இங்கிலாந்தின் எக்ஸ்மவுத் (Exmouth) பகுதியில் தண்ணீரிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட, வெடிக்காத இரண்டாம் உலகப் போர் கால வெடிகுண்டு இன்று வெள்ளிக்கிழமை (16) கடலில் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து, எக்ஸ்மவுத்த் மற்றும் Plymouth பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை தற்காலிகமாக விட்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எக்ஸ்மவுத்த் மெரினாவைச் சுற்றிய பாதுகாப்பு வளைப்பு தற்போது 600 மீட்டராக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. முன்னதாக 400 மீட்டராக இருந்த இந்த வளைப்பு அகலப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் 500 வீடுகள் அந்தப் பகுதிக்குள் சேர்க்கப்பட்டுள்ளதாக கிழக்கு டெவோன் மாவட்ட கவுன்சில் (East Devon District Council) தெரிவித்துள்ளது.
இதனிடையே, பிளைமவுத்தின் மில்பே பகுதியில் உள்ள ஒரு கட்டிடத் தளத்தில் 50 கிலோ எடையுள்ள ஜெர்மன் SC50 வகை இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தைச் சுற்றி 100 மீட்டர் பாதுகாப்பு வளைப்பு அமைக்கப்பட்டுள்ளதுடன், நிலைமையை அதிகாரிகள் நெருக்கமாக கண்காணித்து வருகின்றனர்.
இடம்பெயர்ந்த மக்களுக்காக எக்ஸ்மவுத்த் ஓய்வு மையத்தில் தற்காலிக தங்குமிடம், தகவல் மற்றும் தேவையான ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது. நிலைமை தொடர்ந்து மாறிக்கொண்டிருப்பதால், பாதுகாப்பாகவும் விரைவாகவும் சிக்கலைத் தீர்க்க அனைத்து குழுக்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக உள்ளாட்சி நிர்வாகம் கூறியுள்ளது.
இராணுவ வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள், கூட்டாளி அமைப்புகளுடன் இணைந்து சாதனத்தை பாதுகாப்பாக அகற்றுவதற்கான சிறந்த வழியை மதிப்பீடு செய்து வந்தனர். அனைத்து விருப்பங்களையும் ஆராய்ந்த பிறகு, அதிக அலை நேரத்தில் வெடிகுண்டை கடலுக்கு கொண்டு சென்று அப்புறப்படுத்துவதே மிகப் பாதுகாப்பான தீர்வு என முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வளைப்பிற்குள் வசிக்கும் மக்கள் தற்காலிகமாக வீடுகளை விட்டு வெளியேறி நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். Devon and Cornwall Police அதிகாரிகள் அந்தப் பகுதியில் வீடு வீடாக சென்று தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர்.
பிளைமவுத்தில், மில்பே அகாடமி பல்லார்ட் ஹவுஸ் பள்ளி மற்றும் நகர சபை அலுவலகங்கள் இன்று மூடப்படும் என்றும், வெடிகுண்டு பாதுகாப்பாக அகற்றப்படும் வரை அருகிலுள்ள ஹோட்டலும் மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட ஸ்கேனிங் கருவிகள் அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளன. அவை வெடிகுண்டை பாதுகாப்பாக கையாள உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post கண்டெடுக்கப்பட்ட இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டு கடலில் அப்புறப்படுத்தப்படுகிறது appeared first on Vanakkam London.