சென்னை: நெல்லை காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து, தான் தொடர்ந்த தேர்தல் வழக்கில் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் ஒரு மணி நேரத்துக்கு மேல் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் நெல்லை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராபர்ட் புரூஸ் 1.66 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அவர் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி, அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். வேட்புமனுவில் சொத்து விவரங்களை ராபர்ட் புரூஸ் மறைத்ததாகவும், தேர்தலில் பல முறைகேடுகளை செய்ததாகவும் அதில் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த வழக்கில் நயினார் நாகேந்திரன் கடந்த 19-ம் தேதி ஆஜராகி, காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் புரூஸின் சொத்துகள் தொடர்பான சான்று ஆவணங்களை பதிவு செய்தார்.
இந்நிலையில், நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தில் ஆஜரான நயினார் நாகேந்திரனிடம், ராபர்ட் புரூஸ் தரப்பு வழக்கறிஞர் ஆர்.ஸ்ரீனிவாஸ் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக குறுக்கு விசாரணை செய்தார்.
நயினார் நாகேந்திரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, பாஜக வழக்கறிஞர்கள் ஆர்.சி.பால்கனகராஜ், கே.ராஜேந்திரன் உள்ளிட்டோரும் ஆஜராகினர். குறுக்கு விசாரணை முடியாததால், விசாரணையை நீதிபதி ஜூலை 2-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
‘இபிஎஸ்தான் முதல்வர்’ – உயர் நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், ‘‘பாஜக – அதிமுக கூட்டணி உண்மையான கூட்டணி. இதில் எந்த பிரச்சினையும் இல்லை. பிரச்சினை வரும் என கனவிலும் நினைக்க வேண்டாம். வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிதான் முதல்வர். தேர்தல் நெருங்குவதால் கட்சியில் சில மாற்றங்களை கொண்டுவர வேண்டியுள்ளது. பாஜக நிர்வாகிகள் பட்டியல் விரைவில் வெளியாகும்’’ என்றார்.