• Fri. Jun 27th, 2025

24×7 Live News

Apdin News

கரைதுறைப்பற்று பிரதேச சபை தமிழரசுக் கட்சி வசம் (படங்கள் இணைப்பு)

Byadmin

Jun 26, 2025


முல்லைத்தீவு மாவட்டம், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

அந்தப் பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சின்னராசா லோகேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் ஆட்சி அமைப்பதற்காக எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளாத நிலையில் வாக்கெடுப்பு மூலமாக தவிசாளர், உப தவிசாளர் தெரிவு இடம்பெறுவதற்காக இன்றைய தினம் நாள் குறிக்கப்பட்டிருந்தது.

இன்று காலை 8:30 மணிக்கு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி. தேவந்தினி பாபு தலைமையில் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர், உப தவிசாளருக்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இதன்போது பெரும்பாலான உறுப்பினர்கள் பகிரங்க வாக்கெடுப்பைத் தேர்வு செய்திருந்தனர்.

தவிசாளர் தெரிவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் உறுப்பினர் தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் இமக்குலேற்றா புஸ்பானந்தன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டு வாக்கெடுப்பு இடம்பெற்றது.

21 உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொண்ட நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் 11 வாக்குகளையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் உறுப்பினர் தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ் 4 வாக்குகளையும் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் இமக்குலேற்றா புஸ்பானந்தன் 5 வாக்குகளையும் பெற்றனர்.

வாக்களிப்பின் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் மகாதேவா குணசிங்கராசா நடுநிலை வகித்தார்.

இதனடிப்படையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் தவிசாளராக அறிவிக்கப்பட்டார்.

இதேவேளை, உப தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் யோகேஷ்வரன் அனோஜன், சுயேச்சைக் குழுவாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர் வல்லிபுரம் வசந்தராசா ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டு வாக்கெடுப்பு இடம்பெற்றது

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் யோகேஸ்வரன் அனோஜன் 9 வாக்குகளையும், சுயேச்சைக் குழு உறுப்பினர் வல்லிபுரம் வசந்தராசா 6 வாக்குகளையும் பெற்றுக்கொள்ள ஆறு உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.

இதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் யோகேஸ்வரன் அனோஜன் உப தவிசாளராக அறிவிக்கப்பட்டார்.

By admin