• Sat. Jun 14th, 2025

24×7 Live News

Apdin News

எலும்புத் துண்டொன்று மண்ணில் மிதந்தால் | நதுநசி

Byadmin

Jun 13, 2025


புதைகுழிகள் இங்கே
புதியவை இல்லை.
புழுகுச் செய்தியாகவும்
அவை வந்ததில்லை.

எல்லாமே உண்மை.
ஆனபோதும் நாம்
கடந்து தான் போகிறோம்.
உயிரோடு இருப்பதால்.

ஏமாற்றப்பட்டு அவர்
மண்ணில் புதைக்கப்பட
அங்கே அப்போது அவரிடம்
நேர்மை இருந்தது உண்மை.

இல்லை என்றால்
எதிரியை அவர்கள் புரிந்து
அவன் கபடத்தில் சிக்காது
தப்பித்துப் போயிருப்பார்கள்.

நில் என்றான் எதிரி
நின்று கேட்டு விட்டார்கள்.
நடைமுறைக்கு அது தானே
நல்ல பண்பாடு என்பார்.

கயவரோடு பழகிடும் போது
நல்லவராக நடப்பது
கடமையின் நேர்மை இல்லை.
செம்மணி மனித புதைகுழி.

கிருசாந்தி அவள் பெயரோடு
அந்த கொடூரம் வந்தது
செய்தியாக வெளியே என்று
பேச்சு மட்டும் உண்டு.

சான்றாக உடனிருந்தவர்
சாட்சியாக இருந்து பேசியும்
காணாமல் போனவருக்கு
நீதி ஏதும் கிடைத்ததில்லை.

இப்போது மீண்டும்
செய்திகளில் வருகிறது
செம்மணி மனித புதைகுழி.
இதுவும் கடந்து போகும்.

மன்னாரில் இருந்து
சதோசா மனித புதைகுழி.
கொக்குத் தொடுவாயில்
வீதியோர மனித புதைகுழி.

காலங்கள் நீண்டும்
நீதி மன்றங்கள் வந்தும்
ஈற்றில் கிடைத்தது என்னவோ
ஏமாற்றம் மட்டுமே கண்டேன்.

வரியுடையோடு தகடும்
அது போராளியின் உடல்
அவனது எலும்புக்கூடு .
பேச்சில் வந்த பேச்சிது.

போராளிகளின் உடல்களாக
ஆம் அப்படியும் இருக்கலாம்.
ஆனாலும் இல்லை இதில்
உறுதியான நிலைப்பாடு.

வரியுடை ஈழத்தில்
புலிகளின்றி வேறிலர்.
அது ஒன்றே போதும்
அவர்களென்ற சான்றுக்கு.

காணாமல் போக
செய்துவிட்டவர்கள் இங்கே
புதைக்கப்பட்டு இருக்கலாம்.
சந்தேகம் வலுக்கிறது.

தமிழர்களை கொன்று
மண்ணில் புதைத்திட
சுதந்திரம் கொடுத்தது யாரோ?
அவர் செய்தது போர் குற்றமே!

போரில் பொதுமக்கள்
ஆடைகளைந்து கொன்று
மண்ணில் புதைத்து விடுதல்
போரியல் விதியன்று.

ஆனாலும் அது நடந்தது
தடையின்றி ஈழ மண்ணில்.
கேட்டு தடுத்து விட
யாரிருந்தார் இன்றுவரை.

நாளையும் புதிதாக ஒரு
புதைகுழி தோன்றலாம்.
எலும்புத் துண்டொன்று
மண்ணில் மிதந்தால் மட்டுமே!

நதுநசி

The post எலும்புத் துண்டொன்று மண்ணில் மிதந்தால் | நதுநசி appeared first on Vanakkam London.

By admin