திரைப்படங்களில் ரசிகர்களின் ஃபேவரைட் ஜோடியாக வலம் வந்த விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடி, நீண்டகாலக் கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து நேற்று வியாழக்கிழமை (26) உத்தியோகபூர்வமாகத் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் உள்ள ஐடிசி மெமென்டோஸ் (ITC Mementos) ஆடம்பர ஹோட்டலில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் மிக விமரிசையாக நடைபெற்றது. இத்திருமணம் இரு மாநில கலாசாரங்களின்படி இரண்டு முறை நடைபெற்றது.
விஜய் தேவரகொண்டா ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பதால், காலை 10:10 மணிக்கு தெலுங்கு பாரம்பரிய முறைப்படியும், ராஷ்மிகா கர்நாடகாவின் குடகு பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், மாலை 4:30 மணிக்கு அவரது குடும்ப முறைப்படி ‘கொடவா’ பாரம்பரியப்படியும் திருமணச் சடங்குகள் இடம்பெற்றன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், மணமக்களுக்குக் கடிதம் மூலம் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு தனது சமூக வலைதளப் பக்கத்தில் திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள விஜய் தேவரகொண்டா, நெகிழ்ச்சியான பதிவு ஒன்றையும் இட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
“ஒரு நாள் அவளைத் தேடினேன் (Miss பண்ணினேன்). அவள் என்னுடன் இருந்திருந்தால் என் பொழுதுகள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று தோன்றியது. அவள் எனக்கு எதிரே அமர்ந்திருந்தால், நான் உண்ணும் உணவு இன்னும் முழுமையாகவும், திருப்தியாகவும் இருந்திருக்கும். அவள் என்னுடன் இருந்தால், என் பயிற்சிகள் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். நான் எங்கே இருந்தாலும், அந்த ‘வீடு’ போன்ற உணர்வையும், அமைதியையும் உணர அவள் எனக்குத் தேவைப்பட்டாள். அதனால், என் உயிர்த் தோழியை… என் மனைவியாக்கிக் கொண்டேன்.”
ரசிகர்களால் ‘விரோஷ்’ (ViRoosh) என்று அன்போடு அழைக்கப்படும் இந்த ஜோடியின் திருமணப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பலரும் இத்தம்பதியினருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
The post காதல் ‘கீதா கோவிந்தம்’ திருமணத்தில் முடிந்தது | ராஷ்மிகாவின் கரம் பிடித்தார் விஜய் தேவரகொண்டா! appeared first on Vanakkam London.