• Tue. Sep 9th, 2025

24×7 Live News

Apdin News

கிறிஸ்தியன் சுவார்ட்ஸ்: தென் தமிழகத்தில் கல்விப் புரட்சிக்கு வித்திட்ட இவர் யார்? ஒரு வரலாற்றுப் பார்வை

Byadmin

Sep 9, 2025


கிறிஸ்தியன் சுவார்ட்ஸ்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கா.அ. மணிக்குமார்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டென்மார்க் நாட்டு மன்னர் நான்காம் பிரடெரிக் தனது காலனி ஆதிக்கத்துக்குட்பட்டிருந்த தரங்கம்பாடிக்கு ஜெர்மானிய சமயப் பணியாளர்களான பார்த்தலோமி டீயோ சீகன்பர்க், ஹென்றிலே பூச்சா இருவரையும் அனுப்பி வைத்தார். அங்கு அவர்கள் நிறுவியிருந்த (1706) லுத்தரன் திருச்சபைக்கு 1750ஆம் ஆண்டு வந்த கிறிஸ்தியன் F. சுவார்ட்ஸ், பிரஷ்யாவின் பிராண்டன்பர்க் மாவட்டத்தைச் சேர்ந்த சொனன்பர்க்கில் பிறந்தவர் (1726).

ஹலேயில் ஒரு ஆதரவற்றோர் விடுதியில் தங்கி பயிற்சி முடித்து (1746) டென்மார்க் நாட்டு கோபன்ஹேகனில் பாதிரியாரானார் (1749). அங்கிருந்து தரங்கம்பாடி வந்த சுவார்ட்ஸ் தமிழகத்தின் தென், தென்கிழக்கு மாவட்டப் பகுதிகளில் கிறிஸ்தவம் வேரூன்ற பணியாற்றினார்.

தரங்கம்பாடியில் சமயப்பணி

தரங்கம்பாடியில் சுவார்ட்ஸ் 11 ஆண்டுகள் சேவை செய்தார். அப்போது அவர் தமிழ், போர்ச்சுகீசிய மொழி, ஆங்கிலம் கற்றதோடு உருது, பாரசீக மொழிகளிலும் புலமை பெற்றார். இந்திய மன்னர்கள், கிழக்கிந்திய கம்பெனி சிவில், ராணுவ அதிகாரிகளையும் தனது செயல்பாடுகளால் ஈர்த்தவர்.

1762ஆம் ஆண்டு சுவார்ட்ஸ் திருச்சிராப்பள்ளி சென்றார். ஆற்காட்டு நவாபின் கட்டுப்பாட்டில் இருந்த திருச்சி மலைக்கோட்டையின் நடுவில் 1766ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயம் நவாபுடன் அவருக்கிருந்த செல்வாக்கைக் குறிக்கிறது.

By admin