0
அமெரிக்கா – கலிபோர்னியா மாநிலத்தின் ஸ்டொக்டன் (Stockton) நகரில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டில் நால்வர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்தத் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நால்வரில் மூவர் சிறுவர்கள் என அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
அத்துடன், 11 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்த சிறுவர்கள் 8 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் மற்றொருவருக்கு வயது 21 இளைஞன் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சுமார் 150 பேர் கூடியிருந்தனர். அப்போது அந்நாட்டு நேரப்படி, மாலை 6 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பல துப்பாக்கிக்காரர்கள் இணைந்து தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.
அதிகாரிகள் இதுவரை எந்தவொரு சந்தேகநபரையும் அடையாளம் காணவில்லை; யாரையும் கைது செய்யவுமில்லை. சம்பவம் குறித்துத் தகவல் அறிந்தால் முன்வருமாறு பொலிஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
அமெரிக்காவில் தற்போது விடுமுறைக் காலம். “விடுமுறையைக் கொண்டாடுவதற்குப் பதிலாகப் பலர் தங்கள் உறவினர்களுடன் மருத்துவமனையில் இருக்கின்றனர்,” என்று ஸ்டொக்டன் நகர மேயர் கிறிஸ்டீனா ஃபுகாட்ஸி (Christina Fugazzi) செய்தியாளர்களிடம் கூறினார்.