கான்பூரில் இன்று (திங்கள், செப்டம்பர் 30) இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கும் இடையே நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியைக் கண்ட ரசிகர்கள், நடப்பது டெஸ்ட் போட்டியா அல்லது டி20 போட்டியா என்று குழம்பியிருக்கலாம்.
ஏனென்றால், இந்திய பேட்ஸ்மேன்கள் ரோகித், ஜெய்ஸ்வால், கில், ராகுல், கோலி என அனைவரும் வங்கதேசத்தின் பந்துவீச்சை சிக்ஸர், பவுண்டரி எனப் பறக்கவிட்டு டி20 போட்டியைப் போல் பேட் செய்தனர்.
டெஸ்ட் போட்டிக்கென இருக்கும் தாத்பரியத்தை உடைத்து, தொடக்கத்திலிருந்தே இந்திய பேட்டர்கள் வங்கதேசப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை நொறுக்கி, ரன்களைக் அள்ளிக் குவித்தனர்.
கான்பூரில் முதல் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதிலிருந்து கடந்த 3 நாட்களாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனால் 2-வது டெஸ்ட் எந்தவிதமான முடிவுமின்றி டிராவில் முடியுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எழுந்தது.
ஆனால், கடைசி இரு நாட்கள்(செப்டம்பர் 30, அக்டோபர் 1) ஆட்டத்தின் வெற்றியை வங்கதேசத்திடமிருந்து பறிக்கும் முயற்சியில் இந்திய அணியினர் வியூகம் அமைத்துச் செயல்பட்டனர்.
ஏற்கெனவே முதல் டெஸ்ட் போட்டியை வென்று 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் எப்படியாவது வெற்றியை எட்ட வேண்டும் என்ற திட்டத்துடன் இந்திய அணியினர் பேட் செய்து வருகிறார்கள்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு குறைந்தபட்சம் 5 டெஸ்ட் வெற்றிகள் தேவைப்படுகிறது.
ஆஸ்திரேலிய பயணம் கடினமாக இருக்கும் என்பதால், வங்கதேசம், நியூசிலாந்திடம் இந்த 5 வெற்றிகளை பெறும் முயற்சியில் இந்திய அணியினர் திட்டமிட்டுள்ளனர்.
இன்றைய 4-வது நாள் ஆட்டமும் சற்று தாமதமாகத் தொடங்கிய நிலையில், வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 74.2 ஓவர்களில் 233 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி அதிகவேகத்தில் ரன்களைக் குவிக்கத் தொடங்கியது. 8 என்ற ரன்ரேட்டில் விளையாடத் தொடங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மின்னல் வேகத்தில் ரன்களைச் சேர்த்தனர். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 34.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணியைவிட 52 ரன்களை இந்திய அணி அதிகமாக குவித்து முன்னிலை வகித்தது.
வங்கதேச அணி, 52 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடி இன்றைய 4வது நாள் ஆட்டநேர முடிவில் 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் சேர்த்திருந்தது. இன்னும் வங்கதேச அணி 26 ரன்கள் பின்தங்கியுள்ளது.
ஒரே நாளில் 18 விக்கெட்டுகள்
இன்று ஒரே நாளில் மட்டும் 18 விக்கெட்டுகள் சரிந்துள்ளன. வங்கதேச அணியின் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள், இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் என 18 விக்கெட்டுகள் சரிந்தன.
கடைசி நாள் ஆட்டம் எப்படிச் செல்லும்?
இந்திய அணி இரண்டாவது டெஸ்டில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முயற்சியோடுதான் அதிரடியான பேட்டிங் வியூகத்தைக் கையில் எடுத்தது. நாளை (அக்டோபர் 1) கடைசி நாள் ஆட்டத்தில் வங்கதேச அணியை இரண்டாவது இன்னிங்ஸில் குறைந்த ஓவருக்குள் வீழ்த்த வேண்டும் அல்லது வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் நிர்ணயிக்கும் இலக்கை எட்டி வெல்ல வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது.
இந்திய அணியின் வெற்றியைத் தீர்மானிப்பது வங்கதேசத்தின் பேட்ஸ்மேன்கள் கையில் இருக்கிறது. வங்கதேச அணி ரன்களைப் பற்றிச் சிந்திக்காமல் டிஃபென்ஸ் ஆட்டத்தைக் கையில் எடுத்து விக்கெட் சரியாமல் பார்த்துக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸை நகர்த்தினால், ஆட்டம் டிராவில் முடியும்.
ஒருவேளை வங்கதேசமும் இந்தியப் பந்துவீச்சில் நன்றாக விளையாடி, ரன்களைக் குவிக்க முயன்றால் இந்திய அணி விரித்த வலைக்குள் விழுந்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியைத் தழுவலாம்.
கான்பூர் ஆடுகளம் கடைசி நாளில் சுழற்பந்துவீச்சுக்குக் கூடுதல் சாதகமாக இருக்கும் என்பதால் அஸ்வின், ஜடேஜா ஆகியோரின் பந்துவீச்சு முக்கியத் துருப்புச்சீட்டாக இருக்கும்.
வங்கதேசம் விக்கெட் சரிவு
வங்கதேச அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 35 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. மோமினுள் ஹக் 40, முஸ்பிகுர் ரஹ்மான் 6 ரன்களில் களத்தில் இருந்தனர். மழையால் ரத்து செய்யப்பட்ட ஆட்டம் நான்காவது நாளான இன்று தொடர்ந்தது.
இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பும்ராவின் வேகப்பந்துவீச்சில் முஸ்பிகுர் ரஹிம் 11 ரன்களில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்துவந்த விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் 11 ரன்கள் சேர்த்த நிலையில், சிராஜ் பந்துவீச்சில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
அதன்பின் சீரான இடைவெளியில் வங்கதேச அணி விக்கெட்டைப் பறிகொடுத்தது. விக்கெட் சரிந்தாலும், மோமினுல் ஹக் ரன்களை வேகமாகச் சேர்த்தார். மதிய உணவு இடைவேளையின் போது வங்கதேசம் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது.
உணவு இடைவேளைக்குப்பின் வங்கதேசம் அணி 28 ரன்களுக்குள் மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் இழந்தது. வங்கதேச அணியின் பின்வரிசை பேட்டர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இந்திய அணித் தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், சிராஜ், அஸ்வின், ஆகாஷ் தீப் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர், ஜடேஜா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
அதிரடி துவக்கம்
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் முதல் இன்னிங்ஸை அதிரடியாகத் துவங்கினர். டி20 ஆட்டம் போல் துவக்கத்திலிருந்தே பந்தை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் துரத்தி, வங்கதேசத்தின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர்.
ஜெய்ஸ்வால், ரோகித் இருவரும் பவுண்டரி, சிக்ஸர் என விளாசி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தனர். இந்திய அணி 2.6 ஓவர்களில் 50 ரன்களை எட்டியது. 31 பந்துகளில் ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்தார். ரோகித் சர்மா 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 23 ரன்கள் சேர்த்த நிலையில் மெஹதி ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்துவந்த சுப்மான் கில் (39), ரிஷப் பந்த் (9) ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜெய்ஸ்வால் 51 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து (2 சிக்ஸர், 12 பவுண்டரிகள்) ஹசன் மஹ்மூத் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
கடந்த டெஸ்டில் ஏமாற்றிய கோலி, இந்த ஆட்டத்தில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 47 ரன்கள் சேர்த்து 3 ரன்களில் அரைசதத்தைத் தவறவிட்டார்.
அதிரடியாக பேட் செய்த கே.எல்.ராகுல், 33 பந்துகளில் அரைசதம் அடித்து 68 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரது கணக்கில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்.
இந்திய அணி புதிய சாதனை
இந்திய அணி 10.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டி புதிய சாதனை படைத்தது. டெஸ்ட் போட்டியில் அதிவிரைவாக சதம் அடித்த அணி என்ற புதிய சாதனையை இந்திய அணி இன்று படைத்தது.
இதற்கு முன் கடந்த ஆண்டு மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் 12.2 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை எட்டியதுதான் சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையை இந்த ஆட்டத்தில் இந்திய அணி முந்தி, 2.1 ஓவர்கள் குறைவாக 10.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது.
18.2 ஓவர்களில் 150 ரன்களையும், 24.2 ஓவர்களில் 200 ரன்களையும் எட்டி அதிவேகத்தில் 150 மற்றும் 200 ரன்களைச் சேர்த்த அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றது.
இந்திய அணி 50 ரன்களை எட்டுவதற்கு 3 ஓவர்களே தேவைப்பட்டது. டெஸ்ட் போட்டிகளில் ஆடவர் அணிப் பிரிவில் இந்திய அணி அதிவேகத்தில் 50 ரன்கள் எட்டியுள்ளது. இதற்கு முன் இங்கிலாந்து அணி 4.2 ஓவர்களில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக 4.2 ஓவர்களில் 50 ரன்களை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் இருவரும் சேர்ந்து 23 பந்துகளில் அரைசதம் பார்ட்னர்ஷிப் அடித்தனர்.
ஜடேஜாவின் மைல்கல்
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா 3,000-க்கும் அதிகமான ரன்களையும் 300 டெஸ்ட் விக்கெட்டுகளையும் கைப்பற்றிய 11-வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
இதற்கு முன் அஸ்வின், கபில்தேவ் இருவரும் அந்த சாதனையைச் செய்திருந்தனர். 74 போட்டிகளில் ஜடேஜா இந்தச் சாதனையை நிகழ்த்தி இயான் போத்தம் (72) அடுத்தார்போல் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய 7-வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றார்.
உலகளவில் 300 விக்கெட்டுகளையும், டெஸ்டில் 3,000-க்கும் மேற்பட்ட ரன்களையும் சேர்த்த இரண்டாவது இடதுகை சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் ஜடேஜா பெற்றுள்ளார். இதற்கு முன் நியூசிலாந்து வீரர் டேனியல் வெட்டோரி இந்த மைல்கல்லை அடைந்திருந்தார்.