“கனவு நனவாகிறது.” கஷிஷ் மெத்வானியின் சாதனைகளைப் பற்றிப் பேசும்போது, இந்த வாக்கியத்தை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கும்.
இந்தியாவின் உயர்தர கல்வி நிறுவனத்தில் நரம்பியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெறுவது, பின்னர் ‘மிஸ் இந்தியா இன்டர்நேஷனல்’ ஆக மாறுவது, இப்போது இவை அனைத்தையும் விட்டுவிட்டு நாட்டுக்கு சேவை செய்யப் பாதுகாப்புப் படைகளில் இணைவது – கஷிஷ் மெத்வானி இவை அனைத்தையும் சாதித்துக் காட்டியுள்ளார்.
குர்முக் தாஸ் மற்றும் ஷோபா மெத்வானி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார் கஷிஷ். கஷிஷின் தந்தை பாதுகாப்புத் அமைச்சகத்தின் தர உத்தரவாதத் துறையில் தலைமை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற விஞ்ஞானி ஆவார். அவரது தாய் ஷோபா மெத்வானி புனேவில் உள்ள ஆர்மி பப்ளிக் ஸ்கூலில் ஆசிரியராக இருந்தார்.
கஷிஷ் மற்றும் அவரது சகோதரி இருவரும் ஆர்மி பப்ளிக் ஸ்கூலில் படித்தனர். அவர்கள் இருவரும் ஒரு சாதாரண மாணவரைப் போலவே வளர்க்கப்பட்டனர். கஷிஷ் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது, மற்றொரு மாணவரின் பெற்றோர் அவரது தாயிடம், “உங்கள் மகள் சாதாரணமானவள் அல்ல, அவள் வாழ்க்கையில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடிப்பாள்” என்று கூறியிருந்தார்.
அவரது குழந்தைப் பருவம் பற்றி அவரது தாயார் பேசுகிறார்
பட மூலாதாரம், Kashish Methwani
படக்குறிப்பு, கஷிஷின் தாய் ஷோபா மெத்வானி புனே ராணுவ பள்ளியில் ஒரு ஆசிரியராக இருந்தார்
ஒரு ஆசிரியராக, தனது மகள் ஒரு சாதாரண குழந்தையைப் போலவே வளர வேண்டும் என்று ஷோபா விரும்பினார். அவர் கஷிஷை மற்ற குழந்தைகளிலிருந்து வேறுபட்டவராகவோ அல்லது சிறப்பு வாய்ந்தவராகவோ கருதவில்லை.
கஷிஷின் குழந்தைப் பருவத்தை நினைவுகூர்ந்த ஷோபா மெத்வானி, “அவள் எல்லாமே செய்ய விரும்பினாள். நாங்கள் அவளைப் பல்வேறு வகுப்புகளில் சேர்த்தோம். பரதநாட்டியம், தபலா உட்பட பல விஷயங்களைக் கற்றுக்கொண்டாள். அவரது தந்தையின் இடமாற்றம் காரணமாக, அவளால் எந்தப் பயிற்சியையும் முடிக்க முடியவில்லை. ஆனால், அவள் அதில் தேர்ச்சி பெறாவிட்டாலும், கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைப்பதே போதும் என்று நாங்கள் நினைத்தோம்” என்றார்.
கஷிஷ் மெத்வானி அறிவியல் துறையில் இளநிலை பட்டம் பெற்று, சவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்பை முடித்தார். அதன் பிறகு, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் எம்.எஸ்ஸி ஆய்வறிக்கைக்காக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரபலமான கல்வி நிறுவனத்தில் படிப்பை முடித்த பிறகு, அவருக்கு சர்வதேச அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் சேரும் வாய்ப்புகளும் கிடைத்தன. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலும் அவருக்கு அனுமதி கிடைத்தது. ஆனால் கஷிஷின் மனதில் வேறு ஏதோ இருந்தது.
பிரதமர் மோதியிடம் இருந்து விருது பெற்றார்
கல்லூரி நாட்களில், கஷிஷ் தேசிய மாணவர் படை (NCC)-யில் சேர்ந்தார். அவர் குடியரசு தின அணிவகுப்பு முகாமிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அணிவகுப்பில் பங்கேற்றார்.
அங்கு அவர் சிறப்பாகச் செயல்பட்டதற்காக, அகில இந்திய சிறந்த மாணவர் விருதைப் பெற்றார். பிரதமர் நரேந்திர மோதியின் கையால் அந்த விருதைப் பெற்றார்.
கஷிஷ் கூறுகையில், “நான் முகாமில் இருந்தபோது, குழுவில் இருப்பது, பயிற்சி செய்வது, அணிவகுப்பு செய்வது இவை அனைத்தும் எனக்குப் பிடித்திருந்தது. அப்போதே பாதுகாப்புத் துறையில் ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள நான் முடிவு செய்தேன்” என்றார்.
இருப்பினும், இந்த பயணம் உடனடியாகத் தொடங்கவில்லை. படிப்பை முடித்த பிறகு, கஷிஷ் அழகுப் போட்டிக்குத் தயாராகத் தொடங்கினார்.
அவர் ‘மிஸ் இந்தியா’ போட்டியில் பங்கேற்று, 2023-ல் ‘மிஸ் இந்தியா இன்டர்நேஷனல்’ பட்டத்தை வென்றார்.
பட மூலாதாரம், Kashish Methwani
படக்குறிப்பு, விமானப் படைத் தளபதி ஏ.பி. சிங்குடன் கஷிஷ் மற்றும் அவரது குடும்பத்தினர்.
அதே நேரத்தில், கஷிஷ் பாதுகாப்புத் துறைக்கான நுழைவுத் தேர்வுக்கும் தயாராகி வந்தார். அவர் தனது நாளை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டார். காலையில் நுழைவுத் தேர்வுக்குத் தயாரானார், மதியம் அழகுப் போட்டிக்குத் தயாரானார்.
“புதிய விஷயங்களை முயற்சிப்பது எனக்கு எப்போதும் பிடிக்கும். வெவ்வேறு விஷயங்களை முயற்சி செய்து, எனக்கு மகிழ்ச்சியைத் தருவதைத் தேர்ந்தெடுப்பதே எனது நோக்கம். எனது பெற்றோர் எனக்கு நேர நிர்வாகத்தைக் கற்றுக்கொடுத்தனர். என்சிசி-க்குப் பிறகு கல்லூரிக்கு தினமும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை, எனவே நான் இந்த நேரத்தை அழகுப் போட்டிக்குத் தயாராவதற்காகப் பயன்படுத்தினேன்” என்று அவர் கூறினார்.
சூப்பர் மாடலில் இருந்து பாதுகாப்புத் துறை வரை
பட மூலாதாரம், Kashish Methwani
படக்குறிப்பு, கஷிஷ் மெத்வானி தனது பெற்றோர் மற்றும் சகோதரியுடன்
‘மிஸ் இந்தியா இன்டர்நேஷனல்’ ஆன பிறகு, கஷிஷ் ஒரு சூப்பர் மாடலாக மாறினார்.
ஆனால், அவரது கூற்றுப்படி, இது அவரது “பக்கெட் லிஸ்ட்டில்” ஒரு பகுதி மட்டுமே.
2024-ல், அவர் ‘பாதுகாப்பு சேவைகள்’ கூட்டுத் தேர்வை எழுதி, அகில இந்திய அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் அதிகாரியாகும் அவரது பயணம் சென்னை அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் தொடங்கியது.
பல துறைகளில் முயற்சி செய்த பிறகும், அகாடமியின் பயிற்சி குறித்து தனக்கு நம்பிக்கை இல்லை என்று கஷிஷ் ஒப்புக்கொள்கிறார்.
” உடற்பயிற்சி செய்வது குறித்து எனக்கு ஒரு சிறிய சந்தேகம் இருந்தது. ஆனால் எனது முந்தைய பயிற்சியும் அனுபவமும் இங்கு உதவியது. பயப்படக்கூடாது என்று அழகுப் போட்டி எனக்குக் கற்றுக்கொடுத்தது. அது எனக்கு இந்த பயிற்சியை முடிக்க உதவியது” என்று அவர் கூறினார்.
கஷிஷின் தாய் ஷோபா மெத்வானி, தனது மகள் பயிற்சி காலத்தில் அடைந்த சாதனைகளின் முக்கியத்துவத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறார்.
“எனது மகள் சிறப்பாகச் செயல்படுகிறாள் என்பது மட்டுமே எனக்குத் தெரியும்” என்றார் அவர்.
தமது பயணத்தைத் தொடர்ந்த கஷிஷ், ராணுவ வான் பாதுகாப்புப் பதக்கத்தையும் வென்றார். இது ஒரு பணியமர்த்தப்பட்ட அதிகாரிக்குக் கிடைக்கும் மிக உயர்ந்த கௌரவமாகும்.
அவர் அணிவகுப்பு மற்றும் துப்பாக்கிச் சுடுதல் இரண்டிலும் தங்கப் பதக்கங்களையும், சீக்கிய லைன் காலாட்படைப் படைப்பிரிவுப் பதக்கத்தையும், அகாடமியில் அதிக துப்பாக்கிச் சுடுதல் மதிப்பெண்ணையும், பயிற்சியில் சிறந்த ஒழுக்கத்திற்கான பதக்கத்தையும் பெற்றார்.
கஷிஷ் ‘இன்டர்காய் கூடைப்பந்து’ போட்டியில் சிறந்த வீராங்கனை விருதையும் வென்றார். மேலும், எந்தவித தண்டனையும் இல்லாமல் முழுப் பயிற்சியையும் முடித்தார்.
பல முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டன
பட மூலாதாரம், Kashish Methwani
கஷிஷுக்கு தலைமைப் பொறுப்புகளும் வழங்கப்பட்டன. ஒரு பதவிக் காலத்தில் அவர் பட்டாலியன் துணை அதிகாரியாகவும், மற்றொரு பதவிக் காலத்தில் அகாடமி துணை அதிகாரியாகவும் இருந்தார். அவரது தாய் இதனைப் பள்ளியின் ‘தலைமை மாணவி’ பொறுப்புடன் ஒப்பிடுகிறார்.
தனது சாதனைகளைப் பற்றிப் பேசுகையில் கஷிஷ், “எனக்கு ஒருபோதும் தோல்வி பயம் இருந்ததில்லை. எனக்கு மிகவும் பிடித்ததை நான் செய்தேன். நிலவை அடைய, நட்சத்திரங்களை உங்கள் இலக்காகக் கொள்ளுங்கள் என்று எனக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டது. நான் அதையே செய்தேன்” என்கிறார்.
கஷிஷ் ‘கிரிட்டிக்கல் காஸ்’ என்ற ஒரு அரசு சாரா அமைப்பையும் உருவாக்கியுள்ளார். இது உறுப்பு தானம் மற்றும் பிளாஸ்மா தானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
அவர் ஒரு பரதநாட்டியக் கலைஞர், தபலா இசைக்கலைஞர், கூடைப்பந்து வீராங்கனை, மற்றும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் வீராங்கனை. ஆனால், அவரது விருப்பப் பட்டியல் இன்னும் முடிவடையவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக அவரால் செய்ய முடியாத துப்பாக்கிச் சுடுதலை மீண்டும் தொடங்க அவர் விரும்புகிறார்.
கஷிஷ் செப்டம்பர் 27 அன்று ராணுவத்தில் இணையவிருக்கிறார். பாதுகாப்புத் துறையில் தனது எதிர்காலம் குறித்து, “நான் இங்கு நீண்ட காலம் தங்குவதற்காக இருக்கிறேன். ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்துகிறேன்” என்று கூறினார்.