• Sat. Jan 24th, 2026

24×7 Live News

Apdin News

‘ஒரு விநாடி அளவுக்கு துல்லியமான’ மாயன் நாட்காட்டி இன்று எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?

Byadmin

Jan 24, 2026


மாயன் நாட்காட்டி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாயன் மக்கள் தங்கள் வரலாற்றில் முக்கியமான தேதிகளைக் கொண்ட சில கல்வெட்டுகளை விட்டுச் சென்றுள்ளனர் (மையத்தில், மேலே)

பண்டைய மாயன்களின் கால அளவீடு வியப்பை ஏற்படுத்துவதாக இருந்துள்ளது.

பூஜ்ஜியத்தின் கருத்தாக்கம் உள்பட கணித அறிவு மற்றும் வானியலில் அவர்கள் பெரும் தேர்ச்சியைப் பெற்றிருந்தனர். இந்த ஞானம், அக்காலத்திய ஐரோப்பிய, கிழக்கத்திய கலாசாரங்களைவிட மிகவும் துல்லியமான காலக் கணக்கீட்டை மேற்கொள்ள அவர்களுக்கு உதவியது.

பண்டைய மெக்சிகன் வரலாறு குறித்துப் பேசும்போது அதிகம் மேற்கோள் காட்டப்படும் கல்வியாளர்களில் ஒருவர் பேராசிரியர் மிகுவல் லியோன் போர்ட்டிலா (1926-2019). அவர், மாயன்கள் ‘பிரபஞ்சத்தின் மர்மங்களைத் தெரிந்து கொள்வதில், அதன் சுழற்சிகளின் அர்த்தத்தையும் அளவையும் குறிப்பிடுவதில்” மிகுந்த அக்கறை கொண்டிருந்தனர் என்று விளக்கினார்.

“காலத்தைப் புரிந்துகொள்ள வேறு எந்த பண்டைய நாகரிகமும் இத்தனை விதமான நாட்காட்டிகளை, கணித அமைப்புகளை உருவாக்கவில்லை. மாயன் மக்கள் முடிந்தவரை காலத்தை துல்லியமாக அளவிடுவதற்காக, அதன் தொடர்ச்சியான சுழற்சிகளைப் பல கோணங்களில் ஆய்வு செய்ய மிகவும் கடினமாக உழைத்தார்கள்” என்று மெக்சிகோவின் தேசிய தன்னாட்சிப் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சியாளராக இருந்த போர்ட்டிலா, ‘மாயன்களின் காலவரிசை முயற்சிகள்’ என்ற தனது நூலில் எழுதியுள்ளார்.

இந்த நாட்காட்டி, ஓர் ஆட்சியாளரின் பிறப்பு அல்லது இறப்பு, ஒரு போர் அல்லது ஒரு நகரம் சரணடைதல் போன்ற தங்கள் வரலாற்றில் நடந்த முக்கியமான நிகழ்வுகளைப் பதிவு செய்ய அவர்களுக்கு உதவியதோடு, விவசாய சுழற்சிகள், சந்திரனின் நிலைகள் ஆகியவற்றைத் தீர்மானிக்கவும் உதவியது. பூமி குறித்தான அவர்களுடைய கண்ணோட்டத்தின்படி, ஒரு நாளின் அல்லது ஒரு நபரின் ஆற்றல் மீதான அவர்களின் நம்பிக்கையிலும் இது தாக்கம் செலுத்தியது.

By admin