பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், ஷக்கீல் அக்தர்
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
இந்திய பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்திய ‘ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த்’ போர் விமானங்களின் உள்நாட்டுத் தயாரிப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது. (ஸ்டெல்த் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ‘ரகசிய’ என்று அர்த்தம். எதிரிகளே அறியாத வகையில் அவர்களின் ரேடார்களுக்கு சிக்காமல் எதிரி நாட்டிற்குள் ஊடுருவக் கூடியவை)
இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களை உருவாக்கியுள்ளன.
இந்திய பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, இது இந்திய விமானப்படையின் திறனை அதிகரிக்கும் ஒரு பெரிய திட்டம் ஆகும். தனியார் நிறுவனங்களும் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ‘மேம்பட்ட நடுத்தர போர் விமானம்’ (AMCA) மாதிரிக்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதன் பொறுப்பு இந்திய அரசின் ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சிக்கு (ADA) வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் செயல்படும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி இந்த திட்டத்தை செயல்படுத்தும்.
“இந்த திட்டம் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தின் சோதனை மாதிரியை உருவாக்க நாட்டின் நிபுணத்துவம், திறன்கள் மற்றும் திறனைப் பயன்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாகும்” என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வான்வெளித் துறையில் இந்தியா தன்னிறைவு அடைவதில் இது ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அரசுக்கு சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை தயாரிப்பதில் அனுபவம் பெற்றுள்ளது. இந்தியாவின் முதல் இலகு ரக போர் விமானமான தேஜஸை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது.
தற்போது ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தை உருவாக்கும் பொறுப்பு ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
தனியார் பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனங்களும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து இந்த உள்ளூர் திட்டத்தில் சேருவதால் இது சாத்தியமாகும் என்று இந்திய பாதுகாப்பு நிபுணர்கள் நம்புகின்றனர்.
இந்தியாவில், ‘டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட்’ என்பது பாதுகாப்புத் துறைக்கான விமானங்களை உற்பத்தி செய்வதிலும், அசெம்பிள் செய்வதிலும் நிபுணத்துவம் பெற்ற ஒரு தனியார் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தின் வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கு மார்ச் 2024 இல் பாதுகாப்புக்கான இந்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியன் ஏர் ஷோவில் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தின் மாதிரியை ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி காட்சிப்படுத்தியிருந்தது. இது ஒற்றை இருக்கை, இரட்டை என்ஜின் கொண்ட போர் விமானமாக இருக்கும்.
இதுதொடர்பாக தயாரிக்கப்பட்ட திட்டத்தின்படி, 2035 ஆம் ஆண்டில் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் விமானங்களின் தயாரிப்பு தொடங்கும் என்றும், ஆரம்பத்தில் குறைந்தது 120 விமானங்கள் தயாரிக்கப்படும் என்றும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டம் இந்தியாவுக்கு எவ்வளவு முக்கியமானது, இந்திய பாதுகாப்பு வல்லுநர்கள் இதை எவ்வாறு பார்க்கிறார்கள்?
பட மூலாதாரம், Getty Images
‘ஸ்டெல்த்’ தொழில்நுட்பம் என்றால் என்ன?
அலெக்ஸ் பிட்சாஸ் அட்லாண்டிக் கவுன்சிலில் ஒரு மூத்த ஆராச்சியாளர் மற்றும் பாதுகாப்பு, வான்வெளி உள்ளிட்ட உயர் தொழில்நுட்ப துறைகளில் நடைபெறும் டிஜிட்டல் மாற்றம் குறித்தும் பயங்கரவாத எதிர்ப்பு குறித்தும் நிபுணத்துவம் பெற்ற முன்னாள் பென்டகன் அதிகாரி ஆவார்.
பிபிசியின் முன்சா அன்வரிடம் பேசிய அவர், ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களின் முக்கிய அம்சம் “ஸ்டெல்த் தொழில்நுட்பம்” ஆகும் என்று குறிப்பிட்டார். ” இது விமானத்தின் ரேடார் குறுக்குவெட்டு மற்றும் வெப்ப கண்டறிதலைக் குறைக்கிறது, இதனால் விமானத்தின் இருப்பை ரேடாரால் கண்டறிவது மிகவும் கடினம்” என்றார்.
அலெக்ஸ் பிட்சாஸின் கூற்றுப்படி, இந்த விமானங்கள் ஆயுத தளவாட அமைப்புகள், எளிதாக திசை மாற்றி இயக்கும் திறன் மற்றும் சூப்பர்சோனிக் வேகத்தில் பறந்து செல்லுதல் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளன.
“ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் அதிநவீன போர் விமானங்கள், அவை ஸ்டெல்த், சூப்பர் க்ரூயிஸ் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளன. ரேடாரைத் தவிர்க்கும் திறன் அவற்றுக்கு உள்ளது. இதன் காரணமாக எதிரிகளால் அவற்றின் இருப்பை எளிதில் கண்டுபிடிக்க முடியாது” என்று விளக்கினார் பிட்சாஸ்.
மேலும், “புதிய இயந்திர வடிவமைப்புகள், குளிரூட்டும் அமைப்புகள் மற்றும் உள்ளடங்கிய ஆயுத அறைகள் விமானத்தின் வெப்பநிலையை குறைக்கின்றன, இதனால் வெப்ப தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விமானத்தை கண்டறிவது கடினம்.” என்றார்.
ஸ்டெல்த் தொழில்நுட்பம், மேம்பட்ட இயக்கம் மற்றும் நீண்ட தூரத்தில் தாக்கக் கூடிய ஆயுதங்கள் போன்ற இந்த அம்சங்கள் அனைத்தும் இணைந்து ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை மிகவும் ஆபத்தானதாக மாற்றுகின்றன என்று பிட்சாஸ் கூறுகிறார்.
“அவற்றைக் கண்டறிந்து குறிவைப்பது மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்திற்கு கூட ஒரு பெரிய சவாலாக இருக்கும்” என்று அவர் கூறுகிறார்.
இந்தியாவுக்கு ஸ்டெல்த் போர் விமானங்கள் ஏன் முக்கியம்?
பாதுகாப்பு ஆய்வாளர் ராகுல் பேடி பிபிசியிடம் கூறுகையில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய இராணுவ மோதல் விமானப்படையின் முக்கியத்துவத்தை அல்லது எதிர்கால போரில் விமானப்படை மற்றும் போர் விமானங்களின் முக்கியத்துவத்தை தெளிவாகக் காட்டுகிறது என்றார்.
ராகுல் பேடி கூறுகையில், “இந்த சமீபத்திய மோதல் முக்கியமாக இரு நாட்டு விமானப்படைகள் சம்பந்தப்பட்டது. நான்கு நாட்கள் நீடித்த இந்த போரில் போர் விமானங்கள், டிரோன்கள், ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் பயன்படுத்தப்பட்டன. தற்போது இரு நாடுகளிடமும் உள்ள விமானங்கள் நான்காம் தலைமுறை விமானங்களாகும்.” என்றார்.
இந்திய பாதுகாப்பு அதிகாரிகளின் கவனம் விமானப்படை மீது குவிந்துள்ளதாகத் தெரிகிறது என்று அவர் கூறினார். ஸ்டெல்த் போர் விமான தயாரிப்பு திட்டமும் இந்த கொள்கையின் ஒரு பகுதியாகும். இதனால், தரைப்படையின் முக்கியத்துவம் சற்றே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மறுபுறம், பாதுகாப்பு ஆய்வாளர் பிரவீன் சாஹ்னி, ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களின் முக்கியத்துவம் இப்போது இந்தியாவுக்கு அதிகரித்துள்ளது. ஏனெனில் ‘(ஊடக ஆதாரங்களின்படி) ஜே -35 ஏ என்கற ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தை பாகிஸ்தானுக்கு சீனா வழங்க முடிவு செய்துள்ளது’ என்று கூறுகிறார்.
“பாகிஸ்தானிடம் இந்த போர் விமானங்கள் இருந்தால், இதுபோன்ற ஒரு ஸ்டெல்த் போர் விமானம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தின் ஒரு பகுதியாக இருக்கும். இது நடந்தால், அது இந்திய விமானப்படைக்கு கடினமான சூழ்நிலையாக இருக்கும். இது இரு நாடுகளுக்கும் இடையிலான விமானப்படை சமநிலையை பாகிஸ்தானுக்கு சாதகமாக மாற்றும். இந்தியாவிடம் தற்போது ஐந்தாம் தலைமுறை விமானங்கள் எதுவும் இல்லை.” என்பது அவரது கருத்து.
பட மூலாதாரம், Getty Images
இந்தியா ஒப்புதல் அளித்துள்ள ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத் திட்டத்தின் முன்மாதிரி அல்லது சோதனை மாதிரி 2028ஆம் ஆண்டில் தயாராக இருக்கும் என்று பிரவீன் சாஹ்னி கூறுகிறார்.
அவர் கூறுகையில், “ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத் திட்டம் தற்சார்புக்கு ஒரு நல்ல யோசனை. ஆனால் தற்போது அமைதியான சூழல் இல்லை. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிறகு, தற்போது போர் நிறுத்தம் மட்டுமே உள்ளது, அமைதி நிலைநாட்டப்படவில்லை” என்றார்.
மேலும், “எனவே இந்த சூழ்நிலையில், இந்தியா மிக விரைவில் வெளிநாடுகளில் இருந்து ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை வாங்க வேண்டியிருக்கும். (ஏனென்றால் இந்திய திட்டங்களின்படி, உள்நாட்டிலேயே தயாராகும் போர் விமானங்கள் அடுத்த 10 ஆண்டுகளில் கிடைக்கும்). ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத் திட்டம் நீண்ட காலத்திற்கு நல்லது, ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.” என்றார்.
ராகுல் பேடி கூறும்போது, “இந்த திட்டமும் இந்தியாவுக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது, ஏனெனில் இந்தியாவில் மிகப்பெரிய பிரச்னை விமானத்தின் என்ஜினை தயாரிப்பதுதான். இந்தியா இதுவரை எந்த போர் விமான இயந்திரத்தையும் தயாரித்ததில்லை. கூடிய விரைவில் இந்தியாவில் விமான என்ஜின் தயாராகிவிடும் என்ற நம்பிக்கையும் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் விமான என்ஜின் தயாரிப்பு குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடந்தது, ஆனால் இப்போது அந்த பேச்சுவார்த்தைகளும் பலவீனமடைந்துள்ளன” என்றார்.
இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமான திட்டம் நிறைவேற நிறைய காலம் எடுக்கும் என்றும் சர்வதேச விமான தயாரிப்பு நிறுவனங்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் பேடி கூறுகிறார்.
இந்தியாவுக்கு வேறு என்ன வாய்ப்புகள் உள்ளன?
பட மூலாதாரம், Getty Images
இந்திய பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, ஐந்தாம் தலைமுறை விமானங்களை இந்தியாவில் தயாரிக்க பல ஆண்டுகள் ஆகக்கூடும் என்பதால், அதுவரையிலான சவாலான காலகட்டத்தை சமாளிக்க வேறு தெரிவுகளை நாடலாம். சீனா தவிர, அமெரிக்காவின் எஃப் -35 மற்றும் ரஷ்யாவின் சுகோய் -57 ஆகிய இரு ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களில் ஒன்றை இந்தியா வாங்கலாம்.
சில மாதங்களுக்கு முன்பு, இந்திய பிரதமர் மோதியின் அமெரிக்க பயணத்தின் போது, இந்தியாவுக்கு எஃப் -35 போர் விமானங்களை விற்க அமெரிக்கா தயாராக உள்ளது என்று டிரம்ப் கூறியிருந்தார்.
ஆனால் ராகுல் பேடி, “இந்த விமானத்திற்கு இந்தியா ஆம் அல்லது இல்லை என்ற பதிலை அளிக்கவில்லை. இதற்கு இந்திய விமானப்படை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முதலாவதாக, இந்த விமானம் அதிக விலை உடையது, அது ஒரு மணி நேரம் பறக்க இந்திய மதிப்பில் சுமார் 30 லட்ச ரூபாய் செலவாகும். இரண்டாவதாக, விமானப்படை அதன் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புக்கு தனி ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.” என்று கூறினார்.
“போர் விமான தயாரிப்பில் சீனா ஒரு படி முன்னேறியுள்ளது, இப்போது சீனா ஆறாவது தலைமுறை இரட்டை என்ஜின் போர் விமானத்தை உருவாக்கி விட்டதாகக் கூறுகிறது. அதன் சோதனை கடந்த ஆண்டு டிசம்பரில் நடத்தப்பட்டது.” என்றார் பேடி.
ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததைத் தவிர, அவசரகால போர் உபகரணங்களை வாங்க இந்த மாதம் 4.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான நிதிக்கான ஒப்புதலையும் இந்திய அரசு அளித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின் கூற்றுப்படி, இந்தியா தனது வான் பாதுகாப்பை மேம்படுத்த ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த நிதியிலிருந்து சுமார் 50 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள டிரோன்களை வாங்க தயாராகி வருகிறது.
இந்த மாத தொடக்கத்தில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நான்கு நாள் மோதலின் போது, இரு தரப்பினரும் டிரோன்களைப் பயன்படுத்தினர்.
பிரவீன் சாஹ்னி, “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் ஏற்பட்டால், டிரோன்கள் இனி அத்தகைய பங்கு வகிக்காது. உண்மையான சண்டை இரு நாடுகளின் விமானப் படைகளுக்கு இடையிலானதாக இருக்கும். ‘ஆபரேஷன் சிந்தூரில்’ டிரோன்கள் முக்கிய பங்கு வகித்தன. இரு நாடுகளின் விமானப் படைகளுக்கும் இடையே ஒரு இரவு மட்டுமே சண்டை நடந்தது, ஆனால் ஒரு பெரிய சண்டை ஏற்பட்டால், அந்த சண்டை விமானப் படைகளுக்கு இடையிலானதாக இருக்கும்” என்கிறார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தற்போதைய நிலைமை காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தொடரும் என்பது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் அதிகரிக்கவும் கூடும் என்று சாஹ்னி கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு