‘கராச்சியை தாக்க தயாரானோம்’ – இந்திய கடற்படை அதிகாரி விவரித்த திட்டம்
”இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்த தொண்ணூற்று ஆறு மணி நேரத்துக்குள் அரபிக் கடலில் பல உத்தி நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகளை நாங்கள் சோதித்து மேம்படுத்தினோம்” என இந்திய கடற்படை வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறினார்.
ஏப்ரல் 22ம் தேதி நிகழ்ந்த பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு, இந்திய கடற்படை விரைவான மற்றும் அளவுக்குட்பட்ட கடல்சார் பதில் நடவடிக்கைகளை எடுத்ததாக கூறிய பிரமோத்,” அரபிக் கடல் பகுதியில் ஆயுதங்கள் ஏவி, தயார் நிலை உறுதிப்படுத்தப்பட்டது” என கூறினார்.
“தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளில் பல்வேறு ஆயுதங்களைக் கொண்டு துல்லியமாக தாக்க தளவாடங்கள் மற்றும் கள தயார்நிலையை மறு மதிப்பீடு செய்வதே இதன் நோக்கமாகும்,” என்று பிரமோத் தெரிவித்தார்.
கராச்சி உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை, தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில் தாக்கும் விதமாக கடற்படை முழுமையான தயார் நிலையில் இருந்தது எனக் கூறும் பிரமோத், “இந்திய கடற்படையின் முன்னிலைச் செயல்பாடு, பாகிஸ்தானின் கடற்படை மற்றும் விமானப்படைப் பிரிவுகளை தற்காப்பு நிலைக்குத் தள்ளியது. இதனை தாங்கள் தொடர்ச்சியாகக் கண்காணித்தோம்” என்றார்