பட மூலாதாரம், Getty/Stalin/X
தமிழ்நாட்டில் ஆறு ராஜ்யசபா இடங்களுக்கு வரும் ஜூன் 19 அன்று தேர்தல் நடைபெற உள்ளதாக, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தி.மு.க சார்பில் பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிட உள்ளதாகவும் மக்கள் நீதி மய்யத்துக்கு ஓர் இடம் ஒதுக்கப்படுவதாகவும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ராஜ்யசபா தேர்தலில் தி.மு.க-வுக்கு 4 இடங்களும் அ.தி.மு.க-வுக்கு 2 இடங்களும் கிடைக்க உள்ள நிலையில், ‘தி.மு.க வசம் கூடுதலாக உள்ள 23 வாக்குகளுக்கு ஐந்தாவதாக ஒரு வேட்பாளர் நிறுத்தப்படலாம்’ என பார்க்கப்பட்டது.
ஆனால், அப்படியொரு முயற்சியில் தி.மு.க இறங்கவில்லை. காரணம் என்ன?
தி.மு.க-வை சேர்ந்த பி.வில்சன், எம்.சண்முகம், எம்.எம்.அப்துல்லா மற்றும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரின் ராஜ்யசபா பதவிக் காலம் வரும் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
அ.தி.மு.க சார்பில் சந்திரசேகரன், பா.ம.க தலைவர் அன்புமணி ஆகியோரின் பதவிக்காலமும் இதே காலகட்டத்தில் நிறைவடைய உள்ளது. இந்த ஆறு இடங்களை நிரப்புவதற்கு வரும் ஜூன் 19 அன்று தேர்தல் நடைபெற உள்ளதாக, இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
யாருக்கு என்ன பலம்?
இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 2 ஆம் தேதியன்று தொடங்க உள்ளது. ஜூன் 9 ஆம் தேதியன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 10 அன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற உள்ளதாகவும், ஜூன் 12 அன்று வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 19 அன்று தேர்தல் நடைபெற்ற உடன், அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தி.மு.க கூட்டணிக்கு 159 உறுப்பினர்கள் (திமுக 134, காங்கிரஸ் 17, விடுதலைச் சிறுத்தைகள் 4, இ.கம்யூ 2, மா.கம்யூ 2) உள்ளனர். ஒரு ராஜ்யசபா இடத்துக்கு 34 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அந்தவகையில், தி.மு.க-வுக்கு நான்கு ராஜ்யசபா உறுப்பினர்கள் கிடைக்க உள்ளனர்.
அ.தி.மு.க-வுக்கு சட்டசபையில் 66 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் பன்னீர்செல்வம் உள்பட 4 உறுப்பினர்கள் தனி அணியாக உள்ளனர். பன்னீர்செல்வம் அணியினர் வாக்களிக்காமல் அ.தி.மு.கவுக்கு பா.ஜ.க ஆதரவளித்தால் எண்ணிக்கை 66 ஆக உயரும் (62 + பாஜகவின் 4 வாக்குகள்). 2 ராஜ்யசபா இடங்களில் வெற்றி பெறுவதற்கு மேலும் 2 உறுப்பினர்களின் ஆதரவு அ.தி.மு.க-வுக்கு தேவைப்படுகிறது.
பட மூலாதாரம், Getty Images
முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் அணி மற்றும் பா.ம.கவில் இருந்து 2 பேர் ஆதரவு தெரிவித்தால் மட்டும் அ.தி.மு.க-வுக்கு 2 ராஜ்யசபா இடங்கள் கிடைக்கும். “இதில் எந்தவித சிக்கலும் இல்லாமல் அ.தி.மு.க இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுவிடும்” எனக் கூறுகிறார், பத்திரிகையாளர் குபேந்திரன்.
நான்கு வேட்பாளர்களை தி.மு.க அறிவித்தால் அ.தி.மு.க இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுவிடும். மாறாக, உபரியாக உள்ள வாக்குகளுக்கு ஐந்தாவதாக ஒரு வேட்பாளரை தி.மு.க நிறுத்தினால் போட்டி கடுமையாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது நான்கு இடங்களுக்கு மட்டுமே தி.மு.க வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
“கட்சிக்குக் கெட்ட பெயர் வரும்”
பட மூலாதாரம், Facebook
“தி.மு.க வசம் 23 ஓட்டுகள் கூடுதலாக உள்ளதால் ஐந்தாவதாக ஒரு வேட்பாளரை நிறுத்தி தனது வலிமையைக் காட்ட முயற்சி செய்திருக்கலாம். ஆனால், அப்படியொரு சர்ச்சைக்கு தி.மு.க தலைமை இடம் கொடுக்கவில்லை” எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம்.
“தற்போதுள்ள நிலையில் அ.தி.மு.க அணியில் வாக்குகள் பிரிவதற்கு வாய்ப்பில்லை” எனக் கூறும் ஜென்ராம், “அவரவர் வாக்கு அவரவருக்கே என்ற நிலையை எடுத்து தேவையற்ற சர்ச்சையை தி.மு.க தலைமை தவிர்த்துள்ளது” என்கிறார்.
“தி.மு.க தலைவராக ஸ்டாலின் வந்த பிறகு அரசியல்ரீதியாக சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுத்ததில்லை” எனக் கூறும் ஜென்ராம், “கொள்கைரீதியான முடிவுகளில் உறுதியாக இருக்கிறார். எனவே, அரசியல்ரீதியாக புதிய முயற்சிகளில் அவர் ஆர்வம் காட்டுவதற்கு வாய்ப்பில்லை” எனவும் குறிப்பிட்டார்.
தி.மு.க செய்தித்தொடர்புத் துறை செயலர் பேராசிரியர் கான்ஸ்டன்டைனிடம் பிபிசி தமிழ் பேசியபோது, “உபரியாக உள்ள வாக்குகளை வைத்து ஒரு வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற்றாலும் அது கட்சிக்குக் கெட்ட பெயரைக் கொண்டு வரும். தோற்றாலும் அது தி.மு.கவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தித் தரும்” எனக் கூறுகிறார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு, அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டது. இதைச் சுட்டிக் காட்டிப் பேசிய கான்ஸ்டன்டைன், “அப்போது தி.மு.க பக்கம், அ.தி.மு.க எம்.எல்.ஏக்களைக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருந்தன. ஆனால், அதில் தனக்கு விருப்பமில்லை என ஸ்டாலின் கூறிவிட்டார்” எனக் கூறுகிறார்.
“முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இதுபோன்று செய்தால் அதை வேறு மாதிரி எடுத்துக் கொள்வார்கள். ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் இதுபோன்ற சர்ச்சைகளில் இறங்க மாட்டார் என்று இதர அரசியல் கட்சிகளுக்குத் தெரியும்” எனக் கூறுகிறார் கான்ஸ்டன்டைன்.
அதேநேரம், “தங்களிடம் கூடுதலாக உள்ள வாக்குகளை வைத்து ராஜ்யசபா தேர்தலில் கூடுதலாக வேட்பாளரை நிறுத்தும் வேலைகளைக் கடந்த காலங்களில் தி.மு.க செய்துள்ளது” எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.
1984 உதாரணம் என்ன?
“ராஜ்யசபா தேர்தல் வேட்பாளர் அறிவிப்பின் மூலம் ஐந்தாவதாக ஒரு வேட்பாளரை தி.மு.க நிறுத்த விரும்பவில்லை என்பது தெரிகிறது. வேட்பாளர் பட்டியலில் கவிஞர் சல்மா பெயர் இடம்பெற்றுள்ளது எதிர்பாராத ஒன்று” எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “தி.மு.கவுக்கு நான்கு இடங்கள் உறுதியாகிவிட்டதால், ஓட்டு போடும்போது சட்டமன்ற உறுப்பினர்களை 34 என நான்கு வகைகளாக பிரித்து, யார் எந்த வேட்பாளருக்கு ஓட்டுப் போட வேண்டும் எனக் கூறுவார்கள். மீதமுள்ள வாக்குகள் உபரியாக இருக்கும்.
தி.மு.கவுக்கு உபரியாக 23 வாக்குகள் உள்ள நிலையில், ஐந்தாவது வேட்பாளருக்கு வாக்கு செலுத்தலாம் எனக் கூறலாம். ஆனால், அ.தி.மு.கவுக்கு 34 வாக்குகளும் வந்துவிட்டால், தி.மு.க நிறுத்தும் ஐந்தாவது வேட்பாளர் தோற்றுப் போவார். அதனால் வேட்பாளரை நிறுத்தியும் பலன் இல்லை” எனக் கூறுகிறார்.
“ஐந்தாவது வேட்பாளரை நிறுத்தும்போது, பா.ம.கவும் பா.ஜ.கவும் அ.தி.மு.கவை ஆதரிப்பதாக அறிவித்தால் தி.மு.கவின் முயற்சி எடுபடாது. தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே இப்படியொரு தோல்வியை தி.மு.க விரும்பாது” என்கிறார், ஷ்யாம்.
1984 ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலை சுட்டிக் காட்டிப் பேசும் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், “அப்போது ஏழாவது வேட்பாளராக ஆற்காடு வீராசாமியை தி.மு.க முன்னிறுத்தியது. ஆனால், அவர் வெற்றி பெறவில்லை” எனக் கூறுகிறார்.
1984 ஆம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க சார்பில் ஜெயலலிதா, வலம்புரி ஜான், ராஜாங்கம், ராமநாதன் ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் கே.வி.தங்கபாலுவும் போட்டியிட்டனர். தி.மு.க சார்பில் வைகோவும் ஏழாவது வேட்பாளராக ஆற்காடு வீராசாமியும் போட்டியிட்டனர். இதில் ஆற்காடு வீராசாமி தோல்வியடைந்தார்.
“1996ஆம் ஆண்டில் ராஜ்யசபா வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ் நிறுத்தப்பட்டார். அவருக்கு எதிராக வேட்பாளராக உதயபானு போட்டியிட்டார். அவர் வெற்றி பெறவில்லை. உறுதியாக வெற்றி பெறலாம் என்ற வாய்ப்பு இருந்தால் மட்டுமே கடினமான முடிவுகளை தி.மு.க எடுக்கும்” என்கிறார் ஷ்யாம்.
1996 ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட 5 பேர் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் தரப்பில் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் அவரை எதிர்த்து வாழப்பாடி ராமமூர்த்தி அணியின் சார்பில் உதயபானு ஆகியோர் போட்டியிட்டனர். இதில் பீட்டர் அல்போன்ஸ் வெற்றி பெற்றார்.
ஓ.பி.எஸ் தரப்பு வாக்குகள் யாருக்கு?
பட மூலாதாரம், Getty Images
“தி.மு.க வசம் கூடுதலாக உள்ள 23 வாக்குகளுடன் பன்னீர்செல்வம் அணி, பா.ம.க மற்றும் சிறிய கட்சிகள் இணைந்தால் புதிதாக ஒரு ராஜ்யசபா சீட் கிடைக்க வாய்ப்புள்ளதே?” என, பத்திரிகையாளர் குபேந்திரனிடம் கேட்டோம்.
“பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசுவதில்லை. இருவரும் அமைதியாகிவிட்டனர்” என்கிறார்.
“ஐந்தாவது வேட்பாளரை தி.மு.க நிறுத்தினால் பன்னீர்செல்வம் அணியினர் வாக்குகளை மாற்றிப் போட வாய்ப்பில்லை. அ.தி.மு.க-வுக்கு ஓ.பி.எஸ் அணியும் பா.ம.கவும் வாக்களிக்கவே வாய்ப்புகள் அதிகம். பா.ஜ.க-வை மீறி இந்த கட்சிகள் வாக்குகளை மாற்றிப் போடுவதற்கு வாய்ப்பில்லை” என்கிறார் குபேந்திரன்.
கூட்டணிக் கட்சிகளைத் தவிர்ப்பது ஏன்?
பட மூலாதாரம், Kamalhaasan/X
தி.மு.க கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஏற்கெனவே ஒப்புக் கொண்டபடி ஒரு ராஜ்யசபா இடம் வழங்கப்படுவதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க கூட்டணியில் கடந்த முறை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டது. இந்தமுறை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதுதொடர்பாக, கடந்த மாதம் தனது கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்திலேயே, ‘தி.மு.க மீண்டும் சீட் கொடுக்குமா?’ எனக் கேள்வி எழுப்பும் தொனியில் வைகோ பேசியிருந்தார்.
“வைகோவுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவருக்கு கொடுப்பதற்கு வாய்ப்பில்லாததால் தான் துரை வைகோவுக்கு திருச்சி எம்.பி தொகுதி ஒதுக்கப்பட்டது” எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.
இதே கருத்தை முன்வைக்கும் தி.மு.க செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன், “மக்கள் நீதி மய்யத்தைத் தவிர மற்ற மூன்று இடங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்குவதை தி.மு.க தலைமை விரும்பவில்லை” எனக் கூறுகிறார்.
“ராஜ்யசபாவில் தி.மு.கவின் குரல் எதிரொலிக்க வேண்டும் என ஸ்டாலின் விரும்புகிறார். கூட்டணிக் கட்சிகள் பேசினாலும் அது கட்சியின் குரலாக இருக்காது என நினைக்கிறார். கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுக்க விரும்பாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்” எனக் கூறினார்.
“அன்புமணி விரும்பவில்லை”
பட மூலாதாரம், Anbumani/X
அ.தி.மு.க உடன் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க கூட்டணி வைக்கவில்லை. அந்தவகையில், அன்புமணிக்கு மீண்டும் ராஜ்யசபா சீட் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது.
“கட்சி வளர்ச்சிப் பணிகளில் அன்புமணி தீவிரம் காட்டி வருவதால், மீண்டும் ராஜ்யசபா சீட்டை அவர் எதிர்பார்க்கவில்லை” என, பா.ம.க-வை சேர்ந்த நிர்வாகி ஒருவர் பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
“ராஜ்யசபா இடத்தைப் பெறுவதற்கு அன்புமணி ஆர்வம் காட்டவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் தனியாக போட்டியிடுவது குறித்து பா.ம.க தலைமை பேசி வருகிறது” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.
அ.தி.மு.க தரப்பில் ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில், அவ்விரு இடங்களுக்கும் கட்சியின் சீனியர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுவதாக, அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் பெயர் குறிப்பிட விரும்பாமல் தெரிவித்தார்.
“பொறுமை கடலினும் பெரிது” – பிரேமலதா
பட மூலாதாரம், _premallathadmdk/Instagram
அ.தி.மு.க அணியில் 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது தே.மு.தி.க இணைந்தது. அப்போது, தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா பேசி வந்தார்.
“நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க உடன் ராஜ்யசபா சீட் தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. யார் வேட்பாளர் என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும்” எனவும் செய்தியாளர் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “எங்கள் தரப்பில் இருந்து அப்படி எந்த வாக்குறுதிகளும் அளிக்கப்படவில்லை” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தற்போது ராஜ்யசபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக செவ்வாய்க் கிழமையன்று பிரேமலதாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ” பொறுமை கடலினும் பெரிது. பொறுத்திருங்கள்” எனக் கூறியவர், “ஜனவரி 9 ஆம் தேதியன்று கடலூரில் மாநாடு நடக்க உள்ளது. எங்கள் நிலைப்பாட்டை அப்போது தெரிவிப்போம்” என்றார்.
“2026 சட்டமன்றத் தேர்தலில் ராஜ்யசபா தேர்தல் முடிவுகள் எதிரொலிக்குமா?” என, மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமிடம் கேட்டபோது, “கட்சிக்குள் இருக்கும் சீனியர்கள் சீட்டை எதிர்பார்ப்பார்கள். அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும்போது அது தேர்தலில் எதிரொலிக்கும்” எனக் கூறுகிறார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு