தென்காசி: தென்காசியில் மழை குறைந்து நீர்வரத்து சீராக இருந்ததால் ஒரு வாரத்துக்கு பின்னர் இன்று (ஜூன் 1) முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்துச் சென்றனர்.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை முதல் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியது.
கடந்த ஒரு வாரமாக மழை தீவிரம் அடைந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் பலத்த மழையும், பிற பகுதிகளில் லேசான மற்றும் மிதமான மழையும் பெய்தது. தொடர் மழையால் அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இந்நிலையில், நேற்று மழையின் தீவிரம் குறைந்தது.
இன்று காலை வரை 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம், நாலுமுக்கு பகுதியில் 16 மி.மீ., ஊத்து பகுதியில் 12 மி.மீ., மணிமுத்தாறு அணையில் 9.40 மி.மீ., காக்காச்சி பகுதியில் 7 மி.மீ., மாஞ்சோலையில் 4 மி.மீ., அம்பாசமுத்திரத்தில் 2 மி.மீ., பாபநாசம், நாங்குநேரியில் தலா 1 மி.மீ. மழை பதிவானது.
பாபநாசம் அணைக்கு விநாடிககு 1,719 கனஅடி நீர் வந்தது. 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் 2.65 அடி உயர்ந்து 121.15 அடியாக இருந்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 142.55 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 181 கனஅடி நீர் வந்தது. 45 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் 91.80 அடியாக இருந்தது. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 12 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 13.12 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 50.50 அடியாகவும் இருந்தது.
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்தது. குண்டாறு அணையில் 6.20 மி.மீ., கடனாநதி அணையில் 3 மி.மீ., ராமநதி அணை, சிவகிரியில் தலா 2 மி.மீ. மழை பதிவானது. குண்டாறு அணை முழு கொள்ளளவில் உள்ளது. கடனாநதி அணைக்கு விநாடிக்கு 171 கனஅடி நீர் வந்தது. 60 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 74.20 அடியாக இருந்தது.
ராம நதி அணைக்கு விநாடிக்கு 92 கனஅடி நீர் வந்தது. 10 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 78 அடியாக இருந்தது. கருப்பாநதி அணைக்கு விநாடிக்கு 74 கனஅடி நீர் வந்தது. 5 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 64.64 அடியாக இருந்தது. அடவி நயினார் அணைக்கு விநாடிக்கு 29 கனஅடி நீர் வந்தது. 5 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 100 அடியாக இருந்தது.
கனமழை எச்சரிக்கை காரணமாக கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முதல் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஒரு வாரமாக தொடர் மழை பெய்ததால் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடித்தது. இந்நிலையில், மழை குறைந்து நீர்வரத்து சீராக இருந்ததால் ஒரு வாரத்துக்கு பின்னர் இன்று முதல் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்துச் சென்றனர்.