10
காய்கறிகளில் பலராலும் விரும்பப்படாத ஒன்று பாகற்காய். அதன் கசப்பான சுவை காரணமாக பலர் அதை உணவில் சேர்க்காமல் தவிர்க்கிறார்கள். ஆனால், உண்மையில் உடலுக்கு தேவையான பல முக்கிய ஊட்டச்சத்துகள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் பாகற்காயில் நிறைந்து காணப்படுகின்றன.
ஆரோக்கியமான வாழ்க்கையை விரும்புபவர்கள், பாகற்காயை தவிர்க்காமல் உணவில் சேர்ப்பது மிக முக்கியம். ஆனால் கசப்பின் காரணமாக அதை சாப்பிட முடியாமல் இருப்பவர்கள், அதை சுவையாகவும் கசப்பு தெரியாத வகையிலும் சமைப்பது தான் சிறந்த தீர்வு.
பொதுவாக பாகற்காய் பொரியல் அல்லது சாம்பார் வடிவில் செய்வது வழக்கம். ஆனால் கர்நாடகாவில், பாகற்காயின் கசப்பை குறைத்து, புளிப்பு-கார சுவையுடன் ஒரு சிறப்பு குழம்பாக தயார் செய்வார்கள். இந்த பாகற்காய் புளி குழம்பு சுலபமாக செய்யக்கூடியது மட்டுமல்ல, மிகவும் ருசியானதும் கூட.
நீங்களும் கர்நாடகா ஸ்டைலில் பாகற்காய் புளி குழம்பை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய செய்முறையை பின்பற்றி வீட்டிலேயே செய்து பார்த்து, உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
– உளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன்
– எள் – 1 ஸ்பூன்
– சீரகம் – 1 ஸ்பூன்
– வெந்தயம் – 1/4 ஸ்பூன்
– துருவிய தேங்காய் – அரை கப்
– வர மிளகாய் – 8
– பாகற்காய் – 1 (சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கியது)
– புளி – ஒரு சிறிய எலுமிச்சை அளவு
– வெல்லம் – 1 மேசைக்கரண்டி
– உப்பு – தேவையான அளவு
– தண்ணீர் – தேவையான அளவு
தாளிக்க:
– எண்ணெய் – 3 ஸ்பூன்
– கடுகு – 1/2 ஸ்பூன்
– வர மிளகாய் – 1
– பெருங்காயம் – 1/4 ஸ்பூன்
– கறிவேப்பிலை – 1 கொத்து
– கொத்தமல்லி இலைகள் – அலங்கரிக்க
செய்முறை:
– பாகற்காயை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
– புளியை கரைத்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
– ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் உளுத்தம்பருப்பு, எள், சீரகம் மற்றும் வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
– பின்னர் வர மிளகாய் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும். தேங்காய் நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து ஆற விடவும்
– இந்த கலவை ஆறியதும் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும்.
– ஒரு குக்கரில் 2 ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். அதன் பின் கடுகு, வர மிளகாய் , பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
– பின்னர் பொடியாக நறுக்கியாய் பாகற்காயை சேர்த்து நன்றாக கிளறவும். பாகற்காய் பாதி வேகும் வரை வதக்கவும்.
– பின்னர் அரைத்த மசாலா, புளிச்சாறு, வெல்லம், உப்பு மற்றும் தண்ணீர் நன்றாக கொதிக்க விடவும்.
– அடுப்பை மிதமான தீயில் வைத்து 2 விசில் வரும் வரை பிரஷர் குக்கரில் வேகவைக்கவும்.
– பிரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து அதன் பதத்தை சரிபார்க்கவும். குழம்பு கெட்டியாகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
– இறுதியாக கொத்தமல்லி சேர்த்து கிளறினால் சுவையான கர்நாடகா ஸ்டைல் பாகற்காய் குழம்பு ரெடி!