1
கிரீன்லாந்து தொடர்பான விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளை வர்த்தக வரி மூலம் மிரட்டி அடிபணிய வைக்க முடியாது என டென்மார்க் பிரதமர் Mette Frederiksen திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டென்மார்க்கின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட கிரீன்லாந்து பகுதியை அமெரிக்காவிடம் ஒப்படைக்க மறுக்கும் எட்டு நட்பு நாடுகளுக்கு எதிராக, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் 10 சதவீத வரி விதிக்கவும், ஜூன் மாதத்தில் அதை 25 சதவீதமாக உயர்த்தவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த நடவடிக்கை, அட்லாண்டிக் கடந்த உறவுகளை பாதிக்கும் ஆபத்தான செயல் எனக் குறிப்பிட்டு, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் பாதுகாப்புக்கு கிரீன்லாந்து மிக முக்கியமானது என ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், ‘கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல’ என அந்நாட்டு மக்கள் பல்வேறு பகுதிகளில் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறவுள்ள World Economic Forum கூட்டத்தில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் நேருக்கு நேர் சந்திக்கவுள்ளனர்.
அங்கு ‘சர்வதேச ஒத்துழைப்பு’ குறித்து ட்ரம்ப் உரையாற்றவுள்ள நிலையில், ஐரோப்ப ஒன்றியும் தனது ‘மிரட்டல் எதிர்ப்பு சட்டத்தை’ (Anti-coercion instrument) பயன்படுத்தத் தயாராகி வருவதால், உலக அரசியல் மற்றும் பொருளாதார அரங்கில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.