0
வடக்கு காசாவில் இஸ்ரேல் இராணுவம் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியதில் 22 குழந்தைகள் உட்பட 60 பேர் உயிரிழந்தனர் என காசா மருத்துவமனை தகவல் தெரிவிக்கிறது.
இஸ்ரேல் இராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான மோதல் ஒன்றரை ஆண்டுகளைக் கடந்துள்ளது.
ஹமாஸ் ஆயுதக்குழு, 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலினுள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 251 பேரை பிணைக்கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது.
இதைத் தொடர்ந்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் இராணுவம் போர் அறிவித்து, காசா முனையில் அதிரடித் தாக்குதல் நடத்தி வருகிறது. பிணைக்கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், இராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டு வருகிறது.
ஹமாஸ் அமைப்பினர் தங்கள் வசம் இருந்த பிணைக்கைதியான இஸ்ரேல் வாழ் அமெரிக்கர் இடன் அலெக்சாண்டர் என்பவரை நேற்று முன்தினம் விடுதலை செய்தனர்.
இதற்கிடையே, இந்தப் போரை நிறுத்துவதற்கான வாய்ப்பே இல்லை என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 52,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.