1
கனடா – ஒட்டாவாவில் உள்ள ஒரு வீட்டில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரைக் கொலை செய்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கனடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தண்டனையில் எவ்விதமான தளர்வையும் பெறுவதற்கோ அல்லது விடுதலை பெறுவதற்கோ அவர் 25 ஆண்டுகள் கட்டாயமாகச் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் குறித்த உத்தரவைப் பிறப்பித்த நீதிமன்றம் அறிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டில் நடந்த இந்தச் சம்பவத்தில் இலங்கையை சேர்ந்த ஃபெப்ரியோ டி சொய்சா என்ற குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டார்.
கனடாவில் கல்வி கற்று வந்த அவர், இந்த குற்றத்தைச் செய்தபோது 19 வயதைக் கடந்து இருந்தார்.
அவர் மீது நான்கு முதலாம் நிலை கொலைக் குற்றச்சாட்டுகளும், இரண்டு இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டுகளும், ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டிருந்தன. அவர் அக்குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஒப்புக்கொண்டார்.
இந்தக் கொலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயான தர்ஷனி பண்டாரநாயக்க (வயது 35), இனூக்க விக்கிரமசிங்க (வயது 07), அஷ்வினி விக்கிரமசிங்க (வயது 04), ரினியானா விக்கிரமசிங்க (வயது 02), கெலி விக்கிரமசிங்க (வயது 02 மாதம்) ஆகியோர் கொல்லப்பட்டனர்.
மேலும், அந்த வீட்டில் இருந்த காமினி அமரகோன் (வயது 40) என்ற நபரும் கொல்லப்பட்டதுடன், குழந்தைகளின் தந்தை படுகாயங்களுடன் உயிர்தப்பினார்.