தமிழ்நாட்டைச் சேர்ந்த மருந்து நிறுவனம் ஒன்று தயாரித்த இருமல் மருந்தைக் குடித்த 20 குழந்தைகள் மத்தியப் பிரதேசத்தில் உயிரிழந்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் இயங்கிய ஸ்ரேசன் பார்மசூட்டிகல்ஸ் என்ற நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிஃப் என்ற இருமல் மருந்தைக் குடித்த மேலும் ஐந்து குழந்தைகள் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மத்தியப் பிரதேசத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தக் குழந்தைகளுக்கு காய்ச்சலும் இருமலும் ஏற்பட்டதையடுத்து இவர்களுக்கு ஸ்ரேசன் நிறுவனம் தயாரித்த ‘கோல்ட்ரிஃப்’ என்ற இருமல் மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
இந்த மருந்தைக் குடித்த பிறகு, இந்தக் குழந்தைகளுக்கு வாந்தியும் சிறுநீர் கழிப்பதில் பிரச்னையும் ஏற்பட்டது. இதையடுத்து குழந்தைகள் ஒருவர் பின் ஒருவராக மரணமடைய ஆரம்பித்தனர்.
பட மூலாதாரம், ANI
மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகள் மரணமடைய ஆரம்பித்ததையடுத்து, இது தொடர்பாக தமிழக மருந்துக் கட்டுப்பாட்டுத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதற்குப் பிறகு நடவடிக்கையில் இறங்கிய மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அக்டோபர் 1-ஆம் தேதி மாலையில் அந்த மருந்து நிறுவனத்தைச் சோதனையிட்டது. சோதனையின்போது மத்தியப் பிரதேசத்திற்கு அனுப்பப்பட்ட பேட்சைச் சேர்ந்த மருந்துகள் (Batch No. SR-13 2025 மே மாதம் தயாரிக்கப்பட்டவை) கைப்பற்றப்பட்டன.
இதற்குப் பிறகு அங்கிருந்த கோல்ட்ரிஃப் மருந்து, ரெஸ்போலைட் (Respolite) மருந்துகளின் மூன்று வகைகள், ஹெப்சான்டின் மருந்து ஆகியவை ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டன. மீதமுள்ள மருந்துகள் முடக்கிவைக்கப்பட்டன.
இந்த மருந்துகளை விநியோகிக்கவோ, விற்பனை செய்யவோ வேண்டாம் என மாநிலம் முழுவதும் அறிவிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தில் இருந்த ஆவணங்களை ஆய்வு செய்தபோது, இந்த மருந்துகள் ஒடிசா, புதுச்சேரி ஆகிய இடங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த மாநில அரசுகளுக்கும் இது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டது.
‘மருந்து உற்பத்தியே சுகாதாரமாக நடக்கவில்லை’
இந்தச் சோதனைகளின்போது ஸ்ரேசன் நிறுவனம் மருந்து உற்பத்திக்கான நூற்றுக்கணக்கான விதிகளை மீறியது தெரியவந்தது.
இது தொடர்பாக தமிழக மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை 41 பக்க அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. அதில் சோதனையின்போது கண்டறியப்பட்ட 364 விதி மீறல்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அதில் 39 விதி மீறல்கள் மிகத் தீவிரமானவை. 325 விதிமீறல்கள் பெரிய அளவிலானவை.
முதலாவதாக, ”இருமல் மருந்தைத் தயாரிப்பதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த ப்ரோப்பலீன் க்ளைக்கால், மருந்து உற்பத்திக்கான தரத்தில் இல்லை”
அடுத்ததாக, ”அந்த வேதிப் பொருள் மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு வந்த பிறகு அது மருந்துத் தரத்தில் இருக்கிறதா என்பது சோதனை செய்யப்படவும் இல்லை”.
மேலும் “இந்த மருந்து நிறுவனத்தில் சரியான தரத்திலான பணியாளர்கள் இல்லை. பயன்படுத்தப்படும் தண்ணீர், உற்பத்திக் கருவிகள் போன்றவை அங்கீகரிக்கத்தக்கத் தரத்தில் இல்லை. தயாரிக்கப்பட்ட பொருள்கள் மிகவும் சுகாதாரமற்ற முறையில் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன.” என அதில் குறிப்பிடப்படுள்ளது.
மேலும், “மருந்து உற்பத்தியே சுகாதாரமாக நடக்கவில்லை. பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது போன்ற செயல்பாடுகளும் இல்லை. மருந்துகளைக் கண்காணிக்கும் நடைமுறைகள் இல்லை. தரவுகள் சேகரித்து வைக்கப்படவில்லை. தரத்தை உறுதி செய்யும் பிரிவே இல்லை. வெளியில் இருந்துதான் தண்ணீர் எடுத்துவரப்படுகிறது. அவை சுத்திகரிக்கப்படுவதும் இல்லை. கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியில் விடப்பட்டது. மருந்து உற்பத்திக்கான தண்ணீர் சுகாதாரமற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது” என விதிமீறல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
கைதான உரிமையாளர்
இதற்கிடையில் கைப்பற்றப்பட்ட மருந்துகள் வேதியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு முடிவுகள் பெறப்பட்டன.
அதன்படி, இருமல் மருந்துகளில் பயன்படுத்தப்பட்ட ப்ரோப்பலீன் க்ளைகால் (Propylene Glycol) என்ற வேதிப் பொருள் மருந்துப் பொருட்களுக்கான தரத்தில் இல்லை என்பதும் அதில் சிறுநீரகங்களைப் பாதிக்கக்கூடிய நச்சுப் பொருளான டைஎத்திலீன் க்ளைக்கால் இருப்பது கண்டறியப்பட்டதாக மருந்துக் கட்டுப்பாட்டு துறை தெரிவிக்கிறது.
‘மத்தியப் பிரதேசத்திற்கு அனுப்பப்பட்ட மருந்துத் தொகுப்பில், டைஎத்திலீன் க்ளைக்கால் 48.6 சதவீதம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மருந்துத் தயாரிப்பை நிறுத்த உத்தரவிடப்பட்டது.
அந்த மருந்து நிறுவனத்தின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது எனக் கேட்டு நோட்டீசும் அனுப்பப்பட்டது. அக்டோபர் 12- ஆம் தேதிக்குள் இந்த நோட்டீஸிற்கு பதிலளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிரிமினல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சிகளும் துவங்கப்பட்டுள்ளதாக மருந்துக்கட்டுப்பாட்டுத் துறை தெரிவிக்கிறது.
இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்காக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தனிப்படைக் காவல்துறையினர் 11 பேர் சென்னையில் முகாமிட்டிருந்தனர்.
அவர்கள் சென்னை நகரக் காவல்துறையினரின் உதவியுடன் ஸ்ரேசன் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை வியாழக்கிழமையன்று காலையில் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 73 வயதாகும் ரங்கநாதன் மருந்து உற்பத்தித் துறை வட்டாரங்களில் நன்கு அறியப்பட்டவர். நீண்ட காலமாக நீர்ம மருந்துகளை தயாரித்துவந்தவர்.
பிபிசி கண்டது என்ன?
கோல்ட்ரிஃப் மருந்தைத் தயாரித்துவந்த ஸ்ரேசன் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை சுங்குவார்சத்திரத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.
இந்த இடத்தை நேரில் சென்று பார்க்கும் யாருக்கும் பெரும் அதிர்ச்சியே ஏற்படும். நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஒரு இடத்தில், தரைத்தளத்தையும் அதற்கு மேலே ஒரு தளத்தையும் கொண்ட மிகச் சாதாரணமான ஒரு கட்டடத்தில் இயங்கிவருகிறது இந்தத் தொழிற்சாலை.
இந்த நிறுவனம் மூடி சீல் வைக்கப்படுவதற்கு முன்புவரை, மொத்தம் 12 பேர் பணியாற்றி வந்தனர். இதன் உரிமையாளர் ரங்கநாதன் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருந்தியல் படிப்பை முடித்தவர்.
குழந்தைகளுக்கான மருந்துகளைத் தயாரிக்கும் இந்தத் தொழிற்சாலை உட்பகுதிகளில் துருப்பிடித்த பொருட்கள், ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் மருந்துகளுக்கான மூலப்பொருட்களைக் கொண்டிருக்கும் கேன்கள் என சுகாதாரமற்ற முறையிலேயே காணப்படுகின்றன.
சார்பிடால் என்ற மருந்தின் மூலப்பொருட்களைக் கொண்டிருக்கும் கேன்கள் எவ்விதப் பாதுகாப்புமின்றி வெளியில் வைக்கப்பட்டிருந்தன.
தமிழக அரசு மீது குற்றச்சாட்டு
இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் 20 குழந்தைகள் இறந்திருப்பதற்கு தமிழ்நாடு அரசின் மிகமோசமான கவனக் குறைவே காரணம் என மத்தியப் பிரேதசத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் நரேந்திர சிவாஜி படேல் குற்றம்சாட்டியுள்ளார்.
“தயாரிக்கப்படும் ஒவ்வொரு பேட்சிற்கும் Certificate of Analysis சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இந்த பேட்சிற்கு அப்படிச் சான்றிதழ் வழங்கப்பட்டதா? எந்த அதிகாரி தவறு செய்தார் என்பது விசாரிக்கப்பட வேண்டும்” என அவர் கூறியிருப்பதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
ஸ்ரேசன் நிறுவனத்திற்கு 2011-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி உரிமங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இந்த நடவடிக்கைகள், மருந்துக் கட்டுப்பாடு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையத்தின் துணை இயக்குநர் எஸ். குருபாரதியால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், அவரிடம் பேச மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
“அவர் இது தொடர்பான விசாரணையில் தீவிரமாக இருப்பதால், இது தொடர்பாக ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் செய்திக் குறிப்பாக மட்டுமே வழங்கப்படும்” என்கிறது அவரது அலுவலகம்.
இதற்கிடையில், மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையின் காஞ்சிபுரம் பிரிவில் பணியாற்றிவந்த கார்த்திகேயன், தீபா ஜோசப் ஆகிய இரு ஆய்வாளர்கள் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அமைச்சர் கூறுவது என்ன?
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியத்துடன் பேச மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
வியாழக்கிழமையன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியார்களை சந்தித்தபோது, ”கோல்ட்ரிஃப் இருமல் மருந்து விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சரியாகச் செயல்படவில்லை என கூறப்படுகிறதே” என கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், ” இது தொடர்பாக ஆய்வு நடத்தி, மருந்தில் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டு தடை விதிக்கப்பட்டது. தமிழ்நாடு மருத்துவ சேவைகள் மையம் இந்த மருந்தை வாங்குவதில்லை. தனியார் வாங்கக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. மத்தியப் பிரதேசத்திற்கும் ஒன்றிய அரசுக்கும் இது தொடர்பாக தகவல் அனுப்பப்பட்டது” என்று தெரிவித்தார்.
மேலும், ”எந்த மருந்தாக இருந்தாலும் அந்தந்த மாநில மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை ஆய்வு செய்ய வேண்டும். நாங்கள் ஆய்வு செய்து கலப்படம் இருப்பதாகச் சொன்னோம். அரசியல் நெருக்கடி அதிகரித்தவுடன் இப்படி அறிக்கை விடுகிறார்கள். அதைப் பற்றி அதிகமாக நாங்கள் பேசப்போவதில்லை. நிறுவனம் மூடப்பட்டுவிட்டது. தயாரிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. கிரிமினல் வழக்கிற்கான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. சீனியர் மருந்து ஆய்வாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதை நிரந்தரமாக மூடுவது தொடர்பாக 2, 3 நாட்களில் முடிவெடுக்கப்படும்” என்றார்
அதிர்ச்சியளித்த அறிக்கை
ஆனால், தமிழக மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை இது தொடர்பாக அளித்த முதலாவது அறிக்கையில் இருந்த சில வாசகங்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.
அதாவது, ”அக்டோபர் ஒன்றாம் தேதியும் இரண்டாம் தேதியும் விடுமுறை நாளாக இருந்தாலும் பொதுநலனை மனதில் வைத்து மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை நடவடிக்கையில் இறங்கியது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
20 குழந்தைகள் இறந்த ஒரு விவகாரத்தில் பதிலளித்த மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை விடுமுறை நாளிலும் வேலை பார்த்ததாகக் குறிப்பிட்டது தொடர்பாக ஊடகங்கள் விமர்சித்தன.
மேலும், இப்போது சோதனை நடத்தி 300க்கும் மேற்பட்ட விதிமீறல்களைக் கண்டுபிடித்திருக்கும் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை இத்தனை நாட்களாக என்ன செய்தது என்ற கேள்வியும் எழுந்தது.
இதில் பல்வேறு அம்சங்களைக் கவனிக்க வேண்டும் என்கிறார் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையின் முன்னாள் இயக்குநர் கே. சிவபாலன்.
“மருந்து உற்பத்தித் துறையைக் கட்டுப்படுத்த மாநில அரசின் சட்டமும் இருக்கிறது, மத்திய அரசின் சட்டமும் இருக்கிறது. மருந்து உற்பத்திக்கான உரிமங்களைப் பொறுத்தவரை 60 சதவீத மருந்துகளுக்கான உரிமங்களை மாநில அரசே தருகிறது. 20 சதவீத மருந்துகளுக்கான உரிமங்களுக்கு இரு அரசுகளிடமும் உரிமம் பெற வேண்டும்.” என்கிறார் அவர்.
“20 சதவீத மருந்துகள் அதாவது, தடுப்பூசிகள், புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகள் போன்றவற்றுக்கு மத்திய அரசு மட்டுமே உரிமங்களை வழங்கும். ஒரு மருந்து நிறுவனம் செயல்பட ஆரம்பித்த பிறகு மாநில அரசின் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையும், மத்திய அரசின் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையும் சேர்ந்தோ தனித்தோ சோதனைகளை வருடத்திற்கு ஒரு முறையோ இரு முறையோ மேற்கொள்வார்கள்” என்கிறார் கே. சிவபாலன்.
இந்தச் சோதனைகளின்போது தொழிற்சாலையின் தரம், அங்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் – தண்ணீர், சர்க்கரையில் துவங்கி அனைத்தும் சோதனையிடப்படும். அதேபோல, தயாராகும் மருந்துகளின் மாதிரிகளும் எடுத்துச்செல்லப்பட்டு சோதனை செய்யப்படும் என்கிறார் அவர்.
“ஆனால், தமிழ்நாட்டில் 600க்கும் மேற்பட்ட மருந்து உற்பத்தி நிறுவனங்கள் இருக்கின்றன. பல நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான மருந்துகளைத் தயாரிக்கின்றன. ஒரு ஆய்வாளர் சோதனைக்குச் செல்லும்போது பத்து மாதிரிகளைத்தான் சேகரித்து, சோதனைக்கு அனுப்புவார். ஆகவே, எல்லா நிறுவனங்களிலும் எல்லா மருந்துகளையும் சோதனை செய்வது நடைமுறையில் சாத்தியமில்லை. எனவே, மருந்துகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டியது அந்தந்த மருந்து நிறுவனங்களின் கடமை” என்கிறார் கே. சிவபாலன்.
பட மூலாதாரம், Getty Images
டைஎத்திலீன் க்ளைக்கால் ஆபத்தா?
இந்த மருந்தின் தயாரிப்பு மற்றும் விநியோகச் சங்கிலியின் ஒவ்வொரு கட்டத்திலும் தவறு நேர்ந்திருக்கலாம் என்கிறார் இந்திய மருந்து உற்பத்தியாளர் சங்கத்தின் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலப் பிரிவின் தலைவரான ஜே. ஜெயசீலன்.
“மருந்து உற்பத்தித் துறையில் ப்ரோப்பலீன் க்ளைகால் என்பது பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒரு வகை மருந்துகளைத் தயாரிக்க பயன்படுத்தப்படுவது. இரண்டாவது வகை பெயிண்ட் போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுவது.” என்றார் ஜெயசீலன்.
மேலும் “இருமல் மருந்துகளில் Paracetamol, Phenylephrine Hydrochloride, Chlorpheniramine Maleate ஆகிய மருந்துப் பொருட்கள் இருக்கும். இதில் பாராசிட்டமாலைக் கரைப்பதற்கான கரைப்பானாக இந்த ப்ரோப்பலீன் க்ளைக்கால் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக மருந்து நிறுவனங்கள் தங்களுக்கான மூலப் பொருட்களை ஒரே இடத்தில் இருந்துதான் கொள்முதல் செய்வார்கள்.
ஒவ்வொரு மூலப்பொருளும் வரும்போதும் அவற்றை பரிசோதனை செய்துதான் தயாரிப்பில் பயன்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை மருந்துத் தயாரிப்பு நிறுவனம் பரிசோதிக்காமல் பயன்படுத்தியிருக்கலாம்.” எனக் கூறினார் அவர்.
“பொதுவாக, மருந்தைத் தயாரித்து முடிந்த பிறகு, விற்பனைக்கு அனுப்புவதற்கு முன்பாக பரிசோதனை செய்திருக்க வேண்டும். அடுத்ததாக, தமிழ்நாடு அரசு இதுபோன்ற மருந்துகளை வாங்கும்போது அவற்றைப் பரிசோதித்துத்தான் வாங்குவார்கள். ஆனால், மத்தியப் பிரதேச அரசு இதனை பரிசோதித்ததா என்பது தெரியவில்லை. இந்த விநியோகச் சங்கிலியில் ஏதாவது ஒரு இடத்தில் சோதனை நடந்திருந்தால், இதனைத் தடுத்திருக்கலாம்” என்கிறார் ஜெயசீலன்.
தீர்வு என்ன?
இதில் நிறுவனத்தின் உரிமையாளர் தவிர, அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள், ப்ரோப்பலீன் க்ளைக்காலை சப்ளை செய்த நிறுவனம் ஆகியவையும் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார் ஜே. ஜெயசீலன்.
ப்ரோபலீன் க்ளைக்கால் என்பது பெட்ரோலியத்தைச் சுத்திகரிக்கும்போது கிடைக்கும் ஒரு வேதிப்பொருள். இதில், 0.1 சதவீதத்திற்கு மேல் டைஎத்திலீன் க்ளைக்கால் இருக்கக்கூடாது. கோல்ட்ரீஃப் மருந்தில் 48.6 சதவீதம் அளவுக்கு டைஎத்திலீன் க்ளைக்கால் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.
இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க ஒரு யோசனையைச் சொல்கிறார் ஜே. ஜெயசீலன்.
“ஒரு முறை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இருமல் மருந்தினால் வேறொரு நாட்டில் மரணங்கள் நிகழ்ந்தன. இதையடுத்து மத்திய அரசு ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டுவந்தது. அதாவது, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகள் அனைத்தும் மத்திய அரசின் சோதனைச் சாலையில் பரிசோதிக்கப்பட்ட பிறகே ஏற்றுமதிக்கு அனுப்பப்படும். அதேபோல, தமிழ்நாடு அரசும் ஒரு விதியை உருவாக்கலாம்” என்கிறார்.
ஆனால், குழந்தைகளுக்குக் கொடுக்கக்கூடிய மருந்தை இதுபோன்ற ஒரு தொழிற்சாலையில் தயாரிக்க முடியுமா?
“மிகப் பெரிய மருந்து நிறுவனங்களின் தொழிற்சாலைகள்தான் பிரமாண்டமானதாக இருக்கும். மற்றவை இதுபோல சிறிய இடங்களில்தான் இயங்கிவரும். குறிப்பாக Syrup போன்றவை இதுபோன்ற சிறிய தொழிற்சாலைகளில்தான் தயாராகும். ஆனால், அந்தத் தொழிற்சாலைகள் சுகாதாரமாக இருக்க வேண்டும்” என்கிறார் ஜெயசீலன்.
இதற்கிடையில் மத்திய மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்தில் உள்ள இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியலை அளிக்க வேண்டுமெனக் கோரியிருக்கிறது.
இந்த நிறுவனங்களில் இணைந்து சோதனைகளை நடத்தவும் திட்டமிட்டிருக்கிறது. கோல்ட்ரிஃப் மருந்து விவகாரத்திற்குப் பிறகு நடந்த சோதனைகளில் ரெஸ்பிஃப்ரஷ், ரீலைப் ஆகிய மருந்துகளிலும் டைஎத்திலீன் க்ளைக்கால் நச்சு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு