1
காசா உடனான போர்நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லாத நிலையில், காசா பகுதியில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் நேற்று 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், அவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிறை பிடிக்கப்பட்ட பணய கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சி நடந்தபோதும், காசாவில் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளதுடன், ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார்.
இதேவேளை, பாலஸ்தீனியர்களுக்கான உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட பொருட்கள் விநியோகத்திற்கும் இஸ்ரேல் தடை விதித்து உள்ளதால் 20 இலட்சம் பாலஸ்தீனியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போர்நிறுத்த ஒப்பந்தத்தின் 2ஆவது கட்டத்திற்கு செல்ல விருப்பமற்ற இஸ்ரேல், கிழக்கு காசா பகுதியில் உள்ள மக்களை வெளியேறும்படியும் உத்தரவிட்டது.
இந்தநிலையில், இஸ்ரேல் இனி ஹமாஸ் அமைப்புக்கு எதிராக அதிகரிக்கப்பட்ட இராணுவ பலத்துடன் செயல்படும் என்று நெதன்யாகு அலுவலகம் இன்று வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்னெனவே ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட நிலையில், ரமலான் புனித மாதத்தில்மீண்டும் முழு அளவில் போரானது நடைபெற கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. அதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக சிறை பிடித்து செல்லப்பட்டனர்.
இதனை தொடர்ந்து காசாவுக்கு எதிராக இஸ்ரேல் போர் தெடுத்ததுடன், இந்த மோதலில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர்.