பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க. போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு ஆர்சிபி அணி 4வது முறையாக தகுதி பெற்றுள்ளது. முலான்பூரில் நடந்த ஐபிஎல் டி20 தொடரின் ப்ளே ஆஃப் சுற்றில் முதல் தகுதி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்சிபி அணி.
2009, 2011, 2016ம் ஆண்டுகளில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆர்சிபி ஏறக்குறைய 9 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பைனலில் விளையாடுகிறது.
அது மட்டுமல்ல கடந்த 6 சீசன்களில் 5வது முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அதில் 3வது இடத்தை ஒருமுறையும் பிடித்திருந்தது. ஆனால். இந்த முறை பைனலுக்கும் முன்னேறி தன்னை இன்னும் உயர்த்திக் கொண்டிருக்கிறது ஆர்சிபி அணி. நடப்பு சீசனில் ஆர்சிபி வெற்றிமேல் வெற்றி பெற காரணமான புதிய அணுகுமுறை என்ன?
ஒருதரப்பான ஆட்டம்
வலுவான அணிகள் மோதும் ப்ளே ஆஃப் சுற்று ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு நேற்றைய ஆட்டம் ஏமாற்றம் அளித்திருக்கும். அதுவும், பஞ்சாப் அணி சொந்த மண்ணில் நடக்கும் ஆட்டத்தில் சொற்ப ரன்களில் சுருண்டு விடும் என்று அந்த அணி ரசிகர்கள் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் ஹேசல்வுட், சூயஷ் சர்மா, யஷ் தயால் ஆகியோரின் அபார பந்துவீச்சால் பஞ்சாப் கிங்ஸ் அணி 101 ரன்களில் ஆல் அவுட்டாகிவிட்டது. ஐபிஎல் தடைபட்ட ஒரு இடைவெளியில் தாயகம் சென்றுவிட்டதால், ப்ளே ஆஃப் சுற்றுக்கு வருவாரா என சந்தேகிக்கப்பட்ட ஹேசல்வுட் 3 விக்கெட்டுகளை சாய்த்து பஞ்சாப் சரிவுக்கு முக்கியக் காரணமானார்.
பைனலுக்கு முன்னேறக் கிடைத்த அருமையான வாய்ப்பு என்று பயன்படுத்திக் கொண்ட ஆர்சிபி, ஃபில்சால்ட் எனும் பிரம்மாஸ்திரத்தை ஏவி, 10 ஓவர்களுக்குள்ளேயே வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
ஆர்சிபி 10 ஓவர்களில் 2 விக்கெட்இழப்புக்கு 106 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஆர்சிபி தொடக்க ஆட்டக்கார்ர பில் சால்ட் 23 பந்துகளில் அரைசதம் அடித்து 56 ரன்களுடனும், கேப்டன் பட்டிதர் 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
பட மூலாதாரம், Getty Images
பஞ்சாப் தோல்விக்கு காரணம் என்ன?
முலான்பூரில் நேற்று போட்டி நடந்த ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கும், பவுன்ஸருக்கும் சாதகமாக இருந்தது. அதை முதல் ஓவரிலேயே ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் கண்டுபிடித்து, ஆடுகளத்தின் தன்மையை சக பந்துவீச்சாளர்களுக்கு கடத்திவிட்டனர். பந்து நன்றாக ஸ்விங் ஆகிறது, பவுன்ஸரும் ஆகிறது என்பதால், அடித்துஆட முற்பட்டால் விக்கெட்டை இழந்துவிடுவார்கள் ஆதலால் லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீச வேண்டும் என்பதில் அவர்கள் குறியாக இருந்தனர்.
புவனேஷ்வர் குமார் வழக்கமான ஆடுகளத்திலேயே புதிய பந்தில் ஸ்விங் செய்யக்கூடியவர், இதுபோன்ற ஆடுகளத்தில் பேட்டர்களை திணறடித்துவிடுவார். அதைத்தான் நேற்றும் செய்தார். யஷ் தயால் தனது மிதவேக ஸ்விங்கை வெளிப்படுத்தி அடுத்தடுத்து விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
ஹேசல்வுட் மிகவும் கடினமான லென்த்தில் பந்துவீசினார். ஏற்கெனவே ஸ்ரேயாஸ் அய்யரை 3 முறை ஆட்டமிழக்கச் செய்திருந்த ஹேசல்வுட் 4வது முறையாக நேற்றும் அவரது விக்கெட்டை எடுத்தார். ஹேசல்வுட் வீசிய 3 ஓவர்களிலும் தலா ஒரு விக்கெட் என 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
சுழற்பந்துவீச்சாளர் சூயஷ் சர்மா, ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் பந்துவீச்சை மாற்றவில்லை. பேட்டர்கள் சிறிது கவனம் தவறினாலும் ஸ்டெம்ப் சிதறிவிடும் என்ற ரீதியில்தான் சூயஷ் சர்மாவின் கூக்ளி, பந்துவீச்சு இருந்தது. இதனால் சூயஷ் சர்மாவின் பந்துவீச்சில் பெரிய ஷாட்டுக்கு முயன்று தவறவிட்டவர்கள் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தனர்.
பட மூலாதாரம், Getty Images
ஆடுகளத்தின் தன்மையை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணிக்கு தொடர் நெருக்கடியை கொடுத்து ஆர்சிபி அணி திக்குமுக்காடச் செய்தது.
பஞ்சாப் அணியினர் லீக் போட்டிகளை அணுகியதைப் போலவே ஒரே மாதிரியான ஆட்டத்தை ஆடியது மிகப்பெரிய தவறாகும். குறிப்பாக அனுபவம் வாய்ந்த ஸ்ரேயாஸ் அய்யர் அதுபோன்ற ஷாட்டை ஹேசல்வுட் பந்தில் அடித்திருக்கத் தேவையில்லை. ரன்ரேட் அழுத்தம், பவர்ப்ளே ஓவர்களை கோட்டை விடுகிறோம் என்ற அழுத்தம்தான் பஞ்சாப் கிங்ஸ் வீரர்களை பெரிய ஷாட்களை அடிக்கத் தூண்டியது. அதுமட்டுமல்ல பஞ்சாப் அணி வீரர்களை தவறு செய்யத் தூண்டி, தங்கள் வலையில் ஆர்சிபி பந்து வீச்சாளர்கள் விழ வைத்தனர்.
உண்மையில் ஆட்டத்தின் முக்கிய வித்தியாசம் என்னவென்றால், ஆடுகளத்தின் தன்மையை முதல் ஓவரிலேயே ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் புரிந்து கொண்டனர். ஆனால் கடைசிவரை பஞ்சாப் அணியினரால் ஆடுகளத்தை புரிந்து கொள்ள முடியாததுதான் இந்த ஆட்டத்தின் முக்கிய வேறுபாடாகும்.
17 ஆண்டுகளாக தீராத தாகம்
ஆர்சிபி அணி 4வது முறையாக பைனலுக்குள் நுழைந்துள்ளது. 18 சீசன்களில் 10 முறை ப்ளே ஆஃப்சுற்றுக்கு வந்துள்ள அனுபவம் கொண்ட ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றை எவ்வாறு அணுக வேண்டும் என்ற முதிர்ச்சியை வெளிப்படுத்தியது. அது மட்டுமல்ல ஆர்சிபி அணிக்கு ஐபிஎல் வரலாற்றில் பெரிய, ஆறாத தழும்பு இருக்கிறது. 17 ஆண்டுகளாக ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியாத தாகம் அந்த அணியைத் துரத்தி வருகிறது.
ஒருமுறை அல்ல இருமுறை இதற்கு முன் 3 முறை பைனலுக்கு முன்னேறி ஆர்சிபி கோப்பையை இழந்திருக்கிறது. இந்த முறை கோப்பையை வென்று 17 ஆண்டு தாகத்தை தணிக்கும் வேட்கையுடன் ஆர்சிபி வீரர்கள் இருக்கிறார்கள்.
பட மூலாதாரம், Getty Images
மறக்க முடியாத காயம்
2016 சீசனின் இறுதிப்போட்டியை ஆர்சிபி மறந்திருக்காது. கிறிஸ் கெயில், விராட் கோலி, டீவில்லியர்ஸ் இருந்தவரை ஆர்சிபி பக்கம் இருந்த ஆட்டம் அதன்பின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டுபோல் சரிந்து, 9 ரன்களில் கோப்பையை இழந்தது ஆர்சிபி.
ஆர்சிபி அணி அப்போது முடிவெடுத்தது, இனிமேல் குறிப்பிட்ட சில வீரர்களை நம்பி அணி இருக்கக் கூடாது, பேட்டிங்கில் ஆழத்தை கடைசி வீரர்கள் வரை கொண்டு செல்ல தீர்மானித்தது. அதன்படியே வீரர்களை ஒவ்வொரு ஏலத்திலும் தேர்ந்தெடுத்து பரிசோசித்துப் பார்த்தது. அப்படித்தான் 2024 ஏலத்தில் வீரர்களை சரியாகத் தேர்ந்தெடுத்ததால்தான் வெளி மைதானங்களில் 7 போட்டிகளிலும் ஆர்சிபி அணியால் வெல்ல முடிந்தது.
“ஈ சாலா கப் நமதே” என்ற வாசகத்தை நனவாக்கும் நாளை நோக்கி நம்பிக்கையுடன் ஆர்சிபி நகர்ந்திருக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
2024 சீசனில் திட்டமிடல்
நவம்பரில் ஐபிஎல் ஏலம் நடப்பதற்கு முன் ஆர்சிபி அணியின் இயக்குநர் மோ போபத் தங்களது அணியின் பயிற்சியாளர் ஆண்டி பிளவர், மென்ட்டர் தினேஷ் கார்த்திக், பந்துவீச்சுப் பயிற்சியாளர் மாலோலன் ரங்கராஜன் ஆகியோருக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியதாக கிரிக்இன்போ தெரிவித்துள்ளது.
“வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்று பார்க்காதீர்கள், அவர்கள் நமது அணிக்காக எப்படி விளையாடுவார்கள் என்று பார்த்து தேர்ந்தெடுங்கள்” என்று அவர் அறிவுறுத்தியதாக அந்த செய்தி கூறுகிறது.
வீரர்கள் தேர்வில் கவனம்
புகழ் பெற்ற வீரர்களை கோடிக்கணக்கில் வாங்குவதைவிட, சரியான வீரர்களை, சரியான இடத்துக்கு வாங்க வேண்டும் என்ற கொள்கையை ஏலத்தின் போது ஆர்சிபி அணி கடைபிடித்தது. இதுதான் ஆர்சிபி பைனலுக்கு செல்ல வேண்டும், கோப்பையை வெல்ல வேண்டும் என்ற திட்டமிடலுக்கு அடித்தளமாக அமைந்தது.
ஆர்சிபியின் நோக்கம், திட்டம், பாதையை தெளிவாக வைத்துக் கொண்டு ஏலத்தில் களமிறங்கியது. வீரர்களின் பெயருக்கும், புகழுக்கும் கவனத்தைச் செலுத்தாமல் அவர்களின் ஸ்ட்ரைக் ரேட், சராசரி, பவுண்டரி அடிக்கும் சதவீதம், சிக்ஸர் அடிக்கும் திறமை ஆகியவற்றையும், பவர்ப்ளே, டெத்ஓவர், நடுப்பகுதியில் எவ்வாறு பந்து வீசுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு ஏலத்தில் பதற்றப்படாமல் பேட்டர்களையும், பவுலர்களையும் ஆர்சிபி தேர்ந்தெடுத்தது.
ஏற்கெனவே கோலி, பட்டிதார், யஷ் தயால் தக்கவைக்கப்பட்டனர். டூப்பிளசிஸுக்கு 40 வயதாகிவிட்டால் தங்களின் திட்டத்துக்கு சரிவரமாட்டார் என்பதால் அந்த அணி கழற்றிவிட்டது.
பட மூலாதாரம், Getty Images
சால்ட் எனும் பிரம்மாஸ்திரம்
2024 சீசனில் வில் ஜேக்ஸின் 41பந்துகளில் சதம் அடித்த ஆட்டம் ஆர்சிபியை கவர்ந்ததால் அவரை கழற்றிவிட மனமில்லை இருப்பினும் பில் சால்ட் ஏலத்தில் வந்தவுடன் ஜேக்ஸைவிட சிறந்த அதிரடி பேட்டரான சால்டை ரூ11 கோடிக்கு எடுத்து தன்னுடைய திட்டத்தை செயல்படுத்தியது ஆர்சிபி.
மென்டர் தினேஷ் கார்த்திக் ஒருமுறை கூறுகையில் ” பில் சால்டின் திறமை என்னவென்றால், எந்த நல்ல ஓவரிலும், பெரிய அளவில் ரன் குவித்துவிடுவார். அதனால்தான் ரூ.11.25 கோடிக்கு அவரை வாங்கினோம்” என்று தெரிவித்தார்.
அது உண்மைதான் இந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக 331 ரன்கள் எடுத்து, 171 ஸ்ட்ரைக் ரேட்டிலும் சால்ட் ஆடி வருகிறார்.
மிட்ஷெல் ஸ்டார்க், கம்மின்ஸ் என உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் யார் பந்துவீசினாலும் சால்டின் அதிரடி ஆட்டம் தெறிக்கவிட்டது. இந்த சீசனிலும் கோலி,-சால்ட் பார்ட்னர்ஷிப்தான் 3வது அதிகபட்ச ரன்கள் சேர்த்த பார்ட்னர்ஷிப்பாக உள்ளது. ப்ளே ஆஃப் சென்ற அணிகளில் அதிகபட்ச ரன்ரேட் வைத்திருக்கும் அணியாகவும் ஆர்சிபி இருக்கிறது. இதன் மூலம் ஆர்சிபி தனது திட்டத்தை சரியாக செயல்படுத்தத் தொடங்கியது.
பட மூலாதாரம், Getty Images
பிரிக்க முடியாத கோலியும் ஆர்சிபியும்
விராட் கோலி ஆர்சிபி அணிக்காக எப்போதுமே தனது முழுமையான பங்களிப்பை வழங்கக் கூடியவர். இந்த சீசனிலும் 600 ரன்களை நோக்கி நகர்ந்துவிட்டார்.
அதிலும் கடந்த சில சீசன்களைவிட, இந்த சீசனில் அதிரடியான பேட்டிங், 170க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட் என அணி நிர்வாகம் தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறதோ அதை முழுமையாக கோலி வழங்கி வருகிறார்.
பட மூலாதாரம், Getty Images
நடுவரிசைக்கு வீரர்கள் தேர்வு
அதேபோல தேவைப்படும் நேரத்தில் சிறந்த பேட்டிங்கை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் வீரர்களை பார்த்துப் பார்த்து ஆர்சிபி தேர்ந்தெடுத்தது. ஏலத்தில் ஜிதேஷ் சர்மா, மும்பை அணி கழற்றிவிட்ட டிம் டேவிட், ரோமாரியா ஷெப்பர்ட் ஆகியோரை வாங்கி, அவர்களை நடுவரிசையில் ஆர்சிபி பயன்படுத்தியது.
இதில் டிம் டேவிட் 26 பந்துகளில் பஞ்சாபுக்கு எதிராக இந்த சீசனில் அரைசதம் அடித்து தனது தேர்வை நியாயப்படுத்தினார். மும்பை அணி வில் ஜேக்ஸை வாங்கிய போது, ஆர்சிபி டிம் டேவிட்டை எடுத்துக்கொண்டது. ஜிதேஷ் சர்மாவை வாங்கி, அவருக்கு பேட்டிங்கிலும், விக்கெட் கீப்பிங்கிலும் தினேஷ் கார்த்திக், ஆன்டி பிளவர் இருவரும் பயிற்சி அளித்து செதுக்கினர்.
சீசனுக்கு முன்பே கேப்டனை முடிவு செய்த ஆர்சிபி
கேப்டன் யார் என்பதை முடிவுசெய்துதான் ஆர்சிபி அணி சீசனையே எதிர்கொண்டது. ரஜத் பட்டிதார்தான் அணியை சிறப்பாக வழிநடத்தக் கூடியவர் என்பதை அறிந்து அவரை 2024 சீசனிலேயே அடையாளம் கண்டது ஆர்சிபி நிர்வாகம்.
ஆனால் அவரின் கேப்டன்சியை பரிசோதிக்கவும், கண்காணிக்கவும் வேண்டுமே என்பதற்காக காத்திருந்தனர். மத்தியப் பிரதேச அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற பட்டிதார் முஸ்டாக் அலி கோப்பையில் வழிநடத்தினார். மத்தியப்பிரதேச பயிற்சியாளராகவும், கொல்கத்தா அணியின் பயிற்சியாளராகவும் இருந்த சந்திரகாந்த் பண்டிட்டிடம் பட்டிதாரின் திறமை குறித்து இருவரும் கேட்டு அறிந்தனர். முஸ்தாக் அலித் தொடரில் 2வது அதிக ரன் குவித்த வீரராகவும் பட்டிதார் இருந்தார். இது கேப்டனாக்க கூடுதல் உத்வேகத்தை ஆர்சிபி நிர்வாகத்துக்கு அளித்தது.
பட்டிதாரை தேர்ந்தெடுக்க கோலியும் முழு ஆதரவு அளித்தார். முதல்முறையாக ஆர்சிபி அணிக்கு கேப்டனாக சூப்பர் ஸ்டார் வீரர் அல்லாத ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பட மூலாதாரம், Getty Images
பட்டிதாரின் சாதனைகள்
கேப்டனாகப் பொறுப்பேற்ற பட்டிதார் முதல் ஆட்டத்திலேயே கொல்கத்தா அணியை 2019ம் ஆண்டுக்குப் பின் ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து ஆர்சிபி வீழ்த்த முக்கியக் காரணமாக அமைந்தார். சிஎஸ்கே அணியை சென்னை சேப்பாக்கத்தில் 2008-ஆம் ஆண்டுக்குப் பின் வீழ்த்தவும் பட்டிதார் தலைமை காரணமாக அமைந்தது. 2015-ஆம் ஆண்டுக்குப்பின் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை அணியை வீழ்த்தியது ஆர்சிபி. இவை அனைத்தும் பட்டிதார் கேப்டன்ஷிப் வந்தபின்புதான் நடந்தது.
அது மட்டுமல்லாமல் கொல்கத்தா அணிக்கு எதிராக ரஸலை வீழ்த்த சூயஷ் சர்மாவை பந்துவீச அழைத்தது, இதனால் 190 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் 172 ரன்களில் கொல்கத்தா சுருண்டது. சிஎஸ்கேவுக்கு எதிராக கடைசி 3 ஓவர்களில் 34 ரன்களை பந்துவீச்சாளர்களை வைத்து டிபெண்ட் செய்தது. குறிப்பாக 18வது ஓவரில் சூயஷ் சர்மாவை பந்துவீச துணிச்சலாக அழைத்ததது, யஷ் தயாலை கடைசி ஓவர் வீச வைத்தது ஆகியவை பட்டிதாரின் தீர்க்கமான முடிவுக்கு உதாரணமாக இருந்தன.
பட மூலாதாரம், Getty Images
இளைஞர்களுக்கு வாய்ப்பு
காயத்தால் பட்டிதார் விளையாடாத நிலையில் களத்தில் கேப்டன்ஷிப் வாய்ப்பு மற்றொரு இளம் வீரர் ஜிதேஷ் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. ஜிதேஷ் சர்மாவும் லக்னெள அணிக்கு எதிராக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆர்சிபி அணி முதல் தகுதிச்சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்தார்.
ஜிதேஷ் சர்மா பேட்டிங்கில் மிகப்பெரிய மாற்றமும், சூழலுக்கு ஏற்றபடி பேட்டிங் செய்யும் திறனும் வளர்வதற்கு பயிற்சியாளர் ஆன்டிபிளவர், மென்டர் தினேஷ் கார்த்திக் காரணம் என ஜித்தேஷ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி அணி மற்றொரு வீரர் மீது அதிக நம்பிக்கை வைத்து ஏலத்தில் எடுத்தது தேவ்தத் படிக்கல். 3வது வரிசையில் விளையாட சரியான வீரர் தேவை என்ற போது ஏற்கெனவே அணியில் இருந்த படிக்கலை வாங்கி மீண்டும் அணிக்குள் கொண்டு வந்தது. இந்த வாய்ப்பையும் படிக்கல் சரியாகப் பயன்படுத்தி 247 ரன்கள் இந்த சீசனில் சேர்த்தார், 150 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். இதற்கு முன் படிக்கல் ஸ்ட்ரைக் ரேட் 130 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பட மூலாதாரம், Getty Images
துருப்புச்சீட்டு ஹேசல்வுட், புவி
ஆர்சிபி அணியின் முக்கியத் திட்டங்களில் ஒன்று ஹேசல்வுட், புவனேஷ்வர் குமாரை வாங்கியது. இருவருமே பந்தை ஸ்விங் செய்வதிலும், புதிய பந்தில் பந்துவீசுவதில் தேர்ந்தவர்கள் என்பதால் இருவரையும் வாங்கியது. ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த், கேஎல்ராகுல், வெங்கடேஷ் அய்யர் ஆகியோருக்கு கோடிக்கணக்கில் ஏலத்தில் போட்டி நிலவியபோதும் அதில் ஆர்சிபி கலந்து கொள்ளாமல் தனக்கான வீரருக்காக காத்திருந்தது.
ஹேசல்வுட், புவனேஷ்வர் பெயர்கள் அறிவிக்கப்பட்டதுமே களத்தில் இறங்கிய ஆர்சிபி 2 பேரையும் வாங்கியது. பவர்ப்ளேயில் சிறந்த எக்னாமி வைத்திருக்கும ஹேசல்வுட்டை முடிந்தவரை விலைகொடுத்து ஆர்சிபி வாங்கியது. அதற்கு ஏற்றபடி இதுவரை ஹேசல்வுட் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், 8.44 எக்னாமி வைத்திருக்கிறார். டெத் ஓவர்களில் சராசரியாக 6 ரன் மட்டுமே ஹேசல்வுட் விட்டுக் கொடுத்துள்ளார்.
சுழற்பந்துவீச்சு மீதும் கவனம்
இது தவிர க்ருணால் பாண்டியா, ஆல்ரவுண்டர்களுக்காக லிவிங்ஸ்டோன், சூயஷ் சர்மா ஆகியோருடன் சுழற்பந்துவீச்சையும் பலப்படுத்தியது. அதிலும் க்ருணால் பாண்டியா இந்த சீசனில் 15விக்கெட்டுகளை வீழ்த்தி தனது தேர்வை நியாயப்படுத்தியுள்ளார்.
ஒட்டுமொத்தத்தில் ஆர்சிபி அணி இறுதிப்போட்டிக்கு வந்தது என்பது அந்த அணியின் நீண்டகாலத் திட்டமிடலின் வெற்றிதான். ஆர்சிபி அணியின் வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு, பேட்டிங் என எந்த துறையையும் பெரிதாக குறைகூற முடியாத வகையில், எந்த சூழலையும் சமாளித்து ஆடக் கூடிய வீரர்களைக் கொண்டதாக அணியை ஆர்சிபி மாற்றியது.
பட மூலாதாரம், Getty Images
வீரர்களைப் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்து அணியைக் கட்டமைத்து, ப்ளேயிங் லெவனை ஒவ்வொரு போட்டிக்கும் சிறந்ததாக உருவாக்கி, அணியை பைனல் வரை வந்துள்ளது ஆர்சிபியின் வெற்றிகரமான திட்டமிடல்தான் என்பதில் சந்தேகமில்லை. இறுதிப்போட்டி வரை ஆர்சிபியின் திட்டமிடல் வெற்றியாக அமைந்துவிட்டது.
ஆர்சிபி மட்டுமல்லாது, அத்துடன் இணைந்து 17 ஆண்டுகளாக ஐ.பிஎல் கோப்பையை வெல்லும் தாகத்தில் உள்ள கோலியின் கனவும் இம்முறை நிறைவேறும் என்று அந்த அணி ரசிகர்கள் நம்பிக்கையுடன் இறுதிப்போட்டியை எதிர்பார்த்திருக்கிறார்கள்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு