மதுரை: “தமிழகத்தில் கோயில் விழாக்களில் எவ்வித பாகுபாடும் பார்ப்பதில்லை. கண்டதேவி தேரோட்டத்தில் சாதிய பாகுபாடு இல்லை. அனைவரும் சமமாக பாவிக்கப்படுகின்றனர்,” என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் கண்டதேவியைச் சேர்ந்த கேசவமணி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “கண்டதேவி ஸ்ரீ சொர்ண மூர்த்தீஸ்வரர் திருக்கோயில் சிவகங்கை தேவஸ்தானம் மற்றும் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்தக்கோயிலில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது என்றும், அனைத்து சமூக மக்களையும் இணைந்து அவர்கள் பங்களிப்புடன் திருவிழா நடத்த வேண்டும் என 2014-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு கண்டதேவி தேரோட்டத்தின் போது அனைத்து சமூக மக்களும் தேரின் வடத்தை பிடித்து இழுக்க டோக்கன் வழங்கப்பட்டது. இருப்பினும் முதல் மரியாதை பெறும் நோக்கத்தில் சில நாட்டார்கள் அவர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களை அதிகளவில் அழைத்துச் சென்று தேரின் வடத்தை பிடித்ததால் பிற சமூக மக்கள் தேரின் வடத்தை பிடித்து இழுக்க முடியாத சூழல் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவானது.
இந்த ஆண்டு ஜூலை 8-ல் கண்டதேவி தேரோட்டம் நடைபெறுகிறது. அப்போது பட்டியல் சமூகத்தினர் தேரின் வடத்தை பிடித்து இழுப்பதற்கு வசதியாக யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது என அதிகாரிகளிடம் மனு அளித்தோம். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கண்டதேவி கோயில் தேரோட்டத்தில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளாட் அமர்வில் இன்று (ஜூன் 24) விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், “கோயில் விழாவில் எவ்வித பாகுபாடும் இல்லை. கண்டதேவி கோயிலைப் பொறுத்தவரை ஒவ்வொரு சமூகத்துக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சாதிய பாகுபாடு பார்ப்பது இல்லை. அனைவரும் சமமாக பாவிக்கப்படுகின்றனர்,” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், “தமிழகத்தில் எங்குமே சாதிய பாகுபாடுகள் இல்லை என உறுதியாக சொல்ல முடியுமா? அரசியலுக்கு வேண்டுமென்றால் இப்படி நீங்கள் சொல்லலாம், நீதிமன்றத்தில் அப்படி சொல்லி ஏமாற்ற முடியாது. தமிழகத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இருப்பினும் சாதிய பாகுபாடு இன்னும் புழக்கத்தில் உள்ளது. கண்டதேவி கோயில் விவகாரத்தில் எவ்வித சாதிய பாகுபாடும் இல்லை என்பதை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும்.” என உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.