• Wed. Sep 3rd, 2025

24×7 Live News

Apdin News

கதை சொல்லும் வட்டுவாகல் பாலம் | திரியாயூரன்

Byadmin

Sep 2, 2025


ஆற்றின் இரு கரையும் இணைக்கும் கயிறல்ல நீ,
ஆயிரம் கதைகளைச் சுமக்கும் இதயத்தண்டே நீ,
அமைதியெனும் பட்டு மேலே,
அழுகையெனும் நூல் பின்னிய வண்ணமே நீ.

காலம் உன்னைக் கடந்து சென்ற போதும்,
கண்ணீர்த் தடங்கள் உனக்குள் அழியவில்லை;
இருளோடு நிழல் கலந்த இரவுகள் வந்த போதும்,
இளமைத் தோட்டம் உனக்குள் வாடியதில்லை.

உன்னைக் கடந்து சென்றோர்,
இன்று மண்ணின் மடியான நினைவுகள்;
உன்னில் விழுந்த துளிகள்,
இன்று காற்றின் கண்களான கண்ணீர்.

தாய் அழைத்த சோகக் குரல்,
மகள் காத்த எதிர்கால கனவு,
மகன் சுமந்த புண்ணின் வலி —
எல்லாம் உன்னுள் சங்கீதம் போல ஒலிக்கின்றன.

நீ ஒருபடி பாதை அல்ல,
நீ ஓர் உயிரின் சாட்சி,
நீ மறக்க முடியாத வரலாறின் காவியம்.
நீ நிலம் கேட்டவனின் நெஞ்சோசை,
நீ வானம் நோக்கியவனின் இறுதி மூச்சு.

வட்டுவாகல் பாலமே —
நினைவின் தூண், உண்மையின் விளக்கு,
இறந்தோரின் கனவுகள் பேசும் மேடை,
மக்களின் நெஞ்சில் என்றும் கதை சொல்லும் காவலன் நீ.

வட்டுவாகல் பாலம் ஈழத் தமிழனின்
ஆறாத வடுவைச் சுமந்த போரின் சாட்சியம்

திரியாயூரன்

By admin