சென்னை: கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்கை வரலாற்றை படியுங்கள் என தவெக தலைவர் விஜய்க்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவு: தவெக தலைவர் விஜய் தனது பரப்புரையில், ‘அரசியலுக்கு வந்து தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை’ என்று கூறியதை ஏதோ அவர் தியாகம் செய்வதை போல பெரிது படுத்தியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்கள் பதவியை பயன்படுத்தி பணம் சம்பாதித்தார்கள் என்று எதிரிகளால் கூட குற்றம் சாட்ட முடியாது.
அது மட்டுமல்லாமல் இ.எம்.எஸ், பி.சுந்தரய்யா, ஹர்கிஷன்சிங் சுர்ஜித் ஆகியோர் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக சிறப்பாக செயல்பட்டவர்கள். தலைவர்கள் மட்டுமல்ல அடிப்படை உறுப்பினர்கள் கூட தங்களது சொத்துகளை கட்சிக்கு வழங்கியவர்கள்.
அந்தவகையில் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்வது தான் கம்யூனிஸ்ட்களின் அரசியல். வரலாற்றை படியுங்கள் மிஸ்டர் விஜய். அதிலும் மக்கள் நலனுக்காக தியாகம் செய்வது என்றால் என்ன என்பதை அறிய கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்க்கை வரலாறை படியுங்கள்.