0
மியான்மரில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு இடம்பெற்று ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்த நாடு இன்னும் “மோசமான சூழ்நிலையையும், ஆழ்ந்த நெருக்கடியையும்” எதிர்கொள்வதாக இங்கிலாந்து வெளியுறவுச் செயலாளர் கவலை தெரிவித்துள்ளார்.
இந்த ஆட்சிக் கவிழ்ப்பின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (பெப். 01), மியான்மர் மக்களுக்கு ஆதரவளிப்பதில் இங்கிலாந்தின் உறுதிப்பாட்டை யெவெட் கூப்பர் (Yvette Cooper) மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதிலிருந்து, மியான்மரில் பரவலான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து அவர் வெளியிட்ட கருத்தில், ஆங் சான் சூகி (Aung San Suu Kyi) தலைமையிலான ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இராணுவம் அகற்றியதன் மூலம், மக்களின் விருப்பம் தலைகீழாக மாற்றப்பட்டு, அவர்களின் அரசியல் சுதந்திரம் பறிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டில் மட்டும், மியான்மர் நாட்டில் 1.4 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இங்கிலாந்து மனிதாபிமான உதவிகளை வழங்கியதாகவும், மேலும் 1.3 மில்லியன் மக்களுக்கு சுகாதார சேவைகள் கிடைக்க உதவியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், மியான்மரில் நிலவும் நிலைமைகள் இன்னும் “மோசமாகவே உள்ளன” என்றும், அந்நாட்டு மக்கள் தொடர்ந்தும் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.