15
லிபியாவிலிருந்து ஐரோப்பாவை நோக்கி சட்டவிரோதமாக புறப்பட்ட அகதிகள் படகு கடலில் கவிழ்ந்ததில் 4 பச்சிளம் குழந்தைகள் உட்பட 53 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் துயரச் சம்பவம், வட ஆப்பிரிக்க கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது.
நைஜீரியா, காம்பியா மற்றும் செனகல் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சிறிய ரப்பர் படகில் லிபியா கடற்கரையிலிருந்து இத்தாலியை நோக்கிப் பயணித்தனர். புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே படகின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் படகு கடலின் நடுவே நின்றுவிட்டது.
அந்த நேரத்தில் எழுந்த பெரிய அலைகள் படகை கடுமையாகத் தாக்கியதால், அது சமநிலையை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது. இதன் விளைவாக 53 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
தகவல் கிடைத்தவுடன் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 40 பேரை உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஆப்பிரிக்காவில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உள்நாட்டுப் பிரச்சினைகள் காரணமாக பலர் ஆபத்தான கடல் வழிப் பயணங்களை மேற்கொண்டு, ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் தேடுகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத சிறிய படகுகளில் அதிகமானவர்களை ஏற்றிச் செல்லும் காரணத்தால் இத்தகைய விபத்துகள் அடிக்கடி நடைபெறுகின்றன.