• Thu. Nov 13th, 2025

24×7 Live News

Apdin News

கரூர் நெரிசல்: சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழக அதிகாரிகள் ஆஜர் | CBI Questions TNEB Officials Over Power Cut Allegations in Karur Stampede

Byadmin

Nov 13, 2025


கரூர்: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கரூர் தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழக அதிகாரிகள் ஆஜராகினர்.

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இதுதொடர்பாக 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி அக். 30-ம் தேதி முதல் கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

அக். 31-ம் தேதி தொடங்கி வேலுசாமிபுரத்தில் கடை வைத்திருப்பவர்கள், நிறுவனம் நடத்தி வருபவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அக். 31-ம் தேதி மற்றும் நவ 1-ம் தேதி ஆகிய இரு நாட்கள் 3டி லேசர் ஸ்கேனர் மூலம் வேலுசாமிபுரத்தில் சாலையை சிபிஐயினர் அளவீடு செய்தனர்.

நவ. 2-ம் தேதி காமராஜபுரத்தில் ராம்குமார் என்பவரை தேடி சென்ற சிபிஐ குழு அவர் இல்லாததால் 3 பேர் கொண்ட குழு ரயில் மூலம் சென்னை சென்றனர். அங்கு சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு சென்ற சிபிஐ விஜய் பிரச்சார வாகனத்தின் சிசிடிவி காமரா பதிவுகள், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் விபரங்களை கேட்டு சம்மன் வழங்கினர்.

இதையடுத்து நவ. 8 மற்றும் 9-ம் தேதி ஆகிய இரு நாட்கள் தவெக வழக்கறிஞர் பிரிவு திருச்சி மண்டல இணை செயலாளர் வழக்கறிஞர் அரசு, தவெக சென்னை பனையூர் அலுவலக உதவியார் குருசரண், அவருடன் வந்த மற்றொருவர் என 3 பேர் பிரச்சார வாகனத்தின் சிசிடிவி காமரா பதிவுகள் அடங்கிய வீடியோக்கள், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் விபரங்கள் அடங்கிய ஆவணங்களை, சிபிஐயை கேட்ட அனைத்து ஆவணங்களை ஒப்படைத்து 2 நாட்களாக விளக்கம் அளித்தனர்.

முன்னதாக நவ. 4, 5-ம் தேதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட போலீஸார், நவ. 6-ம் தேதி முதல் நவ. 11-ம் தேதி வரை ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்களிடம் 6 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டன. 6-வது நாளில் தவெக ஏற்பாடு செய்திருந்த ஆம்புலன்ஸ் உரிமையாளர், ஓட்டுநர்கள் 3 பேர் விசாரணைக்கு ஆஜராகினர்.

நவ. 10-ம் தேதி தமிழ்நாடு பவர் கிரிட் கார்ப்பரேஷன் அதிகாரிகள் 3 பேரிடம் விசாரணை நடைபெற்றது. நவ. 11-ம் தேதி முதல் கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்கள் 10-க்கும் மேற்பட்டவர்களிடம் கடந்த 3 நாட்களாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (நவ.13) மதியம் சுமார் 1 மணிக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கரூர் மேற்கு நகரிய உதவி செயற்பொறியாளர் கண்ணன், பி.ஓ கண்ணப்பன் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகினர்.

அவர்களிடம் செப். 27-ம் தேதி தவெக பிரச்சார கூட்டத்திற்கான மின் விநியோகம் செய்தது மற்றும் மின் துண்டிப்பு நடைபெற்றது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.



By admin