- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
-
காஞ்சிபுரத்தில் சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராக 25 நாள்களைக் கடந்தும் 900க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
“இந்திய அரசின் சட்டங்களை சாம்சங் இந்தியா நிறுவனம் மதிக்காததுதான் பிரச்னை நீடிக்க காரணம்” எனக் கூறுகின்றனர் தொழிலாளர்கள்.
ஆனால், ஊதியம், பணிச்சூழல், சலுகை என தொழிலாளர் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்குத் தயாராக உள்ளதாகக் கூறுகிறது, சாம்சங் இந்தியா நிறுவனம்.
சாம்சங் இந்தியா நிறுவனத்துடன் ஐந்து முறை அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது ஏன்? தொழிலாளர்களின் போராட்டம் தொடர்வது ஏன்?
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் சாம்சங் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்துக்கு இந்தியாவில் நொய்டாவிலும் காஞ்சிபுரத்திலும் ஆலைகள் உள்ளன.
காஞ்சிபுரத்தில் உள்ள சாம்சங் இந்தியா நிறுவனத்தில் சுமார் 1800க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
வாஷிங் மெஷின், குளிர்பதனப் பெட்டி, தொலைக்காட்சி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை சாம்சங் இந்தியா நிறுவனம் தயாரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம், இந்நிறுவனத்தில் சி.ஐ.டி.யு (இந்திய தொழிற்சங்க மையம்) சார்பில் சங்கம் ஒன்றைத் தொடங்குவதற்கு தொழிலாளர்கள் முடிவு செய்தனர்.
இதற்கு சாம்சங் இந்தியா நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இதை எதிர்த்து தொழிற்சாலையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள எச்சூர் என்ற இடத்தில் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி முதல் நடந்து வரும் போராட்டத்தால், சாம்சங் இந்தியா நிறுவனத்தில் சுமார் 60 சதவீதம் அளவுக்கு மட்டுமே உற்பத்தி நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டது.
பேச்சுவார்த்தையில் தொடர் தோல்வி
ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை, சாம்சங் இந்தியா நிறுவனம் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் துறையின் உயர் அதிகாரிகள் அடுத்தடுத்து ஐந்து முறை பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்னை முடிவுக்கு வரவில்லை.
“வேலை நிறுத்தம் நீடிக்கக் காரணம், இந்திய நாட்டின் சட்டங்களை சாம்சங் இந்தியா நிறுவனம் மதிக்காததுதான்,” என்கிறார் சாம்சங் இந்தியா தொழிற்சாலையின் தொழிற்சங்க (சி.ஐ.டி.யு) தலைவர் முத்துக்குமார். “அவர்களின் பிடிவாதத்துக்கு தமிழக அரசும் ஆதரவு கொடுப்பதாக” அவர் தெரிவிக்கிறார்.
‘சங்கம்’ என்ற வார்த்தைக்கு எதிர்ப்பு
“இரு தரப்பும் சுமூக உடன்பாட்டுக்கு வருவதற்கு பேச்சுவார்த்தை முக்கியம். அதற்கு சாம்சங் இந்தியா நிறுவனம் உடன்பட மறுக்கிறது” என்கிறார் முத்துக்குமார்.
சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிரான போராட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதில், இரண்டு வழக்குகளை சாம்சங் இந்தியா நிறுவனம் தொடர்ந்துள்ளது. ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திலும் மற்றொரு வழக்கு காஞ்சிபுரம் கூடுதல் நீதிமன்றத்திலும் தொடரப்பட்டுள்ளது.
தொழிற்சங்க பதிவு தொடர்பாக சி.ஐ.டி.யு தரப்பில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதைப் பற்றி பிபிசி தமிழிடம் பேசிய முத்துக்குமார், “முதல் இரண்டு வழக்குகளில் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை எதிர்த்தரப்பாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எங்கள் வழக்கிலும் ‘சங்கம்’ என்றே கூறியுள்ளது. ஆனால், பேச்சுவார்த்தையில் ‘சங்கம்’ என்ற வார்த்தையை ஏற்கவே மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளனர்” என்கிறார்.
“இந்திய அரசின் தொழிலாளர் நல சட்டங்களை அரசுத்துறை முன்னிலையிலேயே சாம்சங் இந்தியா நிறுவனம் மறுக்கிறது. இதனால் தொழில் அமைதி சீர்குலைவதாக” குற்றம் சாட்டுகிறார் முத்துக்குமார்.
‘எட்டு நாள் சம்பளம் தர மறுப்பு’
சாம்சங் இந்தியாவில் தற்போது 60 சதவீதம் அளவு உற்பத்தி நடப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளதாகக் கூறும் முத்துக்குமார், “75 சதவீத தொழிலாளர்கள் வெளியில் உள்ளனர். அதையும் மீறி உற்பத்தி நடப்பது சட்ட விரோதம்” என்றார்.
“கொரியாவில் உள்ள சாம்சங் நிறுவனத்திலும் இதையேதான் செய்தார்கள். அவர்கள் நாட்டில் சட்டத்தை மீறுவது அவர்கள் விருப்பம். இந்தியா போன்ற நாட்டில் சட்டங்களை மீறுவது சரியல்ல” என்கிறார்.
சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராக செப்டம்பர் 9ஆம் தேதி முதல் பணி புறக்கணிப்புப் போராட்டம் தொடங்கியது. அதற்கு முன்னதாக, செப்டம்பர் 1 முதல் 8ஆம் தேதி வரையிலான சம்பளத்தைத் தர நிர்வாகம் மறுத்துவிட்டதாகக் கூறுகிறார், முத்துக்குமார்.
இதற்கிடையில், கடந்த 1ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் பேரணி நடத்தியுள்ளனர். இவர்களில் 900க்கும் மேற்பட்டோரை விஷ்ணுகாஞ்சி போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று உண்ணாவிரத போராட்டத்தையும் சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் நடத்தியுள்ளனர்.
தொழிற்சங்க சட்டம் சொல்வது என்ன?
இந்திய அரசின் சட்டங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் மீற முடியுமா என்று மூத்த வழக்கறிஞர் சத்தியசந்திரனிடம் பிபிசி தமிழ் பேசியபோது, “தொழிற்சாலையில் சங்கம் தொடங்குவது என்பது அரசியல் அமைப்புச் சட்டம் 19(1)(c)இன்படி அடிப்படை உரிமைகளில் ஒன்று,” எனத் தெரிவித்தார்.
“இந்திய தொழிற்சங்க சட்டம் 1926இன்படி, தொழிற்சாலையில் ஏழு பேர் இருந்தால் சங்கத்தைப் பதிவு செய்யலாம். தலைவர், செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் எனப் பதவிகளை உருவாக்க வேண்டும். சங்கத்துக்கான துணை விதிகளையும் ஏற்படுத்த வேண்டும்,” என்று விளக்கினார் சத்தியசந்திரன்.
“ஆலைகளில் சங்கத்தைத் தொடங்குவது பிரச்னை இல்லை. ஆனால், புதுப்பிக்கும்போது மொத்த தொழிலாளர்களில் 10 சதவீதம் இருக்க வேண்டும் என்று விதி சொல்கிறது” என்கிறார் சத்தியசந்திரன்.
“இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் நாட்டின் சட்டங்கள் பொருந்தும்” எனக் கூறும் சத்தியசந்திரன், “சட்டம் தெளிவாக இருப்பதால்தான் சாம்சங் இந்தியா உடனான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது” என்கிறார்.
“ஆலையில் சங்கம் தொடங்குவதற்கு அரசின் தொழிற்சங்கப் பதிவாளரிடம் கடிதம் கொடுக்க வேண்டும். அதன்பேரில 45 நாட்களுக்குள் அனுமதி கொடுக்க வேண்டும் என்பது விதி. ஆனால், அவ்வளவு எளிதில் அனுமதி கிடைப்பதில்லை” என்கிறார், சி.ஐ.டி.யு மாநில துணைப் பொதுச்செயலர் எஸ்.கண்ணன்.
சங்கத்தின் பெயரில் ‘சாம்சங்’ என்ற பெயரை வைத்திருப்பதற்கு அந்நிறுவனம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் ஆனால் கொரியாவில் ‘நேஷனல் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் எம்ப்ளாயீஸ் யூனியன்’ என்ற பெயரில்தான் சங்கம் செயல்படுவதாகவும் கூறுகிறார், எஸ்.கண்ணன்.
“தீபாவளி, கிறிஸ்துமஸ் என அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ளன. வீட்டு உபயோகப் பொருள்களின் விற்பனையும் அதிகரிக்கும். இந்தச் சூழலில் தொழிலாளர்களின் கோரிக்கையை சாம்சங் ஏற்க மறுப்பது சரியல்ல” என்கிறார் எஸ்.கண்ணன்.
காஞ்சிபுரத்தில் ‘சாம்சங்’ மட்டும் தான் பிரச்னையா?
சாம்சங் இந்தியா நிறுவனத்தைப் போலவே, காஞ்சிபுரத்தில் சில நிறுவனங்களில் யூனியன் தொடங்குவதில் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறுகிறார், எஸ்.கண்ணன்.
“யமஹா, ஜே.கே.டயர்ஸ், அப்போலோ டயர்ஸ் உள்பட 30க்கும் மேற்பட்ட பெருநிறுவனங்கள் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தை அங்கீகரித்துள்ளன” என்கிறார் எஸ்.கண்ணன்.
யமஹா நிறுவனத்தில் 55 நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்த பிறகே சங்கம் தொடங்க அனுமதி கிடைத்ததாகக் கூறும் எஸ்.கண்ணன், “இப்போது வரை யமஹா நிறுவனத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. சங்கம் சுமூகமாகச் செயல்படுகிறது” என்கிறார்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சரின் பதில்
சாம்சங் இந்தியா தொழிலாளர் போராட்டம் குறித்து, தொழிலாளர் நலத்துறையின் காஞ்சிபுரம் மாவட்ட துணை ஆணையர் கமலக்கண்ணனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
“கடந்த 27ஆம் தேதி இரு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தது. வரும் 7ஆம் தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. அதன் பின்னரே நிலவரம் தெரிய வரும்” என்றார்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசியபோது, “சட்டத்தை மதிக்காமல் எந்த நிறுவனமும் இருக்க முடியாது. அனைவரும் சட்டத்தை மதிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கும் நிறுவனத்துக்கும் இடையில் சுமூகமான தீர்வைக் கொடுப்பதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறோம்” என்கிறார்.
சாம்சங் நிறுவனத்துக்கு சாதகமாக அரசு செயல்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுக்கும் சி.வி.கணேசன், “துறையின் பெயரே தொழிலாளர் நலத்துறையாக உள்ளபோது, நிர்வாகத்துக்கு சாதகமாக எப்படிச் செயல்பட முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.
வெளிநாட்டு நிறுவனங்களைக் கொண்டு வரும் முயற்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் தீவிர கவனம் செலுத்தி வருவதாகக் கூறும் அமைச்சர் சி.வி.கணேசன், “நிறுவனங்களையும் வளர்க்க வேண்டும். அதேநேரம், தொழிலாளர்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இரு தரப்புக்கும் எந்த பாதகமும் இல்லாமல் விரைவில் சுமூக தீர்வை ஏற்படுத்துவோம்” என்றார்.
“போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டியது தொழிலாளர்களின் கைகளில்தான் உள்ளது” என்கிறார், காஞ்சிபுரத்தில் உள்ள சாம்சங் இந்தியா நிறுவனத்தின் பொதுமேலாளர் பார்த்திபன்.
“இதுதொடர்பாக, சாம்சங் இந்தியா தலைமையகத்துக்கு உங்கள் கேள்விகளை அனுப்பி பதில் பெறலாம்” எனவும் பார்த்திபன் கூறினார்.
இதையடுத்து, தொழிலாளர்கள் முன்வைக்கும் குற்றற்சாட்டுகள் தொடர்பாக சாம்சங் இந்தியா நிறுவனத்தின் இ-மெயில் முகவரிக்கு பிபிசி தமிழ் சார்பில் கேள்விகளை அனுப்பினோம்.
சாம்சங் இந்தியா சொல்வது என்ன?
இதற்கு சாம்சங் இந்தியா நிறுவனத்தின் ‘செய்தித் தொடர்பாளர்’ விரிவான விளக்கத்தை அனுப்பியுள்ளார்.
இந்திய சட்டங்களை மீறுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ள சாம்சங் இந்தியா நிறுவனம், “ஊழியர்களின் நலனே எங்களுக்குப் பிரதானமாக உள்ளது. இந்தியாவின் அனைத்து சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்கிச் செயல்படுகிறோம் என்பதை மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.
“சென்னையில் உள்ள சாம்சங் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் மாத சம்பளம் என்பது மற்ற நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தைவிட 1.8 மடங்கு அதிகம்” எனக் குறிப்பிடுகிறார், சாம்சங் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்.
கூடுதல் நேரம் பணிபுரிவதற்கான ஊதியம், இரவுநேர பேருந்து வசதி, உணவு, சுகாதாரம், பணியிடப் பாதுகாப்பு, ஊழியர் நலன் ஆகியவற்றில் உயர்ந்த தரத்தைக் கொடுத்து வருவதாகவும் பிபிசி தமிழுக்கு அனுப்பிய விளக்கத்தில் சாம்சங் இந்தியா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
“இது அந்த மண்டலத்தில் உள்ள மற்ற உற்பத்தியாளர்களுடன் ஒப்பிடும்போது மிக உயர்ந்த தரத்தில் உள்ளது எனத் தாங்கள் நம்புவதாக” சாம்சங் இந்தியா கூறுகிறது.
“சாம்சங் இந்தியாவில் ஊழியர்களின் சராசரி பதவிக்காலம் என்பது 10 ஆண்டுகளாக உள்ளது எனவும் அவர்களின் பணி திருப்திக்கு இதுவே சான்று” எனவும் சாம்சங் இந்தியா ஊடக தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
‘தீர்வு காண்பதில் உறுதியாக இருக்கிறோம்’ – சாம்சங் இந்தியா
செப்டம்பர் மாதம் 8 நாள்களுக்கான பணி ஊதியத்தைத் தர மறுப்பது குறித்த கேள்விக்கு, “வேலை இல்லை, ஊதியம் இல்லை என்ற கொள்கையின்படி, சட்டவிரோத வேலைநிறுத்த காலத்திற்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்பதை தொழிலாளர்களிடம் தெரிவித்து விட்டோம்” என சாம்சங் இந்தியா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உற்பத்தி பாதிப்பு குறித்த கேள்விக்கு, “சென்னை தொழிற்சாலையில் உற்பத்தி சீராக நடந்து வருகிறது. பண்டிகை காலத்தை முன்னிட்டு நுகர்வோருக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறோம்” எனக் கூறியுள்ளர்.
ஊதியம், சலுகைகள், பணிச்சூழல் உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளையும் நேரடியாக தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதில் உறுதியாக உள்ளதாகக் கூறும் சாம்சங் இந்தியா செய்தித் தொடர்பாளர், “சட்டவிரோத வேலைநிறுத்தத்தில் இருந்து வேலைக்குத் திரும்புமாறு தொழிலாளர்களிடம் நாங்கள் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்” எனவும் சாம்சங் இந்தியா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால், எந்த இடத்திலும் சங்கம் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணத்தை சாம்சங் இந்தியா நிறுவனம் கூறவில்லை.
சாம்சங் இந்தியாவின் விளக்கத்தில் மாறுபட்ட கருத்துகள் இருப்பதாகக் கூறுகிறார், சாம்சங் இந்தியா தொழிற்சங்க தலைவர் (சி.ஐ.டி.யு) முத்துக்குமார்.
“வேறொரு நிறுவனத்தைவிட அதிக சம்பளம் கொடுப்பதாகக் கூறுவது உண்மையல்ல. காஞ்சிபுரத்தில் 1800 ஊழியர்களுக்கான சராசரி சம்பளம் என்பது 32 ஆயிரமாக உள்ளது. இது இங்குள்ள மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு” என்கிறார் முத்துக்குமார்.
“சம்பளம் அதிகம் எனக் கூறும் சாம்சங் இந்தியா நிர்வாகம், பொருள் உற்பத்தியில் சம்பளத்தின் சதவீதம் எவ்வளவு என்பதை வெளிப்படையாக வெளியிடுமா?” எனவும் முத்துக்குமார் கேள்வி எழுப்பினார்.
“காஞ்சிபுரம் சாம்சங் இந்தியாவில் ஆண்டு சம்பள உயர்வு என்பது 10% அளவுகூட இல்லை. கொரியாவில் தொழிலாளியின் சம்பளம் என்பது லட்சக்கணக்கில் உள்ளது. இந்தியாவில் மலிவு சம்பளத்தில் தொழிலாளர்களை சாம்சங் பயன்படுத்திக் கொள்வதாக” கூறுகிறார் முத்துக்குமார்.
இந்த விவகாரத்தில் இரு தரப்பிலும் சுமூக உடன்பாடு எட்டப்படாததால், வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்கிறது. “அடுத்தகட்டமாக, இதர தொழிற்சாலை பணியாளர்களையும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்திருக்கிறோம்” எனக் கூறும் முத்துக்குமார்.
“எந்த உரிமைக்காக தொழிலாளர்கள் போராடுகிறார்களோ அது அனைவருக்கும் பொதுவானது. இப்போது குரல் கொடுக்காவிட்டால் நாளை அவர்களுக்கும் பிரச்னை வரலாம்” என்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு