுகாப்பு படையினர் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் அங்கு விமானங்கள் மூலம் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தீ விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்ததாக தெரிகிறது. கடலில் குதித்த 20 பேரில் 4 பேரை காணவில்லை. மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
கப்பலில் கேப்டன், தலைமை பொறியாளர் மட்டும் உள்ளனர். கப்பலில் இருந்து கடலில் குதித்தவர்களை படகுகள் மூலம் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கப்பலில் மொத்தம் 650 கன்டெய்னர்கள் இருந்தன. அதில் 20 கன்டெய்னர்கள் கடலுக்குள் விழுந்தது.
அதில் என்ன உள்ளது? என்பது தெரியவில்லை. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. கடலோர காவல்படையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் கப்பலில் எரியும் தீயை அணைக்கும் பணியில் கடல் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 4 கப்பல்கள், டிரோன்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது என்று அந்தச் செய்தி குறிப்பிடுகிறது.