• Tue. Mar 10th, 2026

24×7 Live News

Apdin News

கடல் கொண்டு சென்ற கலங்கரை | கமல் ஆபரன்

Byadmin

Mar 10, 2026


உன் நினைவின் நிழலடியில்
முழுதாய் உதிர்ந்து முடிந்தன ~ நீ
விடைகொண்ட பின்னான மாதங்கள் மூன்று,

வாய்த்திருக்கவே வேண்டாம் நண்பா
நீயில்லாது நிகழும் இந்நாட்கள்

நினைவோடு நிலைத்தன;
நினைத்தால் கேட்கிற குரலும்
மலர்ந்து சிரிக்கிற முகமும்.

எதனை நண்பா இணைவைக்க
வேண்டிநினைத்தாலும் குறையிலாத
நின் குணத்துக்கும்
நிறைந்த நின் வாழ்வுக்கும்..

நின்னைத்தவிர
நினைப்பதற்கெதுவுமில்லாது போனது நிலம்
அகலப்பொய்களில்
பொதியப் பார்க்கிறார்கள் நெருப்பை,

அடுத்தொன்றுமில்லாத காலம்;
திரும்புவதற்கிருந்த திசையெலாம்
அடுக்கி வைத்தாயிற்று நீ நின்ற நினைவுகளை.
அனுப்பி வைத்தாயிற்று உன்னோடே
திசைகாட்டி நட்சத்திரங்களை எல்லாம்.

ஆரம்பிக்காமலே முடிந்துபோன கனவுகள்
சொல்லாமல் முடிகின்ற கதைகள்.

ஒருநாளும் திரும்பாது உன்னோடு
போயே போயின
ஒத்திவைத்திருந்த புன்னகை நாட்கள்,

வலசையுற்றவை திரும்புமுன்னமே;
எரிகொண்டது காடு.
படித்த பாதியில் களவுபோனது
ஒற்றைப் பதிப்புக் கவிதை,

கடல்நடுவே நிற்கக் காணாமலே போனது;
ஒருநாளும்
அணையாதென்றிருந்த கலங்கரை.
சொல்லாமல் புறப்பட்டுப்போனது;
அழைக்காமலே
அருளிக் கொண்டிருந்த தெய்வம்.

அத்தனை துயர்கள் மேலும்
நீ போனநாளை வைத்தது காலம்
ஒருநாளும் தீராததாய்..

அழைக்கிற தெய்வங்கள் பாலெலாம்
உன்னை வைக்கிறேன்,
காலங்கள் முன்பே
கடல்கொண்டுவிட்ட கோயில்களுக்கு
கரையில் நின்று பூவிடுதல் போல..

கமல் ஆபரன்

கல் ஓயா வெள்ள அனர்த்தத்தில் அகால மரணமடைந்த பத்மநிகேதன் தணிகாசலம் அவர்களுக்கான அஞ்சலிக் கவிதை

By admin