இந்த வருட ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் எதையாவது சாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் சராசரி பெறுபேறுகளுடன் உலகக் கிண்ணத்திலிருந்து வியாழக்கிழமை (19) விடைபெற்றது.
சென்னை சேப்பாக்கம் எம்.எஸ். சிதம்பரம் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற கடைசி டி குழு போட்டியில் கனடாவை 82 ஓட்டங்களால் வெற்றிகொண்ட திருப்தியுடன் ஆப்கானிஸ்தான் நாடு திரும்புகிறது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 200 ஓட்டங்களைப் பெற்றது.
மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய இப்ராஹிம் ஸத்ரான் ஆரம்ப விக்கெட்டில் ரஹ்மானுல்லா குர்பாஸுடன் 47 ஓட்டங்களையும் 3ஆவது விக்கெட்டில் சிதிக்குல்லா அத்தலுடன் 95 ஓட்டங்களையும் பகிர்ந்தார்.

இப்ராஹிம் ஸத்ரான் 56 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 95 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தார்.
அவரை விட சிதிக்குல்லா அத்தல் 44 ஓட்டங்களையும் ரஹ்மானுல்லா குர்பாஸ் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஜஸ்கரன் சிங் 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
மிகவும் கடினமான 201 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கனடா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
துடுப்பாட்டத்தில் ஹார்ஷ் தக்கர் 30 ஓட்டங்களையும் சாத் பின் ஸபர் 28 ஓட்டங்களையும் யுவ்ராஜ் சம்ரா 17 ஓட்டங்களையும் பெற்றனர்.
ஹார்ஷ் தக்கர், சாத் பின் ஸபர் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்து கனடாவின் மொத்த எண்ணிக்கை 100 ஓட்டங்களைக் கடக்க உதவினர்.

பந்துவீச்சில் மொஹம்மத் நபி 4 ஓவர்களில் 7 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ராஷித் கான் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: இப்ராஹிம் ஸத்ரான்
The post கனடாவை இலகுவாக வெற்றிகொண்டு நாடு திரும்புகிறது ஆப்கானிஸ்தான் appeared first on Vanakkam London.