சென்னை: கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்கான நிதியை திமுக அரசு குறைத்துவிட்டது என குற்றம் சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்து விட்டது என்று விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் தமிழ்நாடு மிகவும் பின்தங்கியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு கல்வி, சுகாதாரம், வேளாண்மை ஆகிய 3 துறைகள் தான் மிகவும் முக்கியம் என்று கூறப்படும் நிலையில், அவற்றுக்கு சராசரியாக ஒதுக்கப்பட வேண்டியதை விட குறைவான நிதியை தமிழகம் ஒதுக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.
மத்திய, மாநில அரசுகள், நாடாளுமன்றம், சட்டப்பேரவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வரும் பி.ஆர்.எஸ் இந்தியா தொண்டு நிறுவனம் மாநிலங்களின் நிதிநிலை (STATE OF STATE FINANCES) என்ற தலைப்பில் 2024, 25ஆம் ஆண்டில் ஒவ்வொரு மாநிலத்தின் நிதிநிலையும் எவ்வாறு இருந்தது? ஒவ்வொரு துறைக்கும் சராசரியாக எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்திருக்கின்றன என்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் உள்ள தகவல்கள் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன.
மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படும் துறைகளில் கல்வி தான் மிகவும் முக்கியமானது என்பதால், பள்ளிக்கல்வி, உயர்க்கல்வி ஆகிய இரண்டுக்கும் சேர்த்து, மாநிலத்தின் மொத்த பட்ஜெட்டில் குறைந்தது 15% ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாடு அதை விடக் குறைவாக 13.7% மட்டுமே ஒதுக்கியுள்ளது.
இந்தியாவிலேயே மிகவும் அதிக அளவாக டெல்லி அரசு கல்விக்காக அதன் மொத்த பட்ஜெட் மதிப்பில் 24.2% ஒதுக்கியுள்ளது. இந்தியாவின் பின்தங்கிய மாநிலமான பிஹார் 21.4% ஒதுக்கீடு செய்திருக்கிறது.
சுகாதாரத்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் தமிழ்நாடு 26ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. மருத்துவத் துறையின் குறைந்தபட்சத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மொத்த செலவில் குறைந்தது 8% ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று 2017ஆம் ஆண்டின் தேசிய சுகாதாரக் கொள்கையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மாநில அரசு இந்த இலக்கைக் கடந்து மருத்துவத்திற்காக 13% நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. அண்டை மாநிலமான புதுச்சேரி 9.5% நிதியை சுகாதாரத்திற்காக செலவழிக்கிறது. ஆனால், வளர்ந்த மாநிலமாக கூறிக் கொள்ளும் தமிழ்நாடு சுகாதாரத்திற்கு வெறும் 5% மட்டுமே ஒதுக்குகிறது.
முதன்மைத் துறையான வேளாண்மைக்கு குறைந்தபட்சம் 6.3% நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால், தமிழகம் அதைவிடக் குறைவாக வெறும் 6.1% மட்டும் தான் ஒதுக்கீடு செய்கிறது. வேளாண்மையில் சிறந்து விளங்கும் தெலுங்கானா (20.20%), சத்தீஸ்கர் (15.90%) பஞ்சாப் (10.10%) ஆகிய மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாடு மிகக் குறைந்த நிதியை மட்டுமே ஒதுக்கீடு செய்திருக்கிறது.
கல்வி, சுகாதாரம், வேளாண்மை ஆகிய துறைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படாததற்கு பற்றாக்குறையை ஒரு காரணமாகக் கூறவே முடியாது. ஒரு மாநில அரசிடம் எவ்வளவு நிதி உள்ளதோ? அதில் எத்தனை விழுக்காடு இந்தத் துறைகளுக்கு ஒதுக்கப்படுகிறது? என்பது தான் பாமக எழுப்பும் வினா ஆகும்.
தமிழக அரசின் மொத்த செலவில் இந்தத் துறைகளுக்கு குறைந்த விழுக்காடு நிதியை ஒதுக்கியதன் மூலம் அரசு அதிக வீண் செலவு செய்கிறது; முதன்மைத் துறைகளுக்கு நிதி ஒதுக்குவதில்லை என்பது உறுதியாகிறது.
கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்து வந்தாலும், அதை செயல்படுத்தவில்லை என்பது தான் உண்மை. ‘‘மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் (Gross State Domestic Product-GSDP) கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு 3 மடங்காக உயர்த்தப்படும்’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குறுதி பத்தாண்டுகளில் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக 2020- 21-ஆம் ஆண்டில் பள்ளிக்கல்விக்கான ஒதுக்கீடு ரூ.34 ஆயிரத்து 181 கோடியாகவும், சுகாதாரத்திற்கான ஒதுக்கீடு ரூ.15 ஆயிரத்துக்கு 863 கோடியாகவும் இருந்தது. இது 2020 -21ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பான ரூ.20, 65 ஆயிரத்து 436 கோடியில் முறையே 1.65%, 0.76% ஆகும்.
அதையே 2024-25ஆம் ஆண்டுக்கு கணக்கிட்டால் கல்விக்கான ஒதுக்கீடு ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 271 கோடி ரூபாயாகவும், சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடு 60 ஆயிரத்து 577 கோடி ரூபாயாகவும் இருக்க வேண்டும். ஆனால், அந்த ஆண்டில் கல்விக்கு ரூ.44,042 கோடியும், சுகாதாரத்திற்கு ரூ.20,198 கோடியும் மட்டுமே ஒதுக்கீடு செய்திருக்கிறது திமுக அரசு. இது திமுக ஒதுக்குவதாக கூறிய தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவு ஆகும்.
அதிமுக ஆட்சியில் கல்விக்கு ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 1.65% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் இப்போது அது 1.39% ஆக குறைந்து விட்டது. அதேபோல், அதிமுக ஆட்சியில் 0.76% ஆக இருந்த சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடு 0.64% ஆக குறைந்து விட்டது. தமிழ்நாட்டில் கல்வித்துறையும், சுகாதாரத்துறையும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் சீரழிந்து வருவதற்கு போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படாததே காரணம்.
திமுக அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்து விட்டது; கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளை சீரழித்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. திமுக அரசின் இந்த துரோகங்களுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவர் என்பது மட்டும் உறுதி” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.