• Sun. Jun 15th, 2025

24×7 Live News

Apdin News

ஏர் இந்தியா விமான விபத்தை நேரில் பார்த்த உள்ளூர் மக்கள் சொல்லும் பகீர் தகவல்

Byadmin

Jun 14, 2025


காணொளிக் குறிப்பு, ஏர் இந்தியா விமான விபத்து: உள்ளூர் மக்கள் சொல்லும் தகவல்

ஏர் இந்தியா விமான விபத்தை பார்த்த உள்ளூர் மக்கள் சொல்வது என்ன?

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்தவர்கள் மட்டுமல்ல விமானம் மோதிய மருத்துவமனை வளாகத்தில் இருந்தவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

“அது நெருப்புப் பந்து போல தீப்பிழம்பால் சூழப்பட்டிருந்தது. என்ன நடக்கிறது என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.” என உள்ளூர் வாசி ஒருவர் தெரிவித்தார்.

“நாங்கள் பார்த்தபோது, ​​விமானம் பாதி உடைந்து தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. மேலும் பலத்த சத்தம் கேட்டது. சுற்றிலும் தீப்பிழம்புகள் இருந்தன. சில குழந்தைகளின் கால்களிலும், சிலரின் தலைகளிலும் காயங்கள் இருந்தன.” என மற்றுமொரு உள்ளூர்வாசி கூறினார்.

பிபிசி செய்தியாளர் இஷாத்ரிதா லஹிரி, விபத்து நடந்த பகுதியில் இருந்து நேரலை மேற்கொண்டார்.

அவர், “நாம் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்திற்கு மிக அருகில் இருக்கிறோம். எனக்குப் பின்னால் விமானம் விபத்துக்குள்ளான விடுதியை நீங்கள் காணலாம். உள்ளே, விமானத்தின் சில பகுதிகள் கிடப்பதை இன்னும் காணலாம். நாங்கள் காலையிலிருந்து இங்கு இருக்கிறோம், உள்ளூர் மக்களிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். இவர்கள்தான் முதலில் மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள்” என்றார்.

“விமானத்தின் பாதி வெடித்து, பிஜே மெடிக்கலின் மெஸ்ஸில் விழுந்தது, மற்ற பாதி முன்னால் இருந்த கட்டடத்தில் மோதியது. நாங்கள் அங்கிருந்து மூன்று அல்லது நான்கு மருத்துவர்களை மீட்டோம். மீதமுள்ளவை இறந்த உடல்கள். யாரையாவது காப்பாற்றும் வகையில் ஆம்புலன்ஸ்களுக்கு எடுத்துச் செல்ல உதவினோம். பல உடல்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. சிறிது தொட்டாலும் சதை அமுங்கிவிடும். அவற்றைத் தூக்க முயற்சித்தபோது, ​​விரல்கள் சதைக்கு உள்ளேசென்றன. அவை முற்றிலும் எரிந்திருந்தன. உடல்கள் கறு ப்பு நிறமாக மாறிவிட்டன. எங்கள் உடை, கையுறைகள் கூட முற்றிலும் கருகிவிட்டன” என உள்ளூர்வாசியான தர்மேந்திரா தெரிவிக்கிறார்.

விபத்து நடந்தபோது மதியம் 1:30 மணியளவில், புயல் வருவது போல முதலில் பலத்த காற்று வீசியதாக உள்ளூர் வாசியான கீதேபென் தெரிவிக்கிறார். “பின்னர் பலத்த சத்தம் வந்தது. இவ்வளவு பெரிய சத்தம் என்ன என்று நினைத்தேன். ஒரு பையன் விமானம் விபத்துக்குள்ளாகிவிழுந்ததாகக் கத்தினார். நாங்கள் மாடிக்கு விரைந்தோம். குழந்தைகளை வெளியே இருக்கச் சொன்னோம். புகை இருந்தது, புகை மட்டுமே இருந்தது, என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ள முடியவில்லை. என் வாழ்க்கையின் 50 ஆண்டுகளில், இதுபோன்ற ஒன்றை பார்ப்பது இதுவே முதல் முறை.” என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin