15
ஐரோப்பா தனது மக்களையும் மதிப்புகளையும் வாழ்க்கை முறையையும் பாதுகாக்க விரும்பினால், பாதுகாப்புத் துறையில் மேலும் உறுதியுடன் செயல்பட்டு, போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், உலகத் தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய அவர், ஐரோப்பா பாதுகாப்பு விஷயங்களில் தன்னிறைவு அடைய வேண்டிய அவசியம் இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ரஷ்யாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாக, இங்கிலாந்து தனது கேரியர் ஸ்ட்ரைக் குழுவை ஆர்க்டிக் மற்றும் High North பகுதிகளுக்கு அனுப்ப உள்ளதாக ஸ்டார்மர் அறிவித்தார். இந்த முயற்சியில் அமெரிக்கா, கனடா மற்றும் பிற நேட்டோ கூட்டணி நாடுகளும் இணைய உள்ளன என்றும் அவர் கூறினார்.
உக்ரைன் தொடர்பான எதிர்கால அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகு ரஷ்யாவின் மீளாயுதப்படை நடவடிக்கைகள் வேகமெடுக்கக்கூடும் என்பதால், ஐரோப்பா எதிர்கால அச்சுறுத்தல்களுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார். “இந்தக் காலத்தின் நாணயம் கடின சக்தி தான்; அதனால் நாம் அதை கட்டியெழுப்ப வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தேவையான சூழலில் ஐரோப்பிய கூட்டாளிகள் பாதுகாப்பு உறுதிப்பாட்டை பின்பற்றுவார்களா என்ற சந்தேகத்தை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஸ்டார்மர், நேட்டோவின் Article 5 பாதுகாப்பு உறுதிப்பாட்டிற்கான இங்கிலாந்தின் அர்ப்பணிப்பு “முன்பைப் போலவே வலுவாக உள்ளது” என்று உறுதியளித்தார்.